Wednesday, January 22, 2020

வள்ளுவப்பறையனால் சங்கப்பலகை அழிந்ததெனும் கதையாடல்!

பண்டிதர் ஒரு பைசா தமிழன் (1907) இதழைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஞானபோதினி என்னும் மாதாந்திர இதழ் 1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியராக பூர்ணலிங்கம் பிள்ளை இருந்தார். இவ்விதழ் மாதந்தோறும் கற்றறிந்தவர்களின் தன்மையை வெளிப்படுத்தும் வள்ளுவரின்
"தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்" என்ற குறளை முதல் பக்கத்தில் தாங்கியபடியே வந்தது.

இவ்விதழ் தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்து பூர்ணலிங்கம் பிள்ளை கூறுகையில் ஏற்கனவே வெளியிடப்பட்டும், வந்துகொண்டிருக்கும் இதழ்களின் போக்குகளை அல்லது அவற்றின் தன்மைகளை சுட்டிக்காட்டுகிறார்.

1. பல பத்திரிக்கைகள் இந்நாட்டில் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை வாரந்தோறும் சமாசாரக் குறிப்புகள், இளைஞருக்கேற்ற எளிய நடையில் பல வினோத கதைகளோடு வந்தன.

2. சில பத்திரிகைகள் மதக்கோட்பாடுகளையும் பிற மதத்தின் மீது துவேசங்களையும் தருகின்றன போன்ற குற்றச்சாட்டுகளை பொதுவாக முன்வைத்த பூர்ணலிங்கம் பிள்ளை ஒரு இதழின் பெயரையும் அதன் ஆசிரியர் பெயரையும் சுட்டியே அவ்விதழின் குறைபாட்டினை முன்வைக்கிறார்.

ஸ்ரீ சபாபதி நாவலர் அவர்களால் நடத்தப்பட்ட ஞானாமிர்தம் இதழ் பெரும்பாலும் சைவ சமய கருத்துக்களைத் தாங்கி வந்ததால் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களால் மட்டுமே ஆதரிக்கப்பெற்று, பின் சைவர்கள் தங்களது ஆதரவை கைவிட நாளடைவில் இவ்விதழ் அழிந்துபோனது என்கிறார் பூரணலிங்கம் பிள்ளை. இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் மதக்கோட்பாட்டிற்கு ஞானபோதினி இதழ் முன்னுரிமை அளித்ததோடு மட்டும் இல்லாமல் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டது என்பதற்கு இவ்விதழில் வெளிவந்துள்ள செய்திகளே சான்றாகும்.

இவ்விதழ் வள்ளுவரின் குறளை மாதந்தோறும் தாங்கி வந்ததோடு மட்டும் இல்லாமல் வள்ளுவரைப் பற்றிய கதையாடலையும் பதிவு செய்து ஆய்வுக்குட்படுத்தியது என்பது இங்கு முக்கியமானதாகும்.

1897ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத இதழில் "தமிழின் நிலைமை" என்ற தலைப்பில் மு. முத்துராமலிங்கம் பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரையில் (தொடர்கட்டுரை) கடைச்சங்க காலத்தில் ஜைனமதம் நிலவி இம்மதத்தைச் சேர்ந்த பல நூல்கள் இச்சங்கத்தில் அரங்கேறியதாக கூறும் உரையாசிரியர்களின் கருத்தை முன்வைத்து திருவள்ளுவநாயனார் மதம் ஜைனம் என்று உரையாசிரியர் கூறுவதையும் எடுத்துக்கூறுகிறார். இதன்படி வள்ளுவர் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த ஜைனர் என்று இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு 1898ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த இதழில் தி.மிட்டாதார் சேஷகிரி சாஸ்திரியார் "தமிழ்க்கவி சரிதம்" என்ற தலைப்பில் எழுதிய தொடர்கட்டுரையில் வள்ளுவர்ப் பற்றிய கட்டப்பட்ட கதையாடலை கேள்விக்குட்படுத்துகிறார்.

வள்ளுவர் பறையர் சாதி என்பதால் அவர் இருந்த சங்கம் தீட்டுப்பட்டு அச்சங்கம் அழிந்துபோனது என்று பெரும்பாலோர் நம்புவதை மிட்டாதார் பதிவு செய்கிறார். இதை அவர் "வள்ளுவர் பறையர் அல்லது தாழ்ந்த சாதியினராயினானே அவர் வீற்றிருத்தலும் அந்த பரிசுத்த புண்ணியாசநமாகிய சங்கப்பலகை தோஷமெய்தித் தீண்டப்படாததாயிற்று என்றும், அதனானேயே அச்சங்கம் முழுவதும் அழிந்தது என்றும் பொதுப்படப் பெரும்பாலார் நம்புகின்றனர்" என்று கூறியுள்ளார். இதனை கடுமையாக மறுக்கும் மிட்டாதாரர் இக்கதை முழுப்பொய் என்கிறார். மேலும் இது சில தமிழ்ப் பண்டிதர்களால் புனையப்பட்ட புனைவு என்று கூறும் இவர் பண்டிதர்களின் புனைவை வலியுறுத்தும் வகையில் சென்னையிலுள்ள துரைத்தனத்தார் ஏற்படுத்திய கீழைத்தேயக் கையெழுத்துப் புத்தக சாலையில் காணப்படும் ஓர் உள்நாட்டுக் குறிப்பும் உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வாறு வள்ளுவரின் மீது கட்டப்பட்ட கதையை மறுக்கும் மிட்டாதாரர் இத்தோடு நின்றுவிடாமல் வள்ளவன் என்ற சொல்லுக்குரிய பொருண்மையை ஆராய்கிறார். தமிழில் வள்ளுவன் என்றால் கற்றறிந்தவன் என்று பொருள் கூறும் அவர் வள்ளுவர்க்கு இப்பெயர் கல்வியில் மிகுந்தவர் என்பதால் வந்தது என்கிறார். வள்ளுவன் என்றால் அரண்மனைக்கு கிரியாவிசேட மேற்பார்வை யுத்திகோகஸ்தன் என்று விளக்கம் தரும் பிங்கலந்தைநிகண்டின்
"வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னர்க், குள்படுங் கருமத் தலைவற் கொன்றும்" என்ற சூத்திரத்தை எடுத்துக்காட்டி இதேபொருளில் வள்ளுவர் என்ற சொல் கம்பராமாயணத்தில் செயலுறுவதை
"என்புழி வள்ளுவ ரியானை மீமிசை
நன்பறை யறைந்தனர் நகர மாந்தரும்
மின்பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால்
இன்பமென் றளக்கரு மளக்க ரெய்தினார்" என்ற பாடல் வழி எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும், சூடாமணி நிகண்டில் இச்சொல் நிமித்திகன் என்பதன் பரியாய பதமாமக் கூறப்பட்டுள்ளது என்பதை "வருநிமித் திகன்பேர் சாக்கை வள்ளுவனென்று மாகும்" என்ற சூத்திரத்தை எடுத்துக்காட்டுகிறார். நிமித்திகர் என்ற பொருளில் மிட்டாதாரரின் சமகாலத்தில் வழக்கில் இருந்ததை பதிவு செய்யும் இவர், நிமித்திகன் என்பது "பறையர்கட்குள் ஐயமேற்றுண்பானும் சோதிடமும் வாகடமும் வல்லோன் எனப்படுவானுமாகிய ஒருவனையே பெரிதுங் குறிப்பதாகக் கூறுவர் பலரும்" என்று கூறி இதை மறுக்கும் வண்ணம் "திருவள்ளுவர் பறையரல்லர்" என்கிறார்.

மேலும், வள்ளுவரின் சமயம் பற்றி பேசுகையில் சைனர் அல்லது பௌத்தராகவே இருப்பதை நம்புவதற்கு ஏற்ற காரணங்கள் உண்டு என்கிறார். ஏனென்றால் வள்ளுவர் இந்துக்களின் கடவுளைப் பற்றி புகழ்ந்துபாடவில்லை என்பது அவரது அழுத்தமான கருத்து. பறையர் சமூகத்தை சார்ந்த சிலர் நவீன காலத்தில் வள்ளுவர் ஆகியதால் இதை பண்டைய காலத்தில் இருந்த வள்ளுவரோடு முடிச்சிப்போட்டு இத்தகைய இழிவு சார்ந்த சாதியில் இருந்து வந்தததனால் சங்கப்பலகை அழிந்துபோனது என்ற எண்ணத்திற்குப் பலர் வந்திருக்க வேண்டும் என்கிற மிட்டாதாரரின் கருத்துக்கு நம்மிடம் மாற்றுக்கருத்து உண்டு. ஏனெனில் பறையர்கள் பூர்வ பௌத்தர்களாய் இருந்தபோது அவர்களின் மதகுருக்கள் வள்ளுவர் என்றே அழைக்கப்பட்டனர் என்பது வரலாறாகும். சைனர்கள் தாம் அறிந்த நூலுக்கு கற்றறிந்தவர் என்னும் உயர்வுப்பொருளை வழங்க அந்நூலின் ஆசிரியருக்கு வள்ளுவர் என்று வழங்கியிருக்கலாம் என்று கூறுகிறார். ஏனெனில் சைனர்கள் திருக்குறளை எழுதியது ஏலாசாரியார் என்று கூறுவதேயாகும்.

இங்கு விவரிக்கப்பட்ட விடயங்களிலிருந்து பறையர்கள் வள்ளுவர்கள், வள்ளுவர்கள் பௌத்தர்கள், பௌத்தர் இயற்றிய நூல் திருக்குறள், எனவே குறளின் ஆசிரியரைப் பௌத்தர் என்றுணர்ந்தோர் அவரை இழிவுப்படுத்தும் வகையில் பறையர் என்று கூறி அவரால்தான் சங்கப்பலகை அழிவுற்றது என்று கூறியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்வது ஒருபக்கம் இருந்தாலும் சைனப்பௌத்தர்களால் கட்டப்பட்டதுதான் சங்கப் பலகை என்பதை மறுத்துவிடமுடியாது.

No comments:

Post a Comment