தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலுக்கு நானும் சகோதரர் மணிமாறன் அவர்களும் கள ஆய்வுக்காக சென்றிருந்தோம். இங்குள்ள குன்றில் இரண்டு முக்கியமான விடயங்கள் உள்ளன. ஒன்று குன்றின் உச்சியில் இருக்கும் பள்ளி, மற்றொன்று குன்றின் அடியில் இருக்கும் தமிழ்ச் சமண தீர்த்தங்கரர்கள் வீற்றிருக்கும் தியானமண்டபமும் உலக புகழ்பெற்ற சித்தன்னவாசல் ஓவியமும் ஆகும். சித்தன்னவாசல் வரலாற்றில் பெரிதும் கவனப்படுத்தப்பட்டது இவ்விரண்டுதான்.
ஆனால், ஆய்வாளர்களால் இதுவரை கவனப்படுத்தப்படாத மற்றொரு விடயம் சித்தன்ன வாசலின் குன்றுக்கு மேற்கே உள்ள பால்குடிக்கும் அய்யனார் சிலைதான். ஆயிரம் ஆண்டு பழமையானது என்று மதிக்கத்தகும் இவ்வய்யனார் சிலையை இவ்வூர் மக்கள் பால்குடிக்கும் அய்யனார் என்றே அழைக்கின்றனர்.
மேற்குத் திசையில் குன்றின் அடிவாரத்தில் ஒரு அய்யனார் கோவிலும் பால்குடிக்கும் அய்யனாரும் என இரண்டு அய்யனார்கள் இங்கு உள்ளனர். பால்குடிக்கும் அய்யனார் சிலையும் அதனுடன் அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெண்தெய்வ சிலையும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது தனி இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு அய்யனார்களும் அருகருகே உள்ளனர். தனித்தனியே இவை வழிபடப்படுகின்றன.
பால்குடிக்கும் அய்யனாரைப்பற்றி இவ்வூர் மக்கள் கூறும் கதை மிக முக்கியமானதாகும். தினமும் அதிகாலையில் பால்விற்கும் ஒருவர் ஒருநாள் பக்கத்து ஊருக்கு விற்க செல்லும்போது ஓரிடத்தில் பால்பாத்திரம் கவிழ்ந்து விழுந்து பால் முழுவதும் கொட்டிவிடுகிறது. பிறகு தினந்தோறும் அவர் பால்விற்க செல்லும்போது முதல்நாள் பால்கொட்டிய இடத்திலேயே பால்கொட்டியுள்ளது. ஒருநாள் இரண்டு நாள் என்றால் தவறி விழுந்துவிட்டது என்று நினைக்கலாம், தினமும் கொட்டுகிறது, அதுவும் கொட்டிய இடத்திலேயே பால்கொட்டுகிறது, இது என்னடா இது, இதை கண்டுபிடித்தாக வேண்டும் என்று பால்காரர் எண்ணினார். இச்செய்தி ஊரெல்லாம் பரவியது. அடுத்த நாள் காலையில் பாலெடுத்து செல்லும்போது மீண்டும் அந்த இடத்தில் கொட்டிவிடவே அந்த பால் எங்கே செல்கிறது என்று பார்க்கத் தொடங்கினார். பால் முழுவதும் ஒரு குழிக்குள் செல்லுவதைப் பார்த்த அவர் அந்த இடத்தை கடைப்பாறையால் தோண்டிபார்த்தபோது அங்கு அய்யனார் சிலை இருந்தது. அந்த சிலையை எடுத்துவைத்து வழிபடத்தொடங்கிய அவ்வூர் மக்கள் இச்சிலையைப் பால்குடிக்கும் அய்யனார் என்று அழைத்து பால் ஊற்றி வழிபட்டு வந்தனர். இவ்வாறு இந்த கதை அமைகிறது.
சித்தன்னவாசலில் மக்கள் கூறும் கதையைப் புரிந்துகொள்ளுவதற்கு இங்கு மயிலை சீனி. வேங்கடசாமி காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோயிலைப் பற்றி கூறும் செய்தி மிக முக்கியமானதாக எண்ணுகிறேன். காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்றும் இக்கோயில் பிற்காலத்தில் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டது என்றும் அரசாங்க சிலாசாசன ஆராய்ச்சியாளர்களே கூறுவதாக கூறுகிறார். இக்கோயிலில் ஐந்தாறு புத்தர் சிலைகள் இன்றைக்கும் காணப்படுகின்றன என்று அவர் 1940ல் கூறுகிறார். இச்சிலைகளில் பெரியதாகவும் நின்றநிலையில் இருக்கும் புத்தர்சிலை இக்கோயில் உட்பிரகாரத்திலேயே இருக்கிறது என்று கூறும் மயிலையார் இச்சிலைக்கு இப்பொழுது 'சாத்தன்' (சாஸ்தா) என்று வழங்குவதாக குறிப்பிடுகிறார். இத்தோடு இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது மயிலையார் காஞ்சி காமாட்சி அம்மனைப் பற்றிய "காமாட்சி லீலாப் பிரபாவம்" என்னும் நூலில் இடம்பெற்றுள்ள செய்தியை எடுத்துக்காட்டுவது ஆகும். இந்நூலில் சாஸ்தா அல்லது சாத்தன் "தேவியின் முலைப்பால்" உண்டு வளர்ந்ததை எடுத்துக்கூறுகிறார்.
பௌத்தக் கோயிலாகிய காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் புத்தர் தேவியின் முலைப்பாலை உண்டார் என்பதையும் சித்தன்னவாசலில் உள்ள சாஸ்தாவாகிய அய்யனார் பால்குடித்தார் என்ற கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பால் குடித்தல் என்பது பொதுவாக இருப்பதை அறியமுடிகிறது. மேலும் தமிழ்ப்பௌத்த மரபில் பௌத்த தெய்வங்கள் பால் குடித்தல் பற்றிய கதையாடல்கள் இருப்பதையும் அறியமுடிகிறது. இக்கதையாடல் வடிவம் சாத்தனின் பெயரிலும் அய்யனாரின் பெயரிலும் வழங்குகின்றன என்பதோடு மட்டுமில்லாமல் புத்தர் வாழ்க்கை வரலாற்றிலும் அவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
புத்தர் உலகத்தின் மெய்மையை அறியும் பொருட்டு உருவேலாவில் உண்ணாமல் நீண்டகாலம் கடுந்தவம் மேற்கொண்டார். உண்ணாமல் கடுந்தவம் மேற்கொள்வதால் ஞானத்தை அடையமுடியாது என்பதை உணர்ந்த புத்தர் அத்தவத்தை கைவிடுகிறார். அப்பொழுது புத்தருக்கு "பால்சோறு" வழங்கியவர் சுஜாத என்கிற பெண்மணி ஆவார். இப்பெண்மணி பிற்காலத்தில் பிக்குணியாக மாறினார். இப்பெண்மணி உணவு அளித்த பிறகு புத்தர் ஆற்றல் பெற்றார் என்று கூறும் ஜப்பானிய மருத்துவ மூதறிஞர் மஷாஷி செகாவா தான் எழுதிய "பௌத்தமும் பாலூட்டுதல்" என்ற கட்டுரையில் ஜப்பானின் இடைக்காலத்தில் அதிகரித்து வந்த குழந்தைகளின் இறப்பை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பௌத்தம் மிக முக்கிய கருத்தியல் பங்களிப்பை அளித்ததை எடுத்துக்காட்டுகிறார். இதன் விளைவாக ஜப்பானின் பல பௌத்த விகார்களில் குழந்தைகளுக்குப் பால் கிடைப்பதற்காக வேண்டுதல் நிகழ்த்தப்படுவதாக அவர் விரிவாக எழுதுகிறார். இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது சுஜாதா புத்தருக்கு பால்சோறு ஊட்டியது ஜப்பானின் வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பததைத்தான்.
சுஜாதா புத்தருக்கு பால்சோறு ஊட்டியது ஜப்பானின் வரலாற்றில் ஊட்டச்சத்து சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதை நினைவில் கொண்டு காமாட்சி லீலாப் பிரபாவம் குறிப்பிடும் செய்தியை அணுகினால், அத்தேவி சுஜாதா என்றும் சாத்தன் புத்தர் என்றும் நாம் விளங்கிக்கொள்ளலாம். பௌத்தத்தில் பால் உண்ணுதல் என்பது ஊட்டச்சத்தின் குறியீடு என்பதை புத்தரின் வரலாற்றிலிருந்து அறியலாம். உணவு உண்ணாமல் கடுந்தவத்தை மேற்கொண்ட புத்தர் தன் வயிற்றில் கையை வைத்தால் தன் முதுகெலும்பைத் தொடுவதாகவும் தன் முதுகெலும்பில் கையை வைத்தால் தன் வயிற்றில் கை இருப்பதாகவும் உணரும் அளவிற்கு அவர் மெலிந்திருந்த நிலையில் அவருக்கு சுஜாதாவால் அளிக்கப்பட்ட பாலுணவு புத்துயிர் பெற்றுவருவது அல்லது ஊட்டச்சத்தின் குறியீடாகவே ஜப்பானின் வரலாற்றில் இருந்ததை நாம் அறியலாம். இது போல சித்தன்னவாசலில் உள்ள பால்குடிக்கும் அய்யனார் என்பது பௌத்த மரபில் ஒரு வளமையான அல்லது செழிப்பான குறியீடாக புரிந்துகொள்ளலாம். மேலும் புத்தர் பற்றிய கதையாடலை அவர்களின் நினைவில் வேறுவடிவத்தில் பௌத்த அய்யனாரின் பெயரில் வைத்திருந்தனர் என்று விளங்கிக்கொள்வதில் மாபெரும் பௌத்த கதையாடலே அடங்கியிருப்பதை புரிந்துகொள்வதற்கு நிகரானதாகும்.
குன்றுக்கு மேற்குத்திசையில் இன்றைக்கு அமைந்துள்ள பூங்கா இருக்கும் இடத்தில்தான் சித்தன்னவாசல் மக்களின் பூர்வகுடிகள் வாழ்ந்துள்ளனர். இடைக்காலத்தில் ஆவுடையார் கோயிலில் இருந்து இவ்வூரில் இல்லாத சாதியொன்றாகிய பிள்ளை சாதியிலிருந்து ஒருவரை இவ்வூரில் நியமித்துள்ளதாக இவ்வூரார் கூறுகின்றனர். இவ்வூர் பாரம்பரியமாக பௌத்த அடையாளத்தையும் தமிழ்ச் சமண அடையாளத்தையும் சுமந்து வந்த ஊர் என்றால், இவ்வூரில் வாழ்ந்த பௌத்தர்களையும் சமணர்களையும் அழித்தது யார் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். இவ்வூரில் சம்மந்தமில்லாத பிள்ளைசாதியை சார்ந்த ஒருவரை சைவத்தின் பிரதிநிதியாக நியமித்தது என்பது பௌத்த, சமணத்தை அழிப்பதன் முதல்கட்ட வேலையாகும் என்று யூகிக்கலாம்.
சித்தன்னவாசலில் பௌத்தர்களும் தமிழ்ச் சமணர்களும் பூர்விகமாக இருந்துவந்தனர் என்பதற்கு பால்குடிக்கும் அய்யனாரின் சிலை, சமணர்களின் சிலைகள், பௌத்தப்பள்ளி, மக்களின் மனதில் இருக்கும் வரலாறு யாவும் சான்றுகளாக உள்ளன.
இப்பொழுதும் பால்குடிக்கும் அய்யனாருக்கு நிகழ்த்தப்படும் விழாவில் மிக முக்கியமான நிகழ்வு இங்குள்ள சிறியமலையை முழுவதும் சுற்றிவருவதாகும். இது ஆதிகாலத்திலிருந்தே பின்பற்றப்படும் நிகழ்வாகும். இதை அடிப்படையாக கொண்டு பார்த்தால் இங்குள்ள குகைபள்ளியை பௌத்த துறவிகளும் தமிழ்ச் சமணத் துறவிகளும் பொதுவாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறலாம்.
இதுவரை எந்த ஆய்வாளர்களாலும் கவனப்படுத்தப்படாத சித்தன்னவாசல் பால்குடிக்கும் அய்யனாரின் சிலை பௌத்தத்தின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை கதையாடலின் மூலம் சுமந்திருப்பதோடு மட்டும் இல்லாமல் சித்தன்னவாசலுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே உள்ள பலமான உறவை தாங்கிநிற்கக் கூடிய ஒரு பௌத்த அய்யனார் சிலையாகவும் அது நிற்கிறது என்பது மறுக்கமுடியாத வரலாற்று உணமையாகும்.
பால்குடிக்கும் அய்யனார் பௌத்த வரலாற்றில் செழிப்பின் குறியீடாகும்!
No comments:
Post a Comment