இன்றைய தமிழ்நாடு 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோது உருவானது. இதன் தலைநகரம் மெட்ராஸ். இதன் பரப்பளவு 1,30,069 சதுர கி.மீ. ஆகும்.
பௌத்தத்தின்
பெரும் கொடையாளர்கள்:
தமிழ்நிலத்தில் பௌத்தத்தின் முதல்
கொடையாளர் சந்தேகமில்லாமல் பேரரசர் அசோகரே ஆவார். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இவர் காஞ்சியில்
ஸ்தூபிகளைக் கட்டினார். இங்கு புத்த விகாரை மன்னன் கிள்ளிவளவன் கட்டினார் என்று தமிழ்
செவ்வியல் இலக்கியமான மணிமேகலை காப்பியம் கூறுகிறது. இம்மன்னன் ஒரு தோட்டத்தை பௌத்த
சங்கத்திற்கு அளித்தார் என்றும் இக்காப்பியம் கூறுகிறது. இத்தோட்டத்தில் புத்தரின்
பாதச்சுவடு வடிக்கப்பட்டது. கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் செம்மையாக ஆட்சி புரிந்த
முதல் பல்லவ மன்னன் ஸ்கந்தவர்மன் பௌத்தத்தின் வளர்ச்சிக்கு உதவினார். இவரின் மகன் புத்தவர்மனின் மனைவி சாருதேவி வழிங்கிய கொடை பற்றிய
செப்பேட்டில் யுவராஜ் என்று சிறப்பிக்கப்பட்டுள்ள புத்தவர்மன் ஒரு பௌத்தராவார். ஸ்கந்தவர்மனின்
மற்றொரு மகனின் பெயர் புத்தயங்கரர் ஆகும்.
ஸ்கந்தவர்மனுக்குப் பிறகு ஆறாம் நூற்றாண்டுவரை
தமிழ்நாட்டின் வரலாறு தெளிவானதாக இல்லை. இக்காலம் சில அறிஞர்களால் வரலாற்றின் இருண்டகாலம்
என்று அழைத்தனர். மேலும் களப்பிரர்களின் தெளிவற்ற காலம் என்று கூறினர். இதுமட்டுமில்லாமல்
தொண்டை மண்டலத்திலுள்ள காஞ்சிபுரம் பகுதியில் ஆட்சிக்கு வந்த களப்பிரர்களைக் காட்டுமிராண்டிகள்
என்றும் நாகரிகத்தின் எதிரிகள் என்றும் அழைத்தனர். இக்காலத்தைப் பற்றி கே.ஏ. நீலகண்ட
சாஸ்திரி பின்வருமாறு கூறுகிறார்: “சங்க காலத்திற்குப் பிறகு நீண்ட இருண்ட காலமாக உள்ளது.
சங்க காலத்திற்குப் பிறகு மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேல் உள்ள காலம் பற்றி நமக்கு
சிறிதளவே தெரிகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் மர்மமாக இருந்த நாகரிகம்
பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இக்கொடுங்கோலர்கள் களப்பிரர்கள் (களப்பாளர்) என்றழைக்கப்பட்டனர்.
இவர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அரசியல் நிலையை சீர்குலைத்தனர். இது மீண்டும் பாண்டியர்களும்
பல்லவர்களும், பாதாமியின் சாளுக்கியர்களும் களப்பிரர்களைத் தோற்கடித்த பின்னர் நிலைநிறுத்தப்பட்டது”.
தென்னிந்திய வரலாற்றில் களப்பிரர்களை அடையாளப்படுத்துவது
மிகப்பெரிய கேள்விக்குரியாக இருக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் ஆந்திராவில்
உள்ள திருப்பதியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து களப்பிரர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்தனர்
என்கிற கருத்து இப்பொழுது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பதி மலைகள் பண்டைய
காலத்தில் புல்லிகுன்றம் அல்லது சிற்றரசன் புல்லியின் மலை என்று அழைக்கப்பட்டது. வேங்கட
மலைகளில் இருந்த களவர் பழங்குடியினர்களின் சிற்றரசனாக புல்லி இருந்தார் என்று சங்ககால
இலக்கியங்கள் கூறுகின்றன. இம்மலையின் பெயர் வேங்கடம். பழம்பெரும் புலவராக விளங்கும்
மாமூலனார் வேங்கடம் பற்றி ஏழு பாடல்களில் குறித்துள்ளார். இவர் வேங்கடம் களவரின் தலைவனான
புல்லியின் மலை என்று குறிப்பிடுகிறார். மேலும், வேங்கடம் இங்கு நடைபெறும் விழாவுக்குச்
சிறப்பானது என்றும் குறித்துள்ளார். மற்றொரு பாடலிலும் திருப்பதியைப் புல்லிகுன்றம்
என்றும், இம்மலையின் தலைவர் புல்லி என்றும் குறித்துள்ளார். புல்லி மிகச்சிறந்த கொடையாளர்
என்று மற்றொரு பாடல் கூறுகிறது. புல்லி களவரர் அல்லது களப்பிரர் மரபைச் சார்ந்தவர்
என்றும் இவர் அரசியல் நெருக்கடியால் வேங்கட பகுதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இடம்பெயர்ந்து
இங்கு தன்னுடைய ஆட்சியை நிறுவினார் என்றும் கூறப்படுகிறது. டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி
ஐயங்கார் “பல்லவர்களும் ஆந்திரப் படைகளும் வடக்கிலிருந்து மேற்கிலிருந்தும் கொடுத்த
அழுத்தங்களால் வேங்கடத்திலிருந்த மக்கள் அவ்விடத்தைவிட்டு வேறுவழியில்லாமல் நேராக தொண்டை
மண்டலத்திற்கு முதலில் குடியேறினர். பிறகு சோழமண்டலத்தில் குடியேறினர்……தொண்டை மண்டலத்தின்
வடக்கிலிருந்த களவர்களுக்கு அல்லது களப்பிரர்களுக்கு ஆந்திரர்கள் அழுத்தம் கொடுத்ததால்
தொண்டை மண்டலத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். இன்னும் தெற்கை நோக்கி நகர்ந்தனர். இந்த
களப்பிரர்கள்தான் பாண்டிய நாட்டு வேள்விக்குடி செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளபடி அரசியல்
குழப்பத்தை விளைவித்தனர்” என்று கூறுகிறார்.
ஆர். சத்தியநாத ஐயர் “தென்னிந்திய வரலாற்றில்
களப்பிரர்களைப் பற்றி அறிவது மிகவும் கடினமாகும். இவர்கள் கொண்டுபலூரின் முத்தரைவர்
(கி.பி. 8நூ – 11நூ) என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கர்நாடக பகுதியிலிருந்து
மதுரையை ஆள்வதற்கு வந்தவர்கள் என்று தமிழிலக்கிய குறிப்புகளின் துணையைக் கொண்டு சிலர்
கூறுகின்றனர். களப்பாளர்களே களப்பிரர்கள் என்றும் இவர்கள் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
என்றும் தமிழிலக்கியம் மற்றும் செப்பேடுகளின் துணையைக் கொண்டு சிலர் கூறுகின்றனர்.
ஆனால், களப்பாளர்களே களப்பிரர் என்பதும் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள இப்பழங்குடி
இனத்தின் தலைவர்கள் பவித்திரி என்னும் இடத்தைச் சேர்ந்த திரையர் என்றும் வேங்கடம் அல்லது
திருப்பதியின் புல்லி என்றும் கூறப்படும் கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளது. புல்லி
ஆநிரையைக் கவர்பவர் என்று விளக்கப்பட்டுள்ளது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட
அரசியல் நிகழ்வுகளால் திருப்பதி அருகே வாழ்ந்த களவர்கள், அவ்விடத்திலிருந்து துரத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சாதவாகனர்களின் வீழ்ச்சியால் தொண்டை மண்டலத்தில் ஏற்பட்டிருந்த அரசியல்
குழப்பம் ஏற்பட்டது. களப்பிரர்களின் படையெடுப்பு பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்களை
வெற்றிக்கொள்ளச் செய்தது” என்று கூறுகிறார்.
களப்பிரர்கள் “கொடுங்கோல அரசர்கள் (கலி
- அரசர்) என்றும் பல ஆதிராஜாக்களை வென்றவர்கள் என்றும் பிரம்மதேயத்தினைப் பறித்தவர்கள்
என்றும்” பிராமணீய இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், களப்பிரர்கள் காட்டுமிராண்டிகளோ
நாகரிகத்தின் எதிரிகளோ இல்லை என்றும் அவர்கள் மிகவும் நாகரிகமானவர்கள் என்றும் நவீன
அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தில்தான் சிறந்த தமிழ்
இலக்கியங்கள் தோன்றின என்றும் அவர்கள் கூறுகின்றனர். பிராமண ஆய்வாளர்கள் தங்களது வரலாற்று
எழுதியலில் களப்பிரர்களைப் புறந்தள்ளியதற்கும் வசைபாடியதற்கும் முதன்மையான காரணம் அவர்கள் பௌத்தர்கள்
என்பதுதான். நீலகண்ட சாஸ்திரி “சோழநாட்டில் களப்பிர குலத்தைச் சேர்ந்த அச்சுதவிக்ரந்தனின்
ஆட்சிக்காலத்தில் பௌத்த விகார்கள் பெரும்கொடையைப் பெற்றன என்று பௌத்தப் புத்தகங்களிலிருந்து
அறிகிறோம். இவர் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களையும் சிறையில் வைத்திருந்தார்
என்று பிற்கால இலக்கிய மரபு கூறுகிறது. கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்மொழியின்
ஜைன இலக்கணி அமிதசாகரர் அச்சுதவிக்ரந்தன் பற்றி சில பாடல்களை மேற்கோள்காட்டியுள்ளார்.
அச்சுதவிக்ரந்தன் ஒரு பௌத்தராவார். மதப்பூசலால் களப்பிரர்களின் ஆட்சி அரசியல் புரட்சியால்
முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது” என்று கூறுகிறார்.
களப்பிர மன்னர்களில் அச்சுதவிக்ரந்தன்
பெயர் மட்டும்தான் அறியப்படுகிறது. இவர் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதிகாலத்திலும்
6ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் ஆட்சிபுரிந்தார் என்று கூறப்படுகிறது. கி.பி.
5ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய பாலி உரையாசிரியர் புத்ததத்தர் வினய-வினிச்சயத்தில்
பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்நூலைப் புத்தகோசருக்காக எழுதினேன். நான் காவிரி
நதிக்கரையில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் உள்ள வேணுதாஸ் (விஷ்ணுதாஸ்) விகாரில் தங்கியிருந்தபோது
இந்நூல் எழுத தொடங்கப்பட்டது. களப்பிர குலத்தின் மன்னன் அச்சுத விக்ரந்தனின் அட்சிக்காலம்
முடிவுறும்போது இந்நூல் எழுதி முடிக்கப்பட்டது”.
அச்சுதவிக்ரந்தன் பற்றிய நினைவலைகள் தமிழ்ப்பௌத்தர்களிடம்
நீண்ட காலத்திற்கு இருந்துவந்தது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் அமிதசாகரனாரால் எழுதப்பட்ட
யாப்பருங்கலத்தில் இவர் “அச்சுதனுக்கு மழை போன்ற கொடை வழங்கும் தன்மையையும்ம் உலகம்
முழுவதையும் வெற்றிக்கொள்ளும் வீரத்தையும் கொடு என்று புத்தரிடம் வேண்டுகிறார்”. அச்சுதவிக்ரந்தனின்
சமகாலத்தைச் சேர்ந்த புத்ததத்தரின் எழுத்துகளிலும் அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலத்திலும்
இவர் ஒரு பௌத்தர் என்பதற்கும் பௌத்தத்திற்குப் பெருங்கொடையை வழங்கியுள்ளார் என்பதற்கு
சான்றுகள் உள்ளன.
களப்பிரர்கள் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள்
ஆட்சிபுரிந்தனர். இக்காலத்தில் பௌத்தம் சிறப்பாக இருந்தது. காஞ்சியை சுற்றியுள்ள பண்டைய
தொண்டை மண்டலத்தில் பௌத்த மிகவும் சிறப்பாக இருந்தது. இக்காலத்தில் பௌத்தத் துறவிகளும்
அறிஞர்களும் பெருகியிருந்தனர். கி.பி. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குண்டலகேசியின் ஆசிரியர்
நாககுத்தனார், கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி உரையாசிரியர் புத்ததத்தர், மாபெரும்
தத்துவயியலாளர் தின்னாகர், கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு பாலி உரையாரியர்
தம்மபாலர் சிறந்த தியானப் பயிற்சியாளர் போதிதருமர் போன்றவர்கள் இக்காலத்தைச் சேர்ந்தவர்களாகும்.
மேலும், புத்ததத்தரின் சமகாலத்தைச் சேர்ந்த பாலி பேரறிஞராகவும் உரையாசிரியராகவும் விளங்கியவர்
புத்தகோசர் ஆவார். இவையாவும் களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பௌத்தம்
செழித்தோங்கியிருந்தது என்பதையே காட்டுகிறது.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்
இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. மேலும், இக்காலம் இலக்கியச் செயல்பாடுகளில் சிறந்து
விளங்கியது. நீலகண்ட சாஸ்திரி “இவ்விருண்டகாலத்தில் பௌத்தமும் ஜைனமும் வலிமைபெற்று
இருந்தன. தமிழிலக்கிய செயல்பாடும் சிறப்பாக இருந்தது. இக்காலத்தில் எழுதப்பட்ட பெரும்பான்மையான
நூல்கள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், சிலப்பதிகாரம்,
மணிமேகலை ஆகிய காப்பியங்களும் இக்காலத்தில் தோன்றின. இக்காலத்தில் பெரும்பாலான நூலாசிரியர்கள்
பழமைவாத சிந்தனைகளைக் கொண்ட பிரிவுகளுக்கு எதிரானவர்களாக இருந்தனர்.
சிம்மவிஷ்ணுவின் (கி.பி. 575 - 600) தலைமையில்
களப்பிரர்கள் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் பல்லவர்களின் அரசு நிறுவப்பட்டது. இவரின்
காலத்திலிருந்து வலிமைபெற்ற பல்லவர்கள் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் ஆண்டனர். பல்லவ
மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் (கி.பி. 700 – 728 அல்லது 695 - 722) பௌத்த
விகார் ஒன்று நாகபட்டனத்தில் கட்டப்பட்டது. இவ்விகாருக்கு வாணிகத்தை மேற்கொண்ட அயல்நாட்டு
கடல்வழி வணிகர்கள் வந்தனர். இது ‘சீன விகார்’ என்று அழைக்கப்பட்டது. இவ்விகாரை கி.பி.
1292ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பயணி மார்கோ போலோ பார்த்துள்ளார்.
சோழர்களின் (கி.பி. 850 - 1200) ஆட்சிக்காலத்தில்,
கிழக்குக் கடற்கரையில் உள்ள நாகபட்டத்திலும் (நாகபட்டினம்) மேற்குக் கடற்கரையில் உள்ள
ஸ்ரீமூலவாசத்திலும் பௌத்தக் குடியிருப்புகள் இருந்தன. குறிப்பாக முதலாம் இராஜராஜ சோழன்
(கி.பி. 985 - 1014) பௌத்த மடங்களுக்குப் பேராதரவை வழங்கினார். இவரால் தஞ்சாவூரில்
கட்டப்பட்ட பெரிய கோயிலில் உள்ள தூணில் வரையப்பட்டுள்ள சிற்பத்தொகுதிகளில் புத்தரின்
வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள் காணப்படுகின்றன. இது பௌத்தத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவத்தைக்
காட்டுகிறது. மேலும், இவர் ஸ்ரீவிஜயத்தின் (சுமத்ரா) சைலேந்திர அரச வம்சத்தைச் சேர்ந்த
ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மனை நாகபட்டினத்தில் ஒரு புத்த விகார் கட்டுமாறு ஊக்குவித்தார்.
ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மனின் தந்தையின் பெயரால் இது ‘சூடாமணி விகார்’ என்றழைக்கப்பட்டது.
பிற்காலத்தில் ஸ்ரீ விஜயத்தின் மற்றொரு அரசன் தன்னுடைய மூதாதையரால் கட்டப்பட்ட புத்தவிகாரின்
நிலையைக் குறித்து விசாரிக்க 1090ஆம் ஆண்டு தன் தூதுவரை முதலாம் குலோத்துங்க சோழனிடம்
(கி.பி. 1070 - 1122) அனுப்பினார். புத்தவிகாருக்கு அளிக்கப்பட்ட சோழர்களின் நன்கொடைகள்
குறித்து அவர்களுடையெ செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாகபட்டினத்தில் பௌத்த
விகார்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டுவரை இருந்துவந்தாலும் இம்மதத்திற்கு அரச ஆதரவு சோழர்களின்
காலத்திற்குப் பிறகு குறைந்துவிட்டது.
No comments:
Post a Comment