Friday, January 24, 2020

பௌத்த அய்யப்பன்- சில குறிப்புகள்!


1. அப்பனே! புத்தரச்சனே!! அய்யனே!!!
************** **************** ***************


அப்பா, அச்சன், அய்யன் ஆகிய மூன்று சொற்களும் பௌத்த வாழ்வியல் மரபில் ஒரே நேர்க்கோட்டில் இயங்குவதாக அறிகிறேன்.

பாலி மொழிச் சொல்லான அச்சன் தமிழ் விகுதி பெற்று ஒலிக்கிறது. இச்சொல் அம்மொழியில் புத்தரையோ அல்லது பௌத்த குருமார்களையோ குறிக்கும் என்று P.C. அலெக்ஸாண்டர் குறிப்பிடுகிறார். இன்றளவும் இச்சொல் கேரளாவில் வழக்கிலுள்ள சொல்லாகும். இச்சொல்லைக் கேரளாவில் இந்துக்கள் தந்தையைக் குறிப்பதற்கும் கிறித்தவர்கள் தங்கள் மதகுருமார்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்று அலெக்ஸாண்டர் குறிப்பிடுகிறார். பௌத்தத்தில் மதகுருமார்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட அதே பொருளில் கிறித்தவர்கள் பயன்படுத்துவதை அறியலாம். இது பௌத்தத்தின் தாக்கம் என்பதைக் கடந்து அவர்கள் பூர்வீகமாக பௌத்தத்திலிருந்து கிறித்தவத்திற்கு மாறியிருக்கலாம் என்று அனுமானிப்பதற்கும் வழிவகுக்கிறது.

உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என இவ்விரண்டில் தமிழ் உடனிலை மெய்ம்மயக்கச் சொற்களை அதிகமாக கொண்டதாகும். இந்த அடிப்படையில் தமிழை பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளோடு ஒப்பிடும்போது அது சமஸ்கிருதத்திலிருந்து பெரிதும் வேறுபட்டு பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளோடு பெரிதும் ஒன்றுபட்டும் காணப்படுகிறது. இந்த அடிப்படையில் அகரத்தில் தொடங்கும் அப்பன், அச்சன், அய்யன் ஆகிய சொற்களில் முறையே ப்ப், ச்ச், ய்ய் உடனிலை மெய்ம்மயக்கம் அமைவதைக் காணலாம். அச்சன் என்ற சொல்லுக்கு இணையாக அப்பன், அய்யன் ஆகிய தமிழ்ச் சொற்கள் செயலுறுகின்றன. வடிவத்தில் சிறிது மாற்றம் இருந்தாலும் பொருண்மையில் இச்சொற்கள் ஒத்து இயங்குகின்றன.

இவ்வாறு இச்சொற்கள் உடனிலை மெய்ம்மயக்கத்தில் அமைய அச்சன் என்ற சொல்லின் சமஸ்கிருத வடிவமான அர்ச்சகர் என்ற சொல்லில் ர்ச் என்னும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திலும் அமைவதைக் காண்பதிலிருந்து தமிழுக்கும் பாலிக்கும் உள்ள நெருங்கிய தன்மையையும் அதிலிருந்து சமஸ்கிருதம் வேறுபடுவதையும் அறியலாம்.

புத்தரைக் குறிக்கும் அச்சன் என்ற சொல் கேரளாவில் இந்துக்களால் தந்தையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது என்று அலெக்ஸாண்டர் கூறியதை நினைவில் கொண்டால் தமிழகத்தில் தந்தையைக் குறிக்கும் அப்பா என்ற சொல் புத்தரைக் குறிக்க முனியப்பா என்று குறிக்க பயன்படுத்தப்படுவதை இணைத்துப் பார்க்கலாம். இதே போல அய்யன் என்ற சொல்லும் தந்தையையும் புத்தரையும் கா ல அய்யன், அய்யனார் என்று இடம்பெறுவதையும் அறியலாம். இச்சொற்கள் மதகுருமார்கள், புத்தர், தந்தை ஆகிய பொருளை பாலி, பண்டைய தமிழ்ப்பௌத்தம்(தமிழ்நாடு, கேரளா) ஆகிய சூழலில் ஒரே மாதிரியாக இயங்கினாலும் இவற்றின் வேர்ச்சொல் பண்டைய தமிழிலிருந்தே தோன்றுகிறது எனலாம். அய்யன் என்பதன் வேர்ச்சொல் அய், ஐ என்பனவாகும். ஐ என்பது பண்டைய தமிழ் இலக்கிய அகச்சூழலில் தலைவனைக் குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் பௌத்த சமயச் சூழலில் சமூகத் தலைவன் என்ற பொருள்படவே இயங்குகிறது.

அச்சன் என்ற சொல் கிறித்தவம், இந்து ஆகிய மதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதன் பொருண்மை பரந்து விரிந்த அளவில் பௌத்தத்தில் இடம்பெற்றுள்ளது. இது மேலும் விரிவடைந்து புத்தரின் தலத்தைக் குறிக்க அச்சன் கோவில் என்று பயன்படுத்தப்படுகிறது.

இங்கு கேரளா சாஸ்தா அய்யப்பனைக் குறிக்க அச்சன் என்ற சொல் இன்றும் அய்யப்பன் பாடல்களில் பயன்படுத்துவதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இதற்கு "அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா" என்னும் வரி உதாரணமாகும். இது கேரள சாஸ்தா அய்யப்பன் புத்தர் என்பதைக் குறிக்கும் மிக முக்கியமான சொல் ஆவணமாகும்.

முனியப்பனும் அய்யனாரும் புத்தரச்சனும் ஒன்று என்பதை அவற்றின் சொற்பொருண்மைகளிலிருந்து அறியலாம்.

2. பௌத்த அய்யனார் மரபில் தானதைய்யன்
**************************  ********  ******************

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இளவரசனார் கோட்டைக்கு மிக அருகாமையில் உள்ள புகைப்பட்டி என்னும் ஊரில் உள்ள அய்யனார் "தானதைய்யன்" என்றே அழைக்கப்படுகிறார். இச்சொல் தமிழ்ப்பௌத்தத்தில் மிகவும் முக்கியமான ஒரு சொல்லாடலாகவே பார்க்கிறேன்.

அய்யன் ஆகிய புத்தர் துறவறத்தை மேற்கொண்டு தானம் பெற்று உண்டு வந்தார் என்பதை பௌத்த நூல்களின் வாயிலாக அறிகிறோம். தானதைய்யன் என்பதை தானம் பெற்று வந்த அய்யன் என்று பொருள்கொள்ளலாம். புத்தர் தானம் பெற்று அல்லது பிச்சை எடுத்து வந்ததாலேயே தமிழ்ப்பௌத்த மரபில் அதன் நினைவாக பிச்சை, பிச்சையன், பிச்சை மூர்த்தி, பிச்சைப் பிள்ளை, பிச்சையாண்டி என பெயர் வைக்கும் மரபு இருந்து வந்திருக்கிறது என்கிற வலுவான கருத்துண்டு. இதனால் தானதைய்யன் என்பது இந்திய பௌத்த மரபிலும் தமிழ்ப் பௌத்த மரபிலும் மிக முக்கியமான சொல்லாடலாக இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகும்.

மேலும், பௌத்த மரபில் பசி ஒழிப்பு, நோய் ஒழிப்பு போன்ற கருத்தாக்கங்கள்
இம்மதத்தின் அடித்தளமாய் அமைந்துள்ளதால் தானதைய்யன் என்பதை தானம் வழங்கும் அய்யன் என்றும் பொருள் கொள்ளலாம்.

இங்கு வழிபடும்போது கோவிந்தா என்று முழங்குவார்களாம். கோவிந்தா என்பதை அரசனாகிய இந்திரன் என்று பொருள் கொள்ளலாம். புத்தர் இளவரசானாக இருந்தார் என்றும் அவருக்கு இந்திரன் என்கிற ஒரு பெயர் உண்டு என்பதையும் இங்கு நினைவில் கொண்டால், இதை கோவிந்தா என்ற சொல்லோடு பொருத்திப் பார்க்கலாம்.

தானதைய்யன் என்பது அய்யன் புத்தருக்கு வழங்கும் மற்றொரு பெயராக உள்ளதை புகைப்பட்டி ஊரின் மூலம் அறியமுடிகிறது.

3. அறவணப் பாயாசம் அய்யப்பனுக்கே!
*************************** ********************

கேரளாவில் பகவதி அம்மன் என்று அறியப்படும் அனைத்து கோவில்களும் பௌத்த விகார்களாக இருந்தவை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

P.C. அலெக்ஸாண்டர் பௌத்த வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் போன்றவை இன்றும் கேரளாவில் உள்ள இந்துக்கோயில்களில் பின்பற்றப்படுகின்றன என்கிறார். திருவிழாக்களில் தேர் அல்லது இரதம் ஊர்வலம் வருவதே பௌத்த மரபு என்கிறார்.

கேரளாவில் இந்துக் கோயில்களில் உள்ள பௌத்த வழிபாட்டு முறை, திருவிழாக்கள் போன்றவற்றை உறுதி செய்ய அவர் சீன யாத்ரீகர் பாஹியான் அவர்களின் துணையை நாடுகிறார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் தான் நேரில் கண்ட பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற பௌத்தத் தேர் திருவிழாவைப் பற்றி விவரித்ததை அடிப்படையாக எடுத்துக்கொண்டு அலெக்ஸாண்டர் கேரளாவில் நடைபெறும் திருவிழாக்களோடு ஒப்பிடுகிறார். இதன் விளைவாக அலெக்ஸாண்டர் கேரளாவில் தான் ஆய்வு செய்த காலத்திலும் அத்தகைய பௌத்த திருவிழா முறை பின்பற்றப்படுவதை ஒப்பீட்டளவிலும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

குறிப்பாக, இத்தகைய பௌத்த திருவிழா முறை பகவதி அம்மன் கோயில்களில் பின்பற்றப்படுவதை அலெக்ஸாடர் சுட்டிக்காட்டுகிறார். இதில் கேரளாவில் உள்ள செட்டிக்குளங்கரை என்னும் ஊரில் உள்ள பகவதி அம்மன் கோயிலும் ஒன்றாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட செய்திகள் குறித்து நண்பர் அருள் முத்துக்குமரனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, இச்செட்டிக்குளங்கரையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் இருந்து அய்யப்பன் கோயிலுக்கு அறவணப் பாயாசம் எடுத்துச் செல்லப்படுவதாக தகவலைப் பரிமாறிக் கொண்டார்.

அறிஞர்கள் பகவதி அம்மனை பௌத்தக் கோயில் என்று கூறுவதையும் அய்யப்பன் கோயிலை பௌத்த விகார் என்று கூறுவதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டால் இவ்வூரில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் இருந்து அய்யப்பனுக்கு அறவணப் பாயாசம் எடுத்துச் செல்லும் நிகழ்வினை இரண்டு பௌத்த விகார்களுக்கு இடையே உள்ள தொடர்பினைப் புரிந்துகொள்ள முடியும். அலெக்ஸாண்டர் பண்பாட்டு விழாக்கள் மூலம் பகவதி அம்மன் கோயில் பௌத்த விகார் என்றுஉறுதிசெய்துள்ளார்.

மணிமேகலை அறவண அடிகள் என்னும் பௌத்தத் துறவியைப் பற்றி கூறியுள்ளதை நாம் அறிவோம். அறத்தை அல்லது தம்மத்தைப் போதிப்பவர்களுக்கு அறவண அடிகள் என்று பெயர். எனவே அறவணப் பாயாசம் என்பது பௌத்தப் பிக்குகளாகிய அறவணர்கள் பகவதி அம்மன் கோயிலிலிருந்து அய்யப்பன் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் பண்டைய மரபாக இருந்திருக்கும். அறவணர்கள் அளிக்கக்கூடிய பாயாசம் அறவணப்பாயாசம் ஆகும்.

இதிலிருந்து பகவதி அம்மன் கோயில்கள் பௌத்த விகார்களே, அய்யப்பனும் புத்தரே என்பதை அறிந்துகொள்ளலாம்.

4. பள்ளிகட்டு சபரிமலைக்கு...!
*************** *********************

P.C. அலெக்ஸாண்டர் தனது கேரளத்தில் பௌத்தம் என்னும் நூலில் கேரளாவில் உள்ள அய்யப்பன் கோயில் பௌத்த விகார் இல்லை என்று நீண்ட தன் வாதத்தை முன் வைத்துள்ளார்.

சாஸ்தா என்ற பெயர் புத்தரைக் குறிக்கும் சொல்லாக இருந்தபொழுதிலும் அச்சொல்லுக்கு வேறு சில அர்த்தங்களைக் கற்பிக்கும் அலெக்ஸாண்டர் கேரள அய்யப்பன் சாஸ்தா என்றழைக்கப்பட்டாலும் அது பௌத்த விகார் இல்லை என்பதில் உறிதியாக தன் கருத்தை முன்வைத்துள்ளார்.

அலெக்ஸாண்டரின் கருத்துப்படி பள்ளி என்கிற சொல் பௌத்த வேரிலிருந்து வந்ததாகும். பௌத்த மரபிற்குரிய இச்சொல் கேரளத்தில் இந்துகளைத் தவிர இஸ்லாம், கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் மதக் கோயில்களைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்துக்கள் அவ்வாறு குறிக்கும் பழக்கம் இல்லை என்கிறார்.

ஆனால், அய்யப்பன் கோயிலுக்குக் கார்த்திகை மாதத்தில் மாலைபோடும் பக்தர்கள் 'இருமுடிக்கட்டு சாமிக்கே! பள்ளிகட்டு சாமிக்கே' என்ற பாடல் வரியை ஆழ்மனதிலிருந்து உச்சரித்துப் பாடுவதை நாம் அறிவோம். பள்ளிகட்டு என்பதன் பொருள் பள்ளிக்கு கட்டு என்று பொருள்கொண்டால் கட்டப்படும் கட்டு பள்ளிக்கு அல்லது பௌத்த விகாருக்கு என்று பொருள்கொள்ளலாம்.

எனவே அலெக்ஸாண்டர் பள்ளி என்று குறிப்பிடும் வழக்கம் இந்துக்களிடம் இல்லை என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டால் அவரின் கருத்திற்கு நேர் எதிராக அய்யப்பன் கோயிலை இந்துக்கள் பள்ளி என்று அழைப்பதன் பொருள் அய்யப்பன் கோயில் பௌத்த விகாரக இருந்தது என்பதுதானே பொருளாகும்.

5. சாமியே! சரணம் அய்யப்பா!
************* ********* *************


பௌத்தத்தில் திரிசரணம் மிக முக்கியமானது என்பது மட்டும் இல்லாமல் பௌத்தத்தின் அடிப்படையானதும் ஆகும். திரிசரணம் என்பதிலேயே சரணம் என்ற சொல் இடம்பெறுவது தெளிந்த நீரில் தெரியும் முழுநிலவைப் போன்றதாகும்.

இந்து மதத்தில் வேறு எந்த கோயில்களிலும் இல்லாத பழக்க வழக்கங்களும் சாமி சரணம் சொல்லும் பழக்கமும் ஐயப்பன் கோயிலுக்கு தனி சிறப்பு வாய்ந்ததாகும். பௌத்தத்தில் திரிசரணம் புத்தம் சரணம், தம்மம் சரணம், சங்கம் சரணம் என்று கூறுகிறோம். இதில் சாமி சரணம் என்பது புத்தம் சரணம் என்பதற்கு இணையானது ஆகும்.

கேரளாவின் பண்டைய ஆவணம் ஒன்றில் புத்தம் சரணம், தம்மம் சரணம் என்று இடம்பெறுவதை அடிப்படையாக கொண்டு அலெக்ஸாண்டர் இது தேரவாத பௌத்தத்திற்கு உரியது என்கிறார். மேலும் கேரளாவில் தேரவாத பௌத்தம் பரவியிருந்தது என்கிறார்.

புத்தம் சரணம், தம்மம் சரணம் என்றிருந்தால் தேரவாத பௌத்தம், தம்மம் சரணம், புத்தம் சரணம் என்றிருந்தால் அது மகாயான பௌத்தம் என்பது அறிஞர்களின் கருத்து. அலெக்ஸாண்டரும் அதையே குறிப்பிடுகிறார். கேரளாவின் பண்டைய ஆவணத்தில் பௌத்தத்தோடு தொடர்புடைய சரணம் பற்றி அலெக்ஸாண்டர் அறிந்திருந்தபோதிலும் அய்யப்பன் கோயிலுக்காக கூறப்படும் சரணம் கூறுதல் பௌத்தத்திற்கானது இல்லை என்கிறார்.

அய்யப்பனுக்காக நாம் மாலையிடும் காலத்தில் பொய், களவு, கள்ளுண்ணுதல் போன்ற பஞ்ச சீல கொள்கை பின்பற்றப்படுவதை எண்ணிப்பார்த்தால் அது பௌத்தத்தின் பின்புலத்தில் இயங்குவதை அறியலாம்.

சரணம் பாடுதல், பஞ்ச சீலம் பௌத்ததிற்கான கூறு என்பதை நாம் அறிவோம். இவை அய்யப்பனிக்கு மிக தீவிரமாம பின்பற்றப்படுகிறது.


6. அய்யப்பன், அய்யனார் இரண்டும் ஒன்றே
**************** ************* ************ ***********

இவ்விரண்டு தெய்வங்களும் ஒன்று என்று பௌத்த வரலாற்றியல் மற்றும் பண்பாட்டுப் பின்னணியில் வைக்கப்படும் வாதம் மிக முக்கியமானது என்பதை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். அதே சமயம் உருவம் செதுக்கப்படாத கற்கள் முதல்கொண்டு சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது வரை உள்ள அய்யனார், அய்யப்பன் ஆகியோர்களின் பல்வேறு வடிவங்களை நாம் கடந்து வந்துள்ளோம். ஆனால் ஆறகளூ(ழூ)ரில் உள்ள இந்த அய்யனார் (அய்யப்பன்) சிலை உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் சிலையாக என் கள ஆய்வின் மூலமாக உணர்கிறேன். இந்த சிலை வடிவத்திற்கு என்று அய்யப்பனார் சார்ந்த வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. அத்தோடு இல்லாமல் இவ்வடிவத்தில் இருக்கும் அய்யனார் சிலை இருக்கும் இடத்தில் உள்ள சமூக வரலாற்றை ஆராய்கிறபோது இங்கு பௌத்தர்கள் குடி இருந்ததையும் பின்பு அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டதையும் அல்லது அவர்கள் தங்களுடைய பௌத்த அடையாளத்தை தொலைக்கும்படி பெரும் சமூக நிகழ்வு ஏற்பட்டிருப்பதையும் அறிய முடியும்.

இச்சிலை வடிவம் தமிழகத்தில் பௌத்தத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் மிக முக்கியமான பங்கு வகிக்கும். பல்வேறு வடிவங்களில் உள்ள அய்யனார் சிலைகளில் ஆறகழூரில் உள்ள இச்சிலை வடிவத்தில் ஒத்த அய்யனார் சிலைகள் பௌத்தப் பண்பாட்டை விளக்கும் மிக முக்கியமான பௌத்தக் குறியீடாகும்.

7. கூட்டுசோறும் அய்யப்பனும்!
******************** ****************

இந்திய சமூகத்தின் தீராத புற்றுநோயாக இருக்கும் சாதிய கோட்பாட்டில் சேர்ந்துண்ணாமை மிக முக்கியமான தீண்டாமை வடிவமாக இருந்துவருகிறது. அய்யப்பனுக்கு மாலையிடும் பக்தர்கள் சேர்ந்துண்ணுவதில் தீண்டாமை பார்ப்பதில்லை ஆதலால், அய்யப்பன் கோயில் பௌத்த விகார் என்பதலாயே இப்பழக்கம் பாரம்பரியமாக கடைபிடித்துவரப்படுகிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

அய்யப்ப பக்தர்கள் சாதி கடந்து சேர்ந்துண்ணுவதை ஏற்றுக்கொள்ளும் அலெக்ஸாண்டர், இதனால் அய்யப்பன் கோயில் பௌத்த விகார் என்று கூறிவிடமுடியாது என்கிறார்.

கன்னிசாமி அதாவது முதல் முதலாக மாலைபோடுபவர்கள் தங்கள் வீட்டில் கன்னிபூசை வைக்கும் போது அளிக்கும் உணவினை சாதிகடந்து உண்ணும் பழக்கம் பௌத்த மரபை சார்ந்தவை.

மேலும், மலைக்கு செல்லும்போது பகிர்ந்துகொள்ளப்படும் உணவிலும் அவர்களிடையே சாதி பார்க்கப்படுவதில்லை. இதை தற்காலிகமாக சில சூழல்களில் சாதியைப் பார்க்காமல் இருக்கும் பண்பு என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.

பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும் இந்து மதத்தின் சாதிய பண்பாட்டில் ஓங்கியிருக்கும் தீண்டாமையைப் புறந்தள்ளிவிட்டு பௌத்தத்தின் பூர்விக மரபு சேர்ந்துண்ணுதல் கடைபிடிக்கப்பட்டு வரப்படுகிறது.

சேர்ந்துண்ணக்கூடாது என்பது ஒரு மதத்தின் விதிமுறையாக இருக்கும்போது, சேர்ந்துண்ணுதல் பௌத்தத்தின் கொள்கையாக இருக்கிறது.

8. மணிகண்டனே! அய்யப்பா!!
********************** *************

கேரளாவில் உள்ள அய்யப்பன் கோயில் பௌத்த விகார் என்றும் அய்யப்பன் என்பது புத்தரைக் குறிக்கும் பௌயர்களில் ஒன்று என்றும் நாம் அறிவோம்.

இங்கு அய்யப்பனுக்கு வழங்கும் மற்றொரு பெயராகிய மணிகண்டன் என்பது நம் கவனத்திற்குரியதாகும்

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்னும் பௌத்தக் காப்பியத்திலும், தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் புத்தர் பீடிகை அமைந்துள்ளதாக மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவத் தீவு என்னும் பெயரிலும், அய்யப்பனுக்கு வழங்கும் மற்றொரு பெயரான மணிகண்டன் என்னும் பெயரிலும் மணி என்னும் சொல் பொதுவாக அமைந்திருப்பதைக் கவனித்தால் இச்சொல் பௌத்தம் சார்ந்தவற்றுள் இணைந்திருப்பதை அறியமுடிகிறது.

மணிமேகலை - பௌத்தக் காப்பியம், பௌத்த ஆளுமை.
மணிப்பல்லவம் - புத்தர் பீடிகை அமைந்துள்ள இடம்.
மணிகண்டன் - புத்தருக்கு வழங்கும் பெயர்களுள் ஒன்றான அய்யப்பனுக்கு வழங்கும் மற்றொரு பெயர் அல்லது புத்தரின் மற்றொரு பெயர்.

இவ்வாறு மணி என்பது பௌத்தத்தோடு தொடர்புடைய சொல்லாக இருந்துவருகிறது. பிற மதங்களோடும் இச்சொல் தொடர்புடைய சொல் என்றாலும், பௌத்தத்தோடு மிக நெருக்கமாக பண்டைய தமிழ்ச்சூழலில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

மணி - ஆபரணம். அழகு சேர்ப்பவை. இச்சொல் பாலியில் ரத்னா என்று வழங்கப்படுகிறது. திரிசரணத்தைத் திரிரத்னா என்று வழங்குவர். இதையே தமிழில் மும்மணி என்றழைப்பர்.

மணிகண்டன் மணியைப் போல அழகிய கண்களை உடையவன் என்றும் மும்மணிகளாகிய திரிரத்னத்தையே தமது கண்களாக கொண்ட புத்தர் என்றும் பொருள்கொள்ளலாம். மேலும் புத்தம், தம்மம், சங்கம் ஆகிஹ மும்மணிகளைக் கண்டவர் என்றும் பொருள்கொள்ளலாம்.

எனவே, அய்யப்பன் என்பதும் மணிகண்டன் என்பதும் புத்தரைக் குறிக்கும் என்பதை நாம் அறியலாம்.

9. பகவான் சரணம் அய்யப்பா!
***** ****** ***** ****** ****** ******

பகவன், பகவான் என்பன அய்யப்பனைக் குறிக்கும் சொற்களில் பிரதானமாக திகழ்கின்றன. இருப்பினும் இச்சொல் பொதுவாக மக்களால் பல்வேறு இந்து கடவுள்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

"பகவான் சரணம் பகவதி சரணம், சரணம் சரணம் அய்யப்பா" என்ற புகழ்பெற்ற பாடல் வரிகளிலிருந்து, அய்யப்ப புத்தரைக் குறிக்க பகவான், பகவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறியலாம்.

இங்கு பகவன் (பகவான்) என்ற சொல் பன்னெடுங்காலமாக பௌத்த மரபில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை திருக்குறள், மணிமேகலை ஆகிய இரண்டு பௌத்தப் பிரதிகளைக் கொண்டு ஆராயலாம்.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு" - என்னும் குறளில் பகவன் என்ற சொல் இடம்பெற்றுள்ளது என்பதை நாம் யாவரும் அறிந்ததே. இக்குறளின் பொருள் எழுத்துக்கெல்லாம் அ என்னும் எழுத்து முதலாவதாக அமைந்திருப்பது போல உலகுக்கு "ஆதி பகவன்" முதலாவதாக அமைந்திருக்கிறார் என்று பொருள்கொள்ளலாம்.

பண்டைய தமிழ்ச்சமூகத்தின் இலக்கியப் பிரதிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் போன்ற அவைதீக அல்லது பௌத்த நூல்கள் இயற்கை வழிபாட்டோடு தொடங்குவதைக் காணலாம். இதன் அடிப்படையில் பௌத்தம் மதங்களில் அறிவியல் தன்மையோடு இருப்பதால் எழுத்துகளுக்கு அகரம் முதலாக இருப்பது போல் நாம் வாழும் பூமி உள்ளிட்ட சூரியக்குடும்பத்தில் சூரியனே (சூரியன் முதலாவதாக தோன்றியதால் ஆதி பகவன் என்றழைக்கப்படுகிறது) முதலாவதாக அமைந்துள்ளது என்றும் பொருள்கொள்ளலாம்.

ஆனால், இங்கு "ஆதி பகவன்" என்பது புத்தரையே குறித்திருக்க வேண்டும். இதை பௌத்தர்களின் ஆதியில் தோன்றிய பகவன் புத்தர் என்று பொருள் கொண்டு, இக்குறளுக்கு எழுத்துக்கெல்லாம் அகரம் முதலாவதாக இருப்பதைப் போல பௌத்த உலகத்திற்கு ஆதியில் தோன்றிய பகவன் புத்தரே முதலாவதாக திகழ்கிறார் என்று பொருள்கொள்ளலாம். இங்கு திருக்குறள் அவைதீக பிரதி அல்லது பௌத்தப் பிரதி என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இப்பொழுது பகவன் என்ற சொல் மணிமேகலை காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சூழலைக் காணலாம். இக்காப்பியத்தின் வஞ்சிமாநகர் புக்க காதையில் கண்ணகி காப்பியத் தலைவி மணிமேகலையிடம் உரையாடுகிறபோது "பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்" (வரிகள் 54-55) என்று கூறுகிறாள். அதாவது தான் காவிரிப்பூம்பட்டடினத்தில் பகவனுடைய ஏழு இந்திர விகாரங்களைத் தொழுததாக கண்ணகி கூறுகிறாள். இந்திர விகாரம் என்பது புத்த விகார். இங்கு இந்திர விகாரத்தோடு பகவன் என்ற அடைமொழி வந்துள்ளதால் புத்தருக்குப் பகவன் என்கிற அடைமொழி இருந்ததை மணிமேகலை காப்பியம் உறுதிப்படுத்துகிறது.

திருக்குறளில் புத்தரின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படாமல் பகவன் என்னும் அடைமொழி பெயரே அல்லது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்றான பகவன் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மணிமேகலையின் துணையைக் கொண்டு அறியலாம்.

"பகவன் இந்திர விகாரம்" என்று மணிமேகலை புத்தர் விகாரை குறிப்பிடுவதற்கும், "பகவான் சரணம் அய்யப்பா!" என்று அய்யப்ப பக்திப் பாடல் அய்யப்ப புத்தரைக் குறிப்பிடுவதற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது? இதிலிருந்து பகவன், பகவான் என்பன அய்யப்ப புத்தரைக் குறிக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

10. கருப்பு வர்றான் கருப்பு வர்றான் கருப்புசாமி!
******* ******* ******* ******** *********** **************
அய்யப்பனைப் பாடும் இவ்வரி கருப்புசாமி என்று குறிப்பிடுவது அய்யப்பனைப் பற்றிய ஒரு பரிமாணத்தையே காட்டுகிறது!

அய்யப்பன் என்பது புத்தரைக் குறிக்கும்போது அய்யப்பனைக் குறிக்கும் கருப்புசாமி என்பது புத்தரைக் குறிக்கிறதா? என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். அய்யப்பனுக்கு மாலையிடும் பக்தர்கள் மூன்று வண்ணங்களில் (கருப்பு, நீலம், காவி) ஆடை அணிவதை நாம் அறிந்ததே. இதில் கருப்பும் இடம்பெற்றுள்ளது கவனத்திற்குறியதாகும்.

மணிமேகலையில் "ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை"யில்
"கரியவன் இட்ட காரணந் தானும்" (வரி:55) என்ற வரியில் புத்தரை "கரியவன்" என்று சுட்டியுள்ளார் சாத்தனார்.

இச்சிறப்புப் பெயர் மழை தரும் கடவுளாக விளங்கும் புத்தருக்கு அல்லது இந்திரருக்கு மழை தரும் மேகத்தின் கரிய நிறத்தைக் குறிக்கும் வகையில் சாத்தனாரால் கையாளப்பட்டுள்ளது. கருப்பு நிறம் இழிவின் நிறமாக பார்க்கப்படும் ஒரு சமூகத்தில் கரியவன் என்றும் கருப்புசாமி என்றும் தன் பெயரைத் தாங்கி நிற்கிறார் புத்தர்.

11. பகவதி சரணம் அய்யப்பா!
***** ******* ****** ****** ****** *****
பகவான் சரணம் அய்யப்பா என்பது புத்தரைக் குறிக்கிறது என்பதை ஏற்கனவே நாம் கண்டோம்.

கேரளாவிலுள்ள அய்யப்பன் கோயில் புத்த விகார் இல்லை என்று கூறும் P.C. அலெக்ஸாண்டர் இம்மாநிலத்தில் இடைக்காலத்தில் பல புத்த விகார்கள் இந்துக்கோயில்களாக மாற்றப்பட்ட போது பகவதி கோயில்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அய்யப்பன் கோயில் பௌத்த விகார் இல்லை என்று கூறியிருந்தாலும் மாற்றப்பட்ட கோயில்கள் பகவதி பெயரில் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுவது மிகுந்த கவனத்திற்குரியதாகும்.

அய்யப்பன் கோயில் பகவான் என்றழைப்பதைப் போல பகவதி என்றும் அழைக்கப்படுகிறது. இதை "பகவான் சரணம் பகவதி சரணம்! சரணம் சரணம் அய்யப்பா!" என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம்.

எனவே, அய்யப்பன் கோயில் பௌத்த விகாராக இருந்து மாற்றப்பட்டபோது இக்கோயிலும் பகவதி கோயிலாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று அலெக்ஸாண்டரின் கருத்துப்படி நாம் புரிந்துகொள்ளலாம்.

கேரளாவில் உள்ள அய்யப்பன் கோயில் நீண்ட நெடுங்காலமாக தமிழகம், கேரளா முழுவதும் தொடர்ந்து புகழ்பெற்று விளங்கிவருவதால் மற்ற கோயில்களைப் போல பகவதி கோயில் என்று அய்யப்பன் கோயில் அழைக்கப்பெறவில்லை என்றாலும் இக்கோயிலுக்கும் பகவதி என்ற அடைமொழி சிறந்துவிளங்குகிறது எனலாம்.

மேலும், பகவதி என்பது பகவானுக்கு இணையான பெண்பால் சொல்லாக விளங்குகிறது என்று புரிந்துகொள்ளலாம். இவ்வளவில் பகவதி என்னும் சொல் பகவான் என்னும் சொல்லைப் போலவே பௌத்த மரபை சார்ந்துள்ளது எனலாம்.

No comments:

Post a Comment