ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்டுள்ள திருச்சிராப்பள்ளி என்னும் பெயருக்கே பல்வேறு சமயங்கள் சார்ந்தும் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. பௌத்தம், சமணம், இந்து மதம் சார்ந்து திருச்சிராப்பள்ளிக்கு அளிக்கப்படும் பெயர் விளக்கத்தை இங்கு ஆராய்ந்துப் பார்க்கலாம். மேலும் இம்மொழிக்கான புதிய விளக்கத்தையும் இக்கட்டுரையில் காணலாம்.
திருச்சிராப்பள்ளியின் பெயர் காரணத்தை விளக்குவதற்கு இப்பெயருக்கு வழங்கப்படும் திருச்னோபோளி, திரிஷிராபுரம், திருச்சிராப்பள்ளி ஆகிய பெயர்களுக்கு விளக்கம் காண வேண்டிய தேவை உள்ளது. திருச்சிராப்பள்ளி என்னும் ஊர்ப்பெயரை திருச்சி என்று சுருக்கி அழைப்பதற்கு வசதியாக இருந்தாலும் இச்சுருக்கம் மாபெரும் வரலாற்றை மறைத்து விடும் அபாயம் உள்ளது என்பதையும் இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் இந்தியாவில் திருச்சிராப்பள்ளி என்பதை திருச்னோபோளி என்று மாற்றி உச்சரித்து இருக்கவேண்டும். இவ்வடிவத்தை பிரிட்டிஷ் இந்தியாவில் வழங்கப்பட்ட ஆவணங்களில் மட்டும் நாம் காண்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு மாவட்டமாக இருந்த திருச்சிராப்பள்ளி திருச்னோபோளி என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு உதாரணத்திற்காக மட்டும் 1907 ஆம் ஆண்டு ஹெமிங்லே F.R அவர்களால் வெளியிடப்பட்ட மெட்ராஸ் மாவட்ட அரசாவணத்தில் திருச்னோபோளி என்று குறிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வடிவம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஏற்பட்ட மாற்றம் எனலாம்.
எஞ்சியுள்ள திரிஷிராபுரம், திருச்சிராப்பள்ளி ஆகிய இரண்டு வடிவங்களில் திருச்சிராப்பள்ளி என்பது பழமையான வடிவமாகவும் திரிஷிராபுரம் என்பது புராணக்கதை சார்ந்த புதுமையான வடிவமாகவும் தோன்றுகிறது.
பக்தி இலக்கியங்களில் இவ்வூர் பெயர் சிராப்பள்ளி என்றும் திரிச்சிராப்பள்ளி என்றும் இடம்பெற்றுள்ளது. எனவே பக்தி இலக்கிய காலகட்டத்திற்கு முன்பிருந்தே சிராப்பள்ளி, திரிச்சிராப்பள்ளி ஆகியன வழக்கிலிருந்த மொழியாகும். பக்தி இலக்கியமே திரிச்சிராப்பள்ளி என்று இருந்தது திருச்சிராப்பள்ளி என்று மாறியதற்கான சான்றாதாரமாக உள்ளது.
மேலும் திரிஷிராபுரம் என்று இந்து புராணக் கதையில் இடம்பெறுவது மற்றொரு வரலாற்றை உருவாக்குவதன் பின்னணியில் தோன்றியது எனலாம்.
திரிஷிராபுரம் என்பதை திரி+சிரம்+புரம் என்று பிரித்து திரி - மூன்று, சிரம் - தலை, புரம் - ஊர் என்று விளக்கி இதற்கு 'மூன்று தலையூர்' எனப் பொருளாகும் என்று விளக்கம் கூறுகின்றனர். இவ்விளக்கம் புராணக் கதையை பின்னணியாகக் கொண்டு உள்ளது. அப்புராணக்கதை பின்வருமாறு அமைந்துள்ளது:
"இந்து சமயப் புராணங்களில் 'திரிசரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் (மூன்று தலைகள்) கொண்ட அரக்கன், இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்கு அந்த அரக்கனின் பெயராலே திரிசிரன் பள்ளி என்பதை தழுவி திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவியுள்ளதால், இவ்வூருக்கு திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்தாககவும் கூறப்படுகிறது" (விக்கிப்பீடியா).
இக்கதைக்கும் இவ்வூர்ப்பெயர் விளக்கத்திற்கும் போடப்பட்ட முணுச்சி போலித்தனமானது என்றாலும் இப்பெயர் விளக்கம் குறித்து இங்கு நாம் ஆராயலாம்.
திரி என்று தொடங்கும் பௌத்த ஊர்ப்பெயர்களை அல்லது பௌத்த ஊர்ப் பெயர்களை மாற்றியமைக்க திரி என்பதை திரு என்று மாற்றி பௌத்தத்தின் வரலாற்றை மறைக்கும் போக்கு வரலாற்றின் காலக் கட்டத்தில் இருந்ததை நாம் அறிகிறோம். இங்கு பண்டிதர் அயோத்திதாசர் திருக்குறளை திரிக்குறள் என்று கூறுவதை நினைவில் கொண்டால் திரி என்பது திரு என்று மாற்றப்பட்டிருப்பதை அறியலாம். பண்டிதரின் இக்கருத்து சிலருக்குக் கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவரின் கருத்து மறுக்க முடியாத உண்மை என்பதை பல சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. பக்தி இலக்கியமும், இந்துப் புராணக்கதைகளும் திருச்சிராப்பள்ளியில் உள்ள திரு என்பது திரி என்று இருந்ததை காட்டுகிறது. இந்துபுராணக்கதை சிரா என்பதற்குத் தலை என்று பொருள் தந்துவிட்டு பள்ளி என்பதைப் புரம் என்று மாற்றிவிட்டது. ஏனென்றால் பள்ளி என்பது நேரடியாக பௌத்தப் பள்ளியைக் குறிக்கும் சொல்லாடலாகும். இந்துக்கதையாடலுக்கு ஏற்றவாறு திரிஷிராபுரம் என்று கூறியவர்கள் அக்கதைக்கு ஏற்ப திரிஷிராப்பள்ளி என்று கூறமுடியாது என்பதை உணர்ந்திருந்தார்கள். பள்ளி பௌத்தத்தின் அடையாளமாக விளங்குவதால் திரிஷிராப்பள்ளி என்று பயன்படுத்தினால் அதன் பெயரிலேயே பௌத்தத்தின் வரலாறு வெளிப்படும் என்பதை இந்துக்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே பக்தி இலக்கியத்திலேயே திரிச்சிராப்பள்ளி என்று இடம்பெற்றிருந்த போதிலும் திரிஷிராபுரம் என்ற மற்றொரு பெயரை உருவாக்கினர் போலும். திரிச்சிராப்பள்ளி என்பதை திருச்னோபோளி என்று உச்சரித்தது ஆங்கிலேயர்களின் வாய்கோளாறு என்றால் திரிஷிராபுரம் என்று மாற்றி உச்சரிக்க வைத்தது இந்துக்களின் பிறவிக்கோளாறாகும். எதிர்வரும் காலங்களில் புதிய புதிய ஊர்கள் தோன்றினாலும் அப்பெயர்களுக்கு இந்துமதம் சார்ந்த புராணக்கதைகள் தயார்நிலையில் இருக்கும். எனவே இந்தியாவில் வழங்கும் ஊர்ப்பெயர்களில் 'புரம்' என்றிருந்தால் அவை பள்ளி என்று இருந்து புரம் என்று மாற்றப்பட்டிருக்கலாம் என்று வலுவாக சந்தேகிக்கலாம். உதாரணத்திற்கு திருவனந்தபுரம் என்பது திரிவனந்தப்பள்ளி என்று இருந்திருக்கலாம் என்று அனுமானிப்பதைப் போல. இதை காஞ்சீவரம் என்னும் பழைய வடிவம் காஞ்சிபுரம் என்று மாற்றப்பட்டதை நினைவில் கொண்டு அணுக வேண்டும்.
திருச்சிராப்பள்ளி என்பதை திரு+சிராய்+பள்ளி என்று பிரிக்கின்றனர். சிராய் என்றால் பாறை என்று பொர்ய்ள்கொண்டு பாறைப்பள்ளி என்று விளக்குகின்றனர். 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திரு-சிலா-பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி என்று வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இவை சிராய், சிலா என்பதற்குப் பாறை என்ற பொருளே அமைந்துள்ளது.
இவ்வூருக்கு சமண சமயம் சார்ந்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இங்கு சிரா என்னும் சமணத்துறவி ஒருவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. எனவே சிராப்பள்ளி என்றால் "சிரா பள்ளிகொண்ட இடம் (உறைவிடம்)" என்று கூறுகின்றனர்.
உபேந்திர சிங் அவர்கள் தன்னுடைய A history of ancient and early medival india from the stone age to the 12th centuary என்ற புத்தகத்தில் மத்திய இந்தியாவில் சிரா பஹாரி என்ற இடத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஜைனத்தடயம் கிடைத்துள்ளது என்கிறார். சிரா பஹாரி என்ற இவ்விடத்தினைக் குறிக்க சிரா என்ற சொல்லும் இங்கு இடம்பெற்றுள்ளதை நாம் அறிகிறோம். இவ்விடம் இப்பொழுது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு சிரா என்று வருவதினால் சிரா என்ற சமணத்துறவி வாழ்ந்தார் என்ற பொருளிலோ அல்லது அவரின் நினைவாகவோ வைக்கப்பட்டதாக இல்லை எனலாம். சிரா என்ற பெயரில் திருச்சிராப்பள்ளியில் சமணத்துறவி வாழவில்லை என்று மறுப்பதற்கும் இல்லை. சிரா என்ற சொல் பொதுவாக இந்திய ஊர்ப்பெயர்களில் காணப்படும் சொல்லாக இருப்பதை அறிகிறோம். தெலுங்கான மாநிலத்தில் சிரணப்பள்ளி என்ற ஊரும் உண்டு. எனவே சிரா என்பது அவைதீக மரபில் பெரும் சொல்லாடலாக இருப்பதை உணரலாம்.
திருச்சிராப்பள்ளி என்ற ஊர்ப்பெயருக்கு
இந்து, சமணம் ஆகிய மதங்களைச் சார்ந்த விளங்களைக் கண்டுள்ளோம். இனி பௌத்தம் சார்ந்த விளக்கங்களைக் காணலாம்.
காஞ்சிபுரத்தின் பழைய பெயர்களுள் ஒன்று காஞ்சீவரம் ஆகும். சீவரம் என்றால் பௌத்தத் துறவிகளின் சீவராடை. இச்சீவராடை உள்ளாடை, மேலாடை, வெளியாடை என மூன்று சீவரங்களைக் (திரிசீவரம்) கொண்டுள்ளது. திரிசீவரம் என்பது பௌத்தத் துறவிகளின் ஆடையைக் குறிக்கிறது. திரிசீவரம் என்பதே திருச்சி என்று மாறியிருக்கும் என்றும் கூறுகின்றனர்.
திருச்சிராப்பள்ளி என்பதை திரு+சின்ன+பள்ளி என்றும் பிரிக்கின்றனர். தெலுங்கு அறிஞர் சி.பி. பிரவுன் என்பவர் இவ்வாறே பிரிக்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு சிரா என்பதற்குச் சிறார் என்று பொருள்கொண்டால் சிராப்பள்ளி என்பதை சிறார்ப்பள்ளி என்று பொருள்கொள்ளலாம். பௌத்தப் பள்ளி மரபில் சிறார்களுக்கு என்று தனிப்பள்ளியும் பெரியோர்களுக்கு என்று தனிப்பள்ளியும் இருந்தன. காஞ்சிபுரத்தில் சிறார்களுக்கும் பெரியோர்களுக்கும் பயிற்சியளிக்க தனித்தனிப் பள்ளிகள் இருந்தன. சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட பள்ளி 'பிள்ளையார் பாளியம்' என்றும் பெரியோர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட இடம் 'பாளிமேடு' என்றும் அழைக்கப்பட்டன. இவ்விடங்கள் இன்றைக்கும் காஞ்சிபுரத்தில் உள்ளன. எனவே சிராப்பள்ளி என்றால் சிறார்ப்பள்ளி என்றும் பொருள்கொள்ளலாம். மேலும் திரிச்சிராப்பள்ளி என்பதை திரிசரணத்தைப் போதிக்கும் சிறார்ப்பள்ளி என்றும் திரிபிடகத்தைப் போதிக்கும் சிறார்ப்பள்ளி என்றும் பொருள்கொள்ளலாம்.
சிரா (சிரம்) என்பதற்குத் தலை என்று பொருள் கொண்டு அணுகினால் திரிச்சிராப்பள்ளி என்பதற்குத் திரிசரணத்தை அல்லது திரிபிடகத்தைப் போதிக்கும் தலைமைப் பள்ளி என்று பொருள்கொள்ளலாம். சிரா என்பதற்கு மூளை என்ற பொருளும் உண்டு. மூளை அறிவோடு தொடர்புடைய உறுப்பு ஆதலால், இதனை அடிப்படையாகக் கொண்டு திரிசரண அறிவுப்பள்ளி என்றும் திரிபிடக அறிவுப்பள்ளி என்றும் பொருள்கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளி என்பதற்கு இந்து மதம் சார்ந்து விளக்கம் அளிக்கப்பட்டாலும் இது வெறும் புராணக்கதை சார்ந்து மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட விளக்கமாகும். மேலும் இவ்விளக்கம் திருச்சிராப்பள்ளி என்பதன் பூர்வீக அடையாளத்தோடு தொடர்பற்றதாகும். சமண, பௌத்தம் சார்ந்த அளிக்கப்படும் விளக்கம் தொடர்புடையவையாகும். மேலும் பௌத்தம் சார்ந்த விளங்கிக்கொள்வது திருச்சிராப்பள்ளி என்பதன் மூல வடிவத்தோடு பொருந்துகிறது. எனவே திருச்சிராப்பள்ளி பண்டைய பௌத்த இடமாக இருந்து வந்துள்ளதை நாம் அறிகிறோம். திருச்சி என்று கூறினாலும் அது தனக்குள் திருச்சிராப்பள்ளி அல்லது திரிச்சிராப்பள்ளி என்கிற முழு வடிவத்தையே கொண்டிருக்கிறது என்பதையும் அதற்குப் பின்னால் பௌத்த வரலாறு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
No comments:
Post a Comment