Tuesday, November 24, 2020

தென்னிந்தியாவுக்குப் புத்தரின் வருகை - டி.சி. அஹிர்

 


உத்திரபிரதேசத்தில் உள்ள சாரநாத்தில் தம்மம் போதிக்கப்பட்டதே பௌத்தக் கலாச்சார பேரரசின் தொடக்கம் எனலாம். அன்னத கொண்டனா, பாதியா, வாபா, மகாநாமா, அஸ்ஸஜி ஆகிய பஞ்சவாக்கிய பிக்குகள் புத்தர் நிறுவிய பிக்கு சங்கத்தின் முதல் ஐந்து உறுப்பினர்கள் ஆவர். சங்க முறைப்படி ஆறாவது உறுப்பினராக யாஸ சேர்ந்தார். இவர் வாரணாசியில் இருந்த பெரும் வணிகரின் மகன் ஆவார். பிறகு இரண்டே மாதங்களில் புத்தர் மேலும் ஐம்பத்தி நான்கு சீடர்களைப் பெற்றார். இதன் மூலம் மொத்தம் அறுபது பிக்குகள் உருவானார்கள். புத்தரின் தத்துவத்திற்கு ஊக்கமளிக்கப்பட்டதால் இவர் தனது கருத்துப்பிரச்சாரத்தை செய்ய விரும்பினார். தன்னுடடை அறுபது சீடர்களிடம் தம்மத்தைப் போதிக்குமாறு அறிவுறுத்தினார்.

புத்தர் "ஓ! பிக்குகளே! தேவர்கள், மனிதர்களின் நன்மைக்காகவும் நலனுக்காகவும் அலைந்து திரிந்து செயல்படுங்கள். புனிதமான வாழ்க்கைக்கும் சிறந்த வாழ்க்கைக்கும் தூய்மையான வாழ்க்கைக்கும் தம்மத்தைப் போதியுங்கள்" என்று பிக்குகளிடம் கூறுகிறார்.

இதிலிருந்து அடுத்த 45 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நகரம் நகராமாக, கிராமம் கிராமமாக சென்று அன்பு, தம்மப்பற்று சார்ந்த தன்னுடைய செய்தியைப் புத்தர் போதித்தார். சிறு சிறு ஆறுகள் வேகமாக சென்று கடலில் கலப்பதைப் போல துறவிகளும் அறிஞர்களும் தத்துவவாதிகளும் சாதாரண மனிதர்களும் புத்தரிடம் சென்றனர். புத்தர் எந்த குழுவைச் சார்ந்த மக்களுக்கும் எந்த வகுப்பைச் சார்ந்த மக்களுக்கும் சிறப்புக்கவனம் செலுத்தவில்லை. புனித வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புபவர்களை சாதி, நிறம், தகுதி, ஆகியவற்றைக் கடந்து புத்தர் சங்கத்தில் இணைத்துக்கொண்டார். எனவே, புத்தரைப் பின்பற்றி பிக்குகள் மற்றும் சாதாரண மனிதர்கள் அனைத்து சமூகத்திலிருந்தும் இடம்பெற்றிருந்தார்கள். இவர்களில் பணக்காரர்கள் ஏழைகள், உயர்வானவர்கள் தாழ்மையானவர்கள் எனப் பலரும் இருந்தனர். நிர்வாணத்தை அடைவதற்கு எல்லோர்க்கும் சமவாய்ப்பைப் புத்தர் அளித்தார்.

45 ஆண்டுகளாக சுயநலமற்று மிக கடுமையாக தொண்டின் சிறப்பு, துறவியின் மகிழ்ச்சி, எளிமையின் தேவை, சமத்துவத்தின் தேவை ஆகியவற்றைக் குறித்து போதித்துவிட்டு, தன்னுடைய 80 வயதில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷினாராவில் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்தார்.

புத்தரின் நேரடி களப்பணிக்கான இடமாக வட இந்திய பகுதிகளும் வட கிழக்கு இந்திய பகுதிகளும் அமைந்தன என்பதை பௌத்த நூல்கள் வெளிப்படுத்துகின்றன. புத்தரின் போதனைப் பயணங்களில் இன்றைக்கு உள்ள மெட்ராஸ் பகுதிக்கு அவர் சென்றார் என்பதற்கு நமக்கு நேரடியான சான்றாதாரம் எதுவுமில்லை. இருப்பினும் இன்றைய தமிழகத்தில் உள்ள இரண்டு இடங்களுக்குப் புத்தர் வந்தார் என்று கூறும் மரபு உள்ளது. அவ்விரண்டு இடங்களில் ஒன்று காஞ்சிபுரம் மற்றொன்று புத்தவேடு ஆகும். இவ்விரண்டு இடங்களுக்கும் புத்தர் வந்தார் என்று கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் சென்னையிலிருந்து அறுபது கி.மீ தொலைவில் உள்ளது. இது பண்டைய நகரமாகவும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடமாகவும் உள்ளது. புத்தர் காஞ்சிபுரத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டமுறை வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இம்மரபு புத்தர் காஞ்சிக்குப் பயணத்தை மேற்கொண்டு அங்கு தங்கியதன் நினைவாக அவ்விடத்தில் முதல் பௌத்த பேரரசன் அசோகர் ஸ்தூபியைக் கட்டியதிலிருந்து உருவாகியது.

புகழ்பெற்ற சீனப்பயணி ஹியுன் திசாங் கி.பி. 640ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திற்கு வந்தார். இவர் "இந்நாடு (திராவிட நாடு) 6000லி சுற்றளவு கொண்டது. இந்நாட்டின் தலைநகரம் காஞ்சிபுரம் (காஞ்-சி-பு-லோ). இத்தலைநகரம் 30லி சுற்றளவு கொண்டது. புத்தர் வாழ்ந்த காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வந்து தம்மத்தைப் போதித்து மனிதர்களை மாற்றினார். எனவே, மன்னன் அசோகர் இப்புனித இடங்களில் ஸ்தூபிகளைக் கட்டியுள்ளார்" என்று கூறுகிறார்.

மேலும் "இந்நகரத்தின் தெற்கே பெரும் வழியற்ற 'சங்காராமம்' இருந்தது. இங்கு மனிதர்கள் ஒரே மாதிரி இருந்தனர். இவர்கள் திறனிலும் கற்றலிலும் சிறந்து விளங்கினர். இங்கு அசோகரால் கட்டப்பட்ட 100 அடிகளைக் கொண்ட ஸ்தூபி ஒன்று இருந்தது. இங்குதான் பண்டைய காலத்தில் புத்தர் தம்மத்தைப் போதித்து பெரும் எண்ணிக்கையில் மனிதர்களையும் தேவர்களையும் மாற்றினார்.

புத்தர் தமிழகத்திற்கு வந்ததாகக் கூறப்படும் இடங்களில் உள்ள இரண்டாவது இடமான புத்தவேடு காஞ்சிபுரத்திற்கு அல்லது காஞ்சீவரத்திற்கு அருகில் உள்ளது. புத்தவேடு சென்னையிலிருந்து 21 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். புத்தர் தென்னிந்தியாவிற்கு வந்தபோது புத்தவேட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

புத்தவேட்டில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் புத்தர் சிலை, போதி மரம், விகாரின் எச்சங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் புத்தவேடு கிராமம் பௌத்த சங்கத்திற்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புத்தவேடு என்னும் கிராமம் பௌத்தத்தின் கடந்த கால வரலாற்றில் மிகவும் பழமையான ஓரிடமாக விளங்குகிறது என்பது வெளிப்படையானதாகும்.

பவரி என்பவரைப் பற்றியும் இவருடைய பதினாறு சீடர்கள் பற்றியும் ஒரு கதை பிரயனவக்க சுத்தத்தில் இடம்பெற்றுள்ளது. பாலி மொழியிலுள்ள பண்டைய திரிபிடகத்தின் பிரதியில் உள்ள சுத்த - நிபாதத்தின் ஒரு பகுதியே பிரயனவக்க சுத்தம் ஆகும். பவரியின் கதையின்படி, புத்தரின் காலத்திலேயே இவரின் போதனைகள் ஆந்திராவை சென்றடைந்துவிட்டது என்பதற்கான குறிப்புள்ளது.

பவரி ஒரு பிராமண ஆசிரியர். இவர் அஸ்ஸக நாட்டில் அலக என்னும் இடத்திற்கு அருகில் கோதாவரி நதிக்கரையில் தன்னுடைய மடத்தை நடத்தி வந்தார். இவர் 'யஜ்ன' சடங்கை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார். இச்சடங்கு நிகழ்வு மற்றொரு பிராமணரால் கலக்கமுற்றது. சடங்கு நிகழ்வு முடிந்த பிறகே அப்பிராமணர் வந்தார். அதற்கு முன்பாகவே பவரி தன்னிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் தானமாக மக்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டார். தனக்கு பரிசு வழங்கப்படவில்லை என்று அப்பிராமணன் பவரியை சபித்தார். இச்சபித்தலை புத்தர் முறியடிப்பார் என்றறிந்த சபரி தன்னுடைய பதினாறு சீடர்களை புத்தரிடம் அனுப்பி நடந்த விடயம் குறித்து கேட்டுவரும்படி அனுப்பினார். இதன்படி, பவரியின் சீடர்கள் வடக்குத்திசைக்கு சென்றனர். நவீன பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் என்னும் ராஜகாஹ நகரத்திற்கு வெளியே புத்தரை கல்லால்.அமைந்த விகாரில் சந்தித்தனர். இச்சீடர்கள் புத்தரிடம் கேட்ட கேள்விகள், அதற்கு புத்தர் அளித்த பதில் யாவும் பிரயனவக்க சுத்தத்தைத் தொடர்ந்து வரும் சுத்தங்களில் இடம்பெற்றுள்ளன.

பண்டைய அஸ்ஸக நாடு இன்று மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள ஔரங்காபாத் - நாந்தேடு மற்றும் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள நிஜாமபாத் ஆகிய இடங்களில் இருந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே பௌத்தம் புத்தரின் சமகாலத்திலேயே ஆந்திராவுக்கு வந்து தமிழ்நாட்டில் நுழைந்துவிட்டது எனலாம்.

No comments:

Post a Comment