தெய்வக்கடிஞை
மணிமேகலை காப்பிய ஒப்பிலக்கியக்
கட்டுரைகள்
ஆய்வாளர் இ. ஜெயபிரகாஷ் எழுதி வெளியிட்டுள்ள தெய்வக்கடிஞை என்ற நூல் இலக்கிய ஒப்பாய்வு சார்ந்த நூலாகும். தமிழில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை காப்பியத்தை இந்திய பௌத்தக் கதையாடல்களோடும் கிழக்காசிய நாடுகளில் உள்ள பௌத்தக் கதையாடல்களோடும் ஒப்பிட்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் உள்ள பத்து ஒப்பிலக்கிய ஆய்வுக் கட்டுரைகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும்.
இந்நூலில் உள்ள முதல் கட்டுரை “பௌத்தம்:
மணிமேகலை, குவானியின் ஓர் ஒப்பாய்வு” ஆகும். மணிமேகலை கதாப்பாத்திரத்திற்கும் சீனாவில்
வழிபடப்படும் குவானியின் (குவானியின் புத்தா) என்ற பெண் தெய்வத்திற்கும் இடையே உள்ள
ஒற்றுமைகள் குறித்து ஆராய்கிறது. குவானியின் பற்றிய கதை மணிமேகலையோடு பெருமளவில் ஒத்துப்போவதை
இவ்வாய்வுக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.
இந்நூலில் உள்ள இரண்டாவது கட்டுரை “குவானியின்
கதையாடலும் பண்டிதர் அயோத்திதாசரின் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறும்” ஆகும். தமிழ்ப் பௌத்தப்
பிக்குணியான மணிமேகலையுடன் சீனப்பௌத்தப் பிக்குணியான குவானியின் கதை ஒற்றுமையுடன் விளங்குவதை
கண்டறிந்த இந்நூலாசிரியர் பண்டிதர் அயோத்திதாசர் எழுதிய ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு
என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு குவானியினுக்கும் தமிழ்ப் பௌத்த பிக்குணி அம்பிகை
அம்மனுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஆராய்ந்து வெளிப்படுத்தினார். பண்டிதர் அயோத்திதாசரின்
பிரதி ஒன்று உலக நாடுகளின் கதையாடலோடு அல்லது குறிப்பாக சீனப் பௌத்தக் கதையாடலோடு ஒப்பிட்டு
ஆராயப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த வகையின் இவ்வாய்வுக் கட்டுரை தனிச்சிறப்பு
வாய்ந்ததாகும்.
இந்நூலில் “பௌத்தப்பிரதி தாமரை சூத்ராவும்
தமிழ்ப்பௌத்தக் காப்பியங்களும்” என்ற கட்டுரை மூன்றாவதாக அமைந்துள்ளது. இந்திய பௌத்தப்
பிரதியான தாமரை சூத்ராவுடன் (கமல சூத்ரா) மணிமேகலை முதலிய காப்பியங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன.
தமிழியல் ஆய்வு வரலாற்றில் மணிமேகலையுடன் தாமரை சூத்ரா ஒப்பிடப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், குவானியினை மணிமேகலையுடன்
ஒப்பிட்டதன் விளைவாக தாமரை சூத்ராவை மணிமேகலையுடன் ஒப்பிட நேர்ந்தது. எனவே இக்கட்டுரை
மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ளது.
“மணிமேகலை, மியோசான் கதையாடல்கள்” இந்நூலில் அமைந்துள்ள
நான்காவது கட்டுரையாகும். மியோசான் என்ற பௌத்தப் பெண் தெய்வம் கிழக்காசிய நாடுகளில்
குவானியினைப் போலவே வழங்கிவரும் ஒரு பௌத்தத் தெய்வமாகும். குவானியின் சீனாவின் நாட்டார்
கதையாடலில் வேர்கொண்ட மியோசான் கதையை உள்வாங்கி குவானியினே மியோசானாகவும் மியோசானே
குவானியினாகவும் அறியப்படுகிறது. எனவே, மணிமேகலையுடன் குவானியினை ஒப்பிட்டு ஆராய்ந்ததன்
விளைவாக மியோசானுக்கு வழங்கப்படும் தனித்த கதையாடலை மணிமேகலையுடன் ஒப்பிட்டு இவ்வாய்வுக்
கட்டுரை அமைந்துள்ளது.
“தமிழில் மணிமேகலையும் ஜப்பானிய கொஞ்சகு மோனோகதரியும்”
என்ற கட்டுரை மணிமேகலையுடன் ஜப்பானின் இடைக்கால வரலாற்றில் தோன்றிய கொஞ்சகு மோனோகதரி
ஷு என்ற நூலில் உள்ள குரு தோகா என்ற கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.
இக்கட்டுரையில் மணிமேகலைக்கும் குரு தோகாவுக்கும் (பௌத்தப் பிக்கு) இடையே உள்ள ஒப்புமைகள்
ஆராயப்பட்டதோடு மட்டும் இல்லாமல் பௌத்தப் பின்னணியில் ஜப்பான் நாட்டுப்புற தெய்வமும்
தமிழக நாட்டுப்புறத் தெய்வங்களும் பௌத்தத்தின் பின்புலத்தில் அமைவதை ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.
“கந்தவ்யூகமும் மணிமேகலையும்” என்ற கட்டுரை மத்திய
ஆசியாவோடும் இந்தியாவோடும் தொடர்புடைய கந்தவ்யூகம் என்ற பௌத்தப் பிரதியை மணிமேகலையுடன்
ஒப்பிட்டு அமைந்த ஆய்வுக் கட்டுரையாகும். இவ்விரண்டு நூல்களையும் முதன் முதலில் ஒப்பிட்டு
ஆராய்ந்தவர் டாக்டர் ஷு ஹிகோசாகா என்ற ஜப்பானிய பௌத்த அறிஞர் ஆவார். இது தமிழ்ச் சமூகத்தில்
பெருமளவில் கவனப்படுத்தப்படாத சூழலில் டாக்டர் ஹிகோசாகாவின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு
விளக்கமுறை ஆய்வுடன் கந்தவ்யூகத்திற்கும் மணிமேகலைக்கும் இடையே உள்ள தொடர்பை இக்கட்டுரையில்
எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
1.
பண்டிதர்
அயோத்திதாசரின் ஆதிவேதமும் சாத்தனாரின் மணிமேகலையும்
2.
தமிழ்ப்
பௌத்தத்தில் பிரம்மநிலை: சாத்தனாரின் மணிமேகலையும் பண்டிதர் அயோத்திதாசரின் ஆதிவேதமும்
3.
விசாகா
வரலாறும் கதையாடலும்: பண்டிதரின் வரலாற்று எழுதியலும் சாத்தனாரின் புனைவின் படைப்பாக்கத்
திறனும்
ஆகிய
மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் பண்டிதர் அயோத்திதாசரின் ஆதிவேதம் என்கிற நூலையும் மணிமேகலையும்
ஒப்பிட்டு ஆராயப்பட்ட கட்டுரைகளாகும். குவானியின் கதையாடலும் பண்டிதர் அயோத்திதாசரின்
ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறும் என்ற ஆய்வுக் கட்டுரையிலேயே மணிமேகலை காப்பியத்திற்கும்
ஸ்ரீ அம்பிகையம்மனுக்கும் உள்ள ஒற்றுமை ஆராயப்பட்டுள்ளது. இந்நிலையில் பண்டிதர் அயோத்திதாசரின்
இரண்டு நூல்களை உள்ளூர் காப்பியத்தோடும் கிழக்காசிய பௌத்தக் கதையாடலோடும் விரிவாக ஒப்பிட்ட
சிறப்புத் தன்மையை இவ்வாய்வுக் கட்டுரைகள் பெறுகின்றன.
“மணிமேகலை உருவாக்கப் பின்புலத்தில்
பௌத்தக் கதையாடல்கள்” என்ற ஆய்வுக் கட்டுரை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் ஆய்வை
அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தரவுகளுடன் புதிய ஒப்பீடுகளுடன் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும்.
இவ்வாறு பல்வேறு அம்சங்களில் இந்நூல் ஒப்பாய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வாளர் ஜெயபிரகாஷ்
அவர்களால் தமிழ்ச்சமூகத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு சிறந்த நூலாக விளங்குகிறது.
(இந்நூலினை பெறுவதற்கான இணைப்பு https://bit.ly/Deiva_kadinjai )
இ. ஜெயபிரகாஷ்
Email: writerjayaprakash@gmail.com
No comments:
Post a Comment