1928 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் நாள் தென்னிந்திய பௌத்த சங்கத்தின் சார்பாக சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தென்னிந்திய பௌத்த மகாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமைப் பொறுப்பை அறிஞர் லட்சுமி நரசு வகித்தார். இம்மாநாட்டில் "தமிழ் நூல்களில் பௌத்தம்" என்ற உரையை திரு.வி. கலியாண சுந்தர முதலியார் நிகழ்த்தினார். இவ்வுரையை 1929 ஆம் ஆண்டு ஒரு சிறு நூலாக அச்சிட்டு வெளியிட்டார். இவ்வுரை நூலாக்கம் பெற்றபோது பெரிய மாற்றம் இல்லாமல்
சிறிய மாற்றத்துடன் அச்சாக்கப்பட்டது என்று திரு.வி.க கூறுகிறார். இந்நூலைப் பற்றிய விமர்சனமே இக்கட்டுரையாகும்.
இவ்வுரை பௌத்த அறிஞர்கள் கூடிய அரங்கில் பௌத்த பேரறிஞராக விளங்கிய லட்சுமி நரசு அவர்களின் தலைமையில் வாசிக்கப்பட்டது என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். சைவப் பற்றாளரான திரு.வி.கவுக்கு ஏற்பட்டிருந்த நீண்டகால நோயை தீர்த்தவர் பண்டிதர் அயோத்திதாசர் என்பது பற்றி திரு.வி.க அவர்களே எழுதியுள்ளார். பண்டிதர் பரிநிர்வாணம் அடைந்து 13 ஆண்டுகள் கழித்து தென்னிந்திய பௌத்த சங்கத்தில் திரு.வி.க உரையாற்றினார். இம்மாநாட்டில் தலைமை வகித்த லட்சுமி நரசு அவர்கள் கூட்டம் ஒன்றில் பேசியபோது சைவப்பற்று கொண்டு களைத்தவர் திரு.வி.க என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சைவ நிலைப்பாட்டை எடுத்துவந்த போதிலும் தென்னிந்திய பௌத்த சங்கம் அவருக்கு உரையாற்ற அழைப்பு விடுத்ததிலிருந்து தென்னிந்திய பௌத்த சங்கம் மாற்றுக்கருத்துக்கு இடம் வழங்கியதை அறியலாம்.
"தமிழ் நூல்களில் பௌத்தம்" என்ற தலைப்பில் தீவிர சைவப்பற்றாளர் நிகழ்த்திய உரை என்பதற்கு இவ்வுரை உதாரணமாக விளங்குகிறது எனலாம். மேலும் சிறு நூலாக இருப்பினும் விவாதிப்பதற்கு இந்நூல் சில தகவல்களை கொண்டுள்ளது எனலாம்.
இந்நூலில் திரு.வி.க "தமிழ்ப் பௌத்தம்" என்ற சொல்லாடலை பயன்படுத்தியுள்ளார். இது பண்டிதர் அயோத்திதாசர் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகும்.
திரு.வி.க இந்நூலை 1. தொல்காப்பியம் 2. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு 3. ஐம்பெரும் காப்பியம் 4. திருமுறைகள் 5. கம்பராமாயணம் 6. புராணங்கள் 7. பிற்பட்ட நூல்கள் எனப் பகுத்துக் கொண்டு அவற்றில் இடம்பெறும் பௌத்தம் பற்றி ஆராய்கிறார்.
தொல்காப்பியம்:
தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறும் திரு.வி.க்ச் இந்நூல் புத்தர் பிறப்பதற்கு முன்பே தோன்றியது என்கிறார். இதன் மூலம் தொல்காப்பியத்தில் புத்தர் போதித்த கருத்துக்கள் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். புத்தரின் பிறப்புக்குப் பிறகு தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்பது என்னுடைய கருத்து.
மேலும் தொல்காப்பிய நூல் எழுதப்பட்ட காலத்தில் பௌத்தம் வழங்கவில்லை என்று அவர் எண்ணுவதால் தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய சமயத்தை ஆராய முற்படுகிறார். இதனால் அவர் தொல்காப்பியத்தில் இடம்பெறும் சேய், மால், வேந்து, வண்ணம் போன்ற சொற்களுக்கு இயற்கை சார்ந்து விளக்கமளித்து அச்சமயம் இயற்கை சமயம் (இயற்கை அழகு) என்ற கருத்தை முன்வைக்கிறார். இக்கடவுள்களோடு பழந்தமிழ் மக்களின் கடவுள்களுள் ஒன்றாக அவர் கந்தழி என்பதை அடையாளப்படுத்துகிறார். இவற்றை அவர் புத்தர் பிறப்பதற்கு முன்பாக தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய சமயமென்று முன்வைக்கிறார்.
அவர் சுட்டிக்காட்டிய கடவுளின் பெயர்களில் ஒன்றான கந்தழி என்பது பௌத்த மரபை சார்ந்ததாக இருக்கவேண்டும். மணிமேகலைக் காப்பியத்தில் கந்திற்பாவை தெய்வம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. இத்தெய்வம் கந்திற்பாவை அல்லது கந்து தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. எனவே கந்து என்ற பௌத்த தெய்வத்தையே தொல்காப்பியம் கந்தழி என்று குறிப்பிடுகிறது எனலாம்.
அவதம்சக சூத்ரா என்னும் பௌத்த நூலில் கந்தவ்யூகம் என்ற ஒரு அதிகாரம் அல்லது பிரிவு உள்ளது. இப்பெயர் கந்தழி, கந்து ஆகியவற்றோடு சொல் வடிவில் ஒத்துப்போகிறது. கந்தழி என்பது கட்டற்ற ஒன்று. அழுக்காறு (பொறாமை), அவா, வெகுளி (கோபம்), பகைமை முதலிய கட்டுக்களை கடந்த நிலை கந்தழி எனப்படும். கந்தவ்யூகத்தின் தலைவர் சுதன குமாரர் கட்டற்றவராகவும் அழுக்காறு, ஆசை, கோபம், பகைமை போன்ற உணர்வுகள் அற்றவராக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எனவே தொல்காப்பியத்தில் இடம்பெறும் கந்தழி பௌத்த தெய்வம் எனலாம்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
இக்காலத்தில் பௌத்தம் தமிழ்நாட்டில் பரவியது என்கிறார் திரு.வி.க. பௌத்த கருத்துக்களும் இக்கால இலக்கியங்களில் இடம் பெற்றன என்கிறார். நாலடியாரும் திருக்குறளும் பௌத்த நூல்களா என்று பலரும் கேள்வி எழுப்புவததை முன்னிறுத்தி இக்கேள்விக்குத் திரு.வி.க கூறும் பதில் மிகவும் கவனிக்கத்தக்கதாகும் நாலடியாரும் திருக்குறளும் சமண நூல் என்று அவர் கூறினாலும் திருக்குறளில் பௌத்த சமயக் கருத்துக்கள் இருப்பதை அவர் மறுக்கவில்லை. இந்நூலில் பௌத்த சமயக் கருத்துக்கள் மணம் கமழ்ந்து வீசுகிறது என்கிறார். இந்நூல்களைப் பற்றி பேசுகிறபோது அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறும் கருத்து இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
"சமணமும் பௌத்தமும் அறத்தில் பெரிதும் வேறுபட்டது அல்ல, மிகச் சிறு வேறுபாடுகள் உண்டு. அவ்வேற்றுமைகளை ஈண்டுக் கருதுதல் அனாவசியம்" (பக்கம் 12).
"அறத்தில் சமண பௌத்த சமயங்களில் எவ்வித மயக்கமும் எவரும் கொள்ள வேண்டுவதில்லை" (பக்கம் 12).
"சமண அறங்களில் பௌத்த சமயங்களும் ஒன்றிவிடும்" (பக்கம் 13).
இவ்வாறு திரு.வி.க சமண பௌத்த சமயங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை வலியுறுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அவர் அறத்தின் அடிப்படையில் சமணத்தையும் பௌத்தத்தையும் தனித்தனியாக காண விரும்பவில்லை என்பதையே அவருடைய கருத்துக்கள் காட்டுகின்றன.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள் எழுந்த காலகட்டத்தில் வழங்கிய பௌத்தத்தைத் திரு.வி.க "பழம் பௌத்தம்" என்ற சொல்லாடலால் குறிக்கிறார். இக்கால கட்டத்திற்குப் பின்பு உருவாகிய பக்தி இலக்கிய காலகட்டத்தில் வழங்கிய பௌத்தத்தைப் புதிய பௌத்தம் என்றே கூற முயல்கிறார். திரு.வி.க உருவாக்கும் பழைய பௌத்தம், புதிய பௌத்தம் என்ற சொல்லாடல்களை வெவ்வேறு காலகட்டத்தில் வழங்கிய பௌத்தத்தைக் கூறுவதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை. பழம் பௌத்தம், புதிய பௌத்தம் என்று குறிப்பிடுவதன் பின்னணியில் திரு.வி.கவின் சைவத்திமிருக்கு இடமிருப்பதை அறியலாம்.
ஐம்பெரும் காப்பியங்கள்:
ஐம்பெரும் காப்பியங்களில் சீவக சிந்தாமணியும் வளையாபதியும் சமணக் காப்பியம் என்று குறிப்பிடும் திரு.வி.க இந்நூல்களில் பௌத்த அறங்கள் இடம் பெற்றுள்ளன என்று கூறுகிறார். மணிமேகலைக் காப்பியத்தைப் பௌத்த நூல் என்று ஏற்றுக்கொள்ளும் அவர் இந்நூலை அற நிலையம் என்று அழைக்கிறார். சிலப்பதிகாரம் சமணமாக இருந்தாலும் பௌத்தமாக இருந்தாலும் இந்நூலில் பௌத்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்கிறார். இவர்
"புத்தர் பெருமான் உலகிற்கு அறிவுறுத்திய அறம் சிலப்பதிகாரத்தில் எவ்விடத்தில் பொலியாமல் இல்லை? கண்ணகியும் கோவலனும் சோழநாடு விடுத்துப் பாண்டிய நாடு நோக்கி நடந்த வழிகளையும் சோலைகளையும் காடுகளையும் வருணிக்கப் புகுந்த இளங்கோ அடிகள், அவைகள் எல்லாவற்றையும் புத்தர் பெருமான் தர்ம மயமாக்கிவிட்டனர். வழிநடை வருணனையிலும் சிலப்பதிகாரத்தில் பௌத்த அறங்கள் ஒழுகி வழிகின்றனவெனில், மற்றப் பகுதிகளின் அறநிலைகளை அடுக்கி அடுக்கிக் கூறவும் வேண்டுமா" (பக்கம் 14) என்று கூறுகிறார். திரு.வி.கவின் இக்கூற்றை எடுத்துக்கொண்டு சிலப்பதிகாரத்தைப் பௌத்தவியல் கண்ணோட்டத்தில் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்நூலில் திரு.வி.க பௌத்தத்திற்கும் பூதவாதத்திற்கும் இடையே உள்ள உறவை விளக்க முற்படுகிறார். பௌத்தமும் பூதவாதமும் ஒன்று என்று சிலர் கருதுவதை இவர் ஏற்க மறுக்கிறார். பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்று அவர் முன்வைக்கும் கருத்துக்கு மணிமேகலைக் காப்பியத்தையே துணையாக கொள்கிறார்.
பூதவாதம் பௌத்தத்திலிருந்து வேறுபட்டது என்பதை விளக்க மணிமேகலையில் இடம்பெற்றுள்ள சமயக் கணக்கர் திறம் கேட்ட காதையை எடுத்துக்கொள்கிறார். தான் கருதியதை விளக்க நினைக்கும் திரு.வி
கவுக்கு இது அகச்சான்றாகும். இக்கதையில் மணிமேகலை ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த சமயக்கணக்கரை (சமய அறிஞர்) சந்தித்து அவரவர் சார்ந்திருக்கும் சமயத்தின் கருத்துக்களை உரைக்குமாறு கேட்கிறாள். அப்பொழுது பூதவாத சமயத்தைச் சார்ந்த அறிஞரின் கருத்தையும் மணிமேகலை கேட்கிறாள். இவர் கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறாள். பௌத்த சமயத்தை சேர்ந்த மணிமேகலை பூதவாதியின் கருத்தைக் கேட்டு ஏற்க மறுத்ததினால் பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்ற முடிவுக்கு வருகிறார். திரு.வி.கவின் இக்கருத்தை நாம் மீண்டும் மறுபரிசீலனை செய்யலாம்.
மணிமேகலைக்கு பூதவாதி உரைத்தது:-
• இம்மை இல்லை
• மறுமை இல்லை
• மறுபிறப்பு இல்லை
• கர்மம் இல்லை (கர்மா இல்லை)
மணிமேகலைக் காப்பியக் கதை முழுவதும் மறுபிறப்பை உயிர்நாடியாக கொண்டு நகர்கிறது. இக்காப்பியத்தின் பல்வேறு கதாபாத்திரங்களின் பழம் பிறப்பு பற்றி கூறப்படுகிறது. இது மறுபிறப்பைப் பற்றியதாகும். காப்பியத் தலைவியான மணிமேகலைப் பாத்திரம் கூட தன் முந்தைய பிறப்பையும் (இலக்குமி) அடுத்தடுத்த பிறப்பையும் (இறுதி பிறப்பு புத்தர்) அறிந்தவராக இருப்பதால் பூதவாதியின் கருத்துக்களை மணிமேகலை ஏற்க மறுக்கிறாள். எனவேதான் திரு.வி.க பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது. மணிமேகலைக் கதாபாத்திரத்தைப் பௌத்தத்தின் பிரதிநிதியாக பொத்தாம் பொதுவாக பார்க்காமல், இவ்விடத்தில் மணிமேகலையை மகாயான பௌத்தத்தின் பிரதிநிதியாக பார்க்கவேண்டும். மகாயானப் பௌத்தத்தில் இம்மை, மறுமை, மறு பிறப்பு, கர்மா ஆகிய ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
பூதவாதம் என்பது பௌத்தத்தின் மற்றொரு பிரிவாகும். இக்கோட்பாடு ஈனயானப் பௌத்தத்தைச் சார்ந்துள்ளது. மணிமேகலைக் காப்பியம் பல்வேறுவகையான பௌத்த சமயக் கருத்துக்கள் நிறைந்த மாலை போல் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈனயானப் பௌத்தத்தில் இம்மை, மறுமை, மறுபிறப்பு, கர்மா ஆகியவற்றுக்கு இடமில்லை. எனவே பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்று கூறுவதற்குப் பதிலாக மணிமேகலைப் பாத்திரம் பௌத்தத்தின் ஒரு பிரிவைச் சார்ந்துள்ளதைப் போல பூதவாதம் பௌத்தத்தின் மற்றொரு பிரிவாகும். எனவே பௌத்தமும் பூதவாதமும் வேறு வேறல்ல என்பதை உணரலாம்.
மேலும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பூதம் பொய் கூறுதலுக்கு எதிரான பௌத்தத் தெய்வமாக விளங்குவதை அறியலாம்.
சிலப்பதிகார காப்பியத்தில் இடம்பெறும் கதை ஒன்று இதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இளைஞன் ஒருவன் பத்தினிப் பெண் ஒருவளைப் பற்றி தவறாக அப்பெண்ணின் கணவனிடம் கூறுகிறான். இதை அறிந்த பூதம் அவ்விளஞனைக் கொல்லுவதற்குப் பிடித்துக்கொள்கிறது. இதை அறிந்த அவ்விளைஞனின் தாய் அப்பூதத்திடம் வந்து தன் மகனை விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள். தன்னுயிரை எடுத்துக்கொண்டு தன் மகனின் உயிரை விட்டுவிடும்படி அத்தாய் கெஞ்சியபொழுதும், கெட்டவனின் ஒருவனின் உயிருக்குப் பதிலீடாக நல்லவரின் உயிரை எடுப்பது முறையல்ல என்று அப்பூதம் அத்தாய்க்கு மறுப்பு கூறுகிறது. அவ்விளஞனைக் கொல்லுகிறது. இந்த பௌத்தக் கதை பொய்கூறாமையை வலியுறுத்துகிறது.
மேலும், தமிழகத்தில் பூதமங்கலம் என்ற பெயரில் பௌத்த ஊர் இருந்ததை நாம் அறியலாம். இவ்வூரைப் பற்றி மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் "பூதமங்கலம் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று. இவ்வூரில் பிண்டிதாசர் என்றும் வேணுதாசர் என்றும் பெயருள்ள ஒருவரால் அமைக்கப்பட்ட பௌத்தப்பள்ளி ஒன்று இருந்தது என்றும், அப்பள்ளியில் சில காலம் தங்கியிருந்தபோது ஆசாரியர் புத்ததத்த தேரர் 'வினிய வினிச்சயம்' என்னும் பாளிமொழி நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது" என்று கூறுகிறார். எனவே பூதவாதம் எனது பௌத்தத்திலிருந்து வேறானதல்ல, பௌத்தத்தின் ஒரு பிரிவேயாகும். இந்த வேற்பாட்டை திரு.வி.க உணராததால் பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்று அழுத்தமாக கூறினார் போலும். சாதியவாத சமூகத்தில் பௌத்தம் சார்ந்த சொல்லாடல்கள் இழிவுச்சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். உண்மையை வலியுறுத்துவதற்குப் பூததெய்வம் குறியீடாகவும் பௌத்த ஊர்ப்பெயராகவும் விளங்கும் பூதம் என்னும் சொல் இன்றைக்கு எதிர்மறை சொல்லாடலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குண்டாக இருப்பவரைப் பூதம் என்றும் விளங்காத வீட்டைப் பூதம்காத்த வீடு என்றும் இழிவான சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருவதிலிருந்து பூதம் என்னும் சொல் பௌத்த மரபைச் சார்ந்தது என்பதை உணரலாம். பூதவாதம் என்னும் உலோகாயதவாதத்தை இந்துமதக் கொள்கைகள் மறுக்கின்றன என்பதிலிருந்து பூதவாதம் இந்து மதத்திற்கு எதிராக விளங்குகிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
திருமுறைகள், கம்பராமாயணம், புராணங்கள், பிற்பட்ட நூல்கள்:
பக்தி இயக்கத்தார்கள் சமண, பௌத்தத்தைத் தாக்கிய போதிலும் அவர்கள் சமண, பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர் என்றும் அவர்கள் தாக்கிய பௌத்தம் புதிய பௌத்தத்தைத்தான் என்றும் அவர்கள் பழம் பௌத்தத்தைத் தாக்கவில்லை என்றும் கூறுகிறார்.
திருஞானசம்பந்தர்
"இன்னவுரு இன்னநிறம்
என்றறிவதே லரிது நீதிபலவும்
தன்னவுரு வாமென மிகுத்தவன்
நீதியொடு தானமர்விடம்"
- என்று பாடியது பௌத்த தர்மத்தை அடிப்படையாக கொண்டது என்கிறார் திரு.வி.க
திருநாவுக்கரசர் பயன்படுத்திய 'தயாமூல தர்மன்' என்ற மொழி பௌத்தத் தர்மத்தையே முதலாவதாகக் கொண்டது என்கிறார். மேலும் இவரின்
"நீதியால் நினைசெய் நெஞ்சே"
"சீலமும் நோன்பு மாவார்"
"நீதியால் நின்னையல்லால்
நினையுமா நினைவிலனே"
- ஆகிய வரிகளிலும் பௌத்தத்தின் தாக்கம் இடம்பெற்றுள்ளது என்கிறார்.
சுந்தரமூர்த்தி
"தழாதறஞ் செய்ம்மின்"
"சீலமே"
"பண்பே"
- என்று பாடுவதெல்லாம் பௌத்தத்தின் தாக்கம் என்கிறார். இதுபோல இன்னபிற பக்தி இலக்கியங்களிலும் பௌத்தத்தின் தாக்கம் உள்ளது என்கிறார்.
பக்தி இலக்கிய காலத்திற்கு முன்பாக வழங்கிய பழம் பௌத்தம் சிறப்பானது என்றும் பக்தி இலக்கிய காலத்தில் வழங்கிய புதிய பௌத்தம் சீர்கேட்டிற்கு உள்ளாகி வன்முறையோடு வளர்ந்ததால் திருஞானசம்பந்தர் புதிய பௌத்தத்தை சீர்படுத்தவே முயன்றார் என்று திரு.வி.க கூறுகிறார். அவர் பௌத்தத்தை அழிக்க முற்படவில்லை, அவ்வாறு அவர் அழித்து இருந்தால் அது புதிய பௌத்தமே என்று கூறும் திரு.வி.க பௌத்தத்தைப் பழம் பௌத்தம், புதிய பௌத்தம் என்று பிரித்ததன் பின்னணி விளங்கும். இதிலிருந்து திரு.வி.க சைவர்களின் கொடூர செயல்பாடுகளுக்கான நியாயம் கற்பிக்க முயலுகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
சமணர்களின் தலைகள் வெட்டப்பட்டதாக தவறாக பாடல் ஒன்று ஞான சூரியன் என்ற புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். இதைப் பற்றி சற்று விரிவாகப் பேசும் அவர் நூலாசிரியரின் பெயரைக் கூறவில்லை நூலின் பெயர் ஞானசூரியன் என்று கூறியுள்ளார்.
"அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தைசெய்யா அருகர் திறங்களைச்
சிந்தவாது செயத்திரு வுள்ளமே"
- என்ற பாடலில் 'திறங்கள்' என்பதற்குப் பதிலாக 'சிரங்கள்' என்று தவறாக அச்சிடப்பட்டதாகக் கூறுகிறார். இதை நூலாசிரியரிடமே கூறியதாகவும், தன் தவற்றை உணர்ந்த நூலாசிரியர் தன் நூலில் இடம்பெற்றுள்ள சிரங்கள் என்பதை திறங்கள் என்று மாற்ற வேண்டும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்தாராம் என்று திரு.வி.க கூறுகிறார்.
திறங்கள் என்று இருந்தால் சமணர்களின் வலிமையை (திறத்தை) வீழ்த்த வேண்டும் என்று பொருளாகும். சிரங்கள் என்றிருந்தால் சமணர்களின் தலையை வெட்ட வேண்டும் என்று பொருளாகும். ஞானசூரியனின் முதல் பதிப்பில் (1928 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது - திரு.வி.க இவ்வாண்டு தனது உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது ) திரு.வி.க அம்மாற்றத்தைக் கண்டிருக்க வேண்டும். நான் கண்ட ஞானசூரியன் நான்காம் பதிப்பில் (1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது) திறங்கள் என்றே உள்ளது. எனவே திரு.வி.க கூறுகிறபடி நூலாசிரியர் அதை ஏற்றுக்கொண்டு மாற்றியுள்ளார் என்று அறியலாம். இருப்பினும் சைவ, வைணவர்கள் சமணர்களுக்குக் கொடூரமான தீங்கை இழைக்காதவர்கள் என்று கூறமுடியாது.
கம்பரின் ராமாயணத்தைப் பற்றி கூறுகையில் "கம்பர் சமண பௌத்த காவியங்களை நன்கு பயின்றிருந்தார் என்பதற்கு அவர் ராமாயணத்தில் பல சான்றுகளுண்டு" என்று கூறுகிறார். திரு.வி.க கம்பரின் ராமாயணத்தில் ராவணன் சீதையைக் கடத்திச் சென்ற முறை "தமிழ்ப் பௌத்த அறம்" என்று கூறுகிறார். இதை நாம் வால்மீகியின் ராமாயணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையை அவளின் தொடையில் தன் கரங்களை வைத்து தூக்கிச் சென்றார் என்றும் கம்பராமாயணத்தில் சீதையின் மீது தன் கரம் படாமல் தூக்கி சென்றார் என்றும் கூறப்படும் வித்தியாசங்களை உணர்ந்தால் திரு.வி.க மதிப்பிடும் "தமிழ்ப் பௌத்த அறம்" என்பதைப் புரிந்து கொள்ளலாம். கம்ப ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள இக்காட்சி தமிழ்ப் பண்பாடு என்று கூறி வரும் வேளையில் திரு.வி.க அதை "தமிழ்ப் பௌத்த அறம்" என்று கூறுவது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும்.
வால்மீகி இராமாயணத்தில் ராமன், சீதை முதலானோர் புலால் உண்ணுவதும் கம்பராமாயணத்தில் இவர்கள் புலால் உண்ணுவதாக இடம்பெறவில்லை என்பதையும் ஒப்பிடும் திரு.வி.க கம்பரின் இந்த விவரிப்பும் "தமிழ்ப் பௌத்த அறம்" என்று கூறுகிறார்.
ஆரியர்களின் புராணங்கள் கூட பௌத்த ஜாதகக் கதைகள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்து கொண்டு எழுதப்பட்டவை ஆகும் என்று கூறுகிறார். இப்புராணங்களில் உள்ள அறங்களுக்குப் பௌத்தமே மூலம் என்று இவர் கருதுகிறார். தாயுமான சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள் ஆகியோர்களின் பாடல்களிலும் பௌத்தத்தின் தாக்கம் உள்ளது என்கிறார். ராமலிங்க சுவாமிகள் இறைவனை "அருகர் புத்தர் ஆதி என்பேன்" என்று உரைத்ததை எடுத்துக்காட்டி அவரின் பாடலில் பௌத்தத்தின் தாக்கம் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறார்.
இவ்வாறு தமிழில் பௌத்த இலக்கியத்தின் வரலாற்றை விவரிக்கும் திரு.வி.க பௌத்தத்தின் பண்பாட்டு வரலாற்றையும் கூறிவிடுகிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும். இவ்வுரையில் (1928 இல் நடந்தது ) திரு.வி.க 25 ஆண்டுகளுக்கு முன்பாக ராயப்பேட்டையில் நிகழ்ந்த கூட்டமொன்றை நினைவு கூறுகிறார். அக்கூட்டத்தில் லட்சுமி நரசு நாயுடு உரையாற்றியதாகவும் அக்கூட்டத்தில் தான் அமர்ந்து அவர் உரையை கேட்டதையும் நினைவுகூறும் திரு.வி.க லட்சுமி நரசு அக்கூட்டத்தில் அரங்கநாதர் என்பது புத்தரையே குறிக்கும் என்று விளக்கிக் காட்டியதை எடுத்துரைக்கிறார். இதை திரு.வி.க ஏற்றுக்கொள்கிறார். எனவே அரங்கநாதர் என்ற பெயரில் வழங்கி வரும் இந்துக்கோயில்கள் பௌத்தக் கோயில்களாக இருந்தவை என்றும் இப்பௌத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டன என்றும் அறியலாம்.
திரு.வி.க "சிவபிரான் கோயில்களின் விழாக்களை உற்றுநோக்கி ஆய்ந்தால் புத்தர் வாழ்வு செவ்விதிற் புலனாகும்" என்று கூறுகிறார். ஒரு சைவர் இப்படி கூறியிருந்தது மிகவும் முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு அவர் கூறிய கூற்றுக்கு அவரே தான் கண்ட காட்சியை விளக்குகிறார்.
1928ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவைப் பற்றி விளக்குகிறார். பத்து நாள் திருவிழா நடைபெற்ற இக்கோயிலில் தேர்விழா முதலியன நடைபெற்ற பிறகு "பிச்சாண்டி சேவை" என்ற ஒன்று நடைபெறுகிறது பற்றி அவர் கூறுகிறார். பிச்சாண்டி சேவையைப் பற்றி கூறுகையில் "கௌதமர் அரச வாழ்வு நீத்து நிர்வாண நிலை யெய்தியதையன்றே அறிவுறுத்துகிறது? பிச்சாண்டி சேவைக்கு முந்திய சேவைகள் புத்தர் பெருமானின் முன்னைய அரச நிலையை அறிவிப்பந. பிச்சாண்டி சேவை அவரது பின்னைய அறநிலையைத் தெரிவிப்பது" என்று கூறுகிறார். இவ்வாறு கூறும் திரு.வி.க "பௌத்தம் பலதுறைகளிலும் இந்துமதத்தில் நுழைந்திருக்கிறது" என்று கூறுகிறார். இவ்விழா இந்து மதத்தில் நுழைந்து விட்டது என்கிற கருத்தை இவர் முன்வைக்கிறார் எனலாம். ஆனால் திருமயிலை கபாலீஸ்வரர் கோயிலைப் பௌத்தக் கோயில் என்று அவர் கூறவில்லை என்றாலும் அவர் அங்கு நடைபெற்ற திருவிழாவைப் பற்றி விளக்கும் முறையிலிருந்து கபாலீஸ்வரர் கோயில் பௌத்தக் கோயில் என்று நாம் அறிந்து கொள்ளலாம். இது மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயில் பௌத்தக் கோயில் என்று அறிஞர்கள் பலரும் கூறி வருவதை உறுதிப்படுத்துகிறது.
திரு.வி.கவின் இவ்வுரை முக்கியமான வரலாற்றுக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரை என்பதோடு தீவிர சைவர் பௌத்தத்தின் இலக்கிய வரலாற்றைப் பற்றி பேசினார் என்பது முக்கியமானதாகும். இதற்கு அப்போதிருந்த பௌத்தச் சூழலே காரணம் எனலாம். இவ்வுரை பௌத்தத்தின் மீது பெரும் உரையாடலை ஏற்படுத்திப் பௌத்தத்தின் இலக்கிய வரலாற்றை மட்டுமல்ல பௌத்தத்தின் பண்பாட்டையும் கட்டமைக்க உதவுகிறது எனலாம்.
துணைநூல்கள்:
1. இலக்கியத் திறனாய்வு, ஈஸ்வரன் ச., சாரதா பதிப்பகம், சென்னை, 2014.
2. சிலப்பதிகாரம், இளங்கோவடிகள், சாமிநாதையர் (பதி), டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 2013.
3. ஞான சூரியன், சுவாமி சிவானந்த சரஸ்வதி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1935.
4. தமிழ் நூல்களில் பௌத்தம், கலியாணசுந்தர முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1929.
5. பௌத்தமும் தமிழும், வேங்கடசாமி., வள்ளிநாதன் கா.ஏ. (பதிப்பாளர்), சென்னை, 1940.
6. மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், சாமிநாதையர் (பதி), டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 2013.
7. Buddhism in Tamilnadu a new perspective, Shu Hikosaka, Institute of Asian Studies, Madras, 1989.
8. The flower of ornament scripture Translation of Avatamsaka sutra, Thomas Cleary (Tran.), Shambhala, London, 1993.
No comments:
Post a Comment