திராவிடம் என்ற சொல் இந்திய அளவில் மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரதேச வாரியாகவும் வைத்து அறிஞர்களால் பார்க்கப்பட்டது.
ஆனால், திராவிடம் என்ற சொல் பௌத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தோடும் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
திராவிடம் என்பது பரந்துபட்ட அளவில் வைத்துப்பார்க்கப்பட்டாலும், கிழக்காசிய நாடுகளின் யாத்ரீகர்களால் திராவிடநாடு என்பது காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. மன்னர்களை மையமாகக் கொள்ளாமல் திராவிட நாடு என்பதை கிழக்காசிய யாத்ரீகர்கள் காஞ்சிபுரத்தோடு தொடர்புபடுத்துவதில் பௌத்தம் பின்னணியாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
இம்மண்ணின் பூர்விக அடையாளமாக விளங்கக்கூடிய பௌத்தம், திராவிடம் ஆகிய இரண்டும் ஒரு புள்ளியில் ஒன்றிணைகிறது என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அதே சமயத்தில் அது காஞ்சிபுரத்தை பிரதானமாகக் கொண்டு இயங்குகிறது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் பௌத்தம், திராவிடம் என்னும் இரு அடையாளங்களில் காஞ்சிபுரம் வகிக்கும் முக்கியமான ஓரிடத்தையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment