Sunday, August 29, 2021

தமிழ் என்னும் பௌத்தம் – நூல் அறிமுகம்

 

               தமிழ் நிலப்பரப்பிற்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்நூலில் சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கீழடி ஆய்வு தொடங்கியபோது “கீழடி மனித உருவமும் சாத்துக்கூடல் வீரனாரும்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை இந்நூலில் இடம்பெற்றிருப்பது சிறப்பானதாகும். மேலும், இக்கட்டுரை சென்னை இலயோலா கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

 

                  அம்மன் தெய்வமும் பௌத்த வழிபாட்டு மரபும் என்ற கட்டுரை பண்டிதர் அயோத்திதாசரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் அம்மன் தெய்வ வழிபாடு பௌத்த மரபோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதை கள ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறது. காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நூறாண்டுக்கும் முன்பாக பௌத்தக் கோயில் என்று நிறுவப்பட்டுள்ளது. இதற்கு வலிமை சேர்க்கும் வகையில் மொழியியல் ரீதியாக இக்கோயில் பௌத்தக் கோயில் என்று இவ்வாய்வுக் கட்டுரை நிறுவுகிறது. இக்கட்டுரை தலித் இதழில் வெளியான கட்டுரையாகும்.


                                  

                  தமிழகத்தில் இந்துத்துவ வெளிப்பாட்டுடன் முருகன் தெய்வத்தை முன்னிறுத்தி பா.ஜ.க. வேல் யாத்திரையை நடத்தியது. இச்சூழலில், இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் முருகக் கடவுள் பௌத்தப் பண்பாட்டு மரபைச் சார்ந்தவர் என்பதை பண்டிதர் அயோத்திதாசரின் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “தமிழ்ப் பௌத்தப் பண்பாட்டில் முருகக் கடவுள்” என்ற கட்டுரை மானுடம் இதழில் வெளியானது.

 

                  திருச்சிராப்பள்ளி பெயர் கூறும் பௌத்த வரலாறு என்ற கட்டுரை அவ்வப்பொழுது முகநூலில் எழுதி வந்த சிறுசிறு பதிவுகளைத் தொகுத்து எழுதப்பட்ட கட்டுரையாகும். இவ்வூர்ப் பெயருக்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

                  திருநெல்வேலியின் பண்டைய ஊர்ப்பெயரும் பௌத்த அடையாளமும் என்ற கட்டுரை இவ்வூரின் பண்டைய பெயர் பௌத்தத்தோடு தொடர்புடையது என்பதை விளக்க, பல சான்றுகளை முன்வைத்து சூழல்களையும் விளக்குகிறது.

 

                  பூலோகவியாஸன் இதழும் பௌத்தமும் என்ற கட்டுரை பேரா. ஜெ. பாலசுப்பிரமணியம் அவர்கள் தொகுத்தளித்த இதழ் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய பார்வையுடன் இவ்விதழுக்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. இச்சிறு நூலை வாசிக்கும்போது தமிழ் நிலத்திற்கும் தமிழ் மொழிக்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவைப் புரிந்துகொள்ளலாம்.

 

            (இந்நூலைப் பெறுவதற்கான இணைய இணைப்பு https://bit.ly/Tamil_ennum_Bauddham )

 

நூலாசிரியர்

இ. ஜெயபிரகாஷ்

Email: writerjayaprakash@gmail.com

 

                 

 

No comments:

Post a Comment