Saturday, November 21, 2020

தமிழ்நாட்டில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - டி.சி. அஹிர்

 தமிழ்நாட்டில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - டி.சி. அஹிர்

********* ************** ******************
வட இந்தியாவில் மறுமலர்ச்சி இயக்கம் தோன்றிய சமகாலகட்டத்திலேயே தமிழ்நாட்டிலும் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. தியோசபிகல் சொசைட்டியின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள அடையாறில் நிறுவப்பட்டது. பிறகு, H.S. ஆல்காட் சென்னைக்கு அடிக்கடி வந்தார். இவர் சிலோனில் பௌத்தத்தைத் தழுவியதிலிருந்து, இம்மதம் உலகளாவிய பார்வையைக் கவர்ந்திழுத்தது. தென்னிந்தியாவில் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் பௌத்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டனர்.

1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் கர்னல் ஆல்காட், அனாகரிக தர்மபாலர் ஆகிய இருவரும் அடையாருக்கு வந்தனர். இவர்களைப் பஞ்சமர்கள் சந்தித்து தங்களைப் பௌத்தத்தில் இணைத்துக்கொள்ளும்படி கோரினர்.

தர்மபாலர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதிக்குரிய தன் நாட்குறிப்பில் "ஆதிகால பௌத்தர்களின் வம்சாவழியினரான பஞ்சமர்கள், தங்களைப் பௌத்தர்களாக மாற்றும்படி தங்களின் மனுவை வழங்குவதற்கு கர்னல் ஆல்காட் அவர்களை அழைத்தனர்" என்று குறித்துள்ளார்.

மேலும் தர்மபாலர் ஜூன் மாதம் 7ஆம் தேதி நாட்குறிப்பில் "மாலைப்பொழுதில் பஞ்சமர்களின் கூட்டம் இராயப்பேட்டையில் கூடியது. கர்னல் ஆல்காட், முதிய குரு, நானும் பௌத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினோம். அங்கே அறிவார்ந்த குழு கூடியிருந்தது. புத்தரின் தம்மம் சாதியை விடவும் மேலானது, இதை ஏற்பதால் பஞ்சமர்கள் தங்களின் இழிநிலையிலிருந்து உயர்வார்கள்" என்று குறித்துள்ளார்.

இந்த பஞ்சமர்கள் அல்லது தீண்டப்படாதவர்கள் பண்டிதர் அயோத்யதாசர் அல்லது அயோதிதாசர் என்னும் பேரறிஞரால் வழிநடத்தப்பட்டனர். இவர் 1898ஆம் ஆண்டிலேயே பௌத்தத்தைத் தழுவிய முதல் மனிதராவார்.

இந்துயிசத்தில் பஞ்சமர்களுக்கு வெறுப்பு, இழிவு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைய பண்டிதர் அயோதிதாசர் தன் கருத்திற்கு செயல்முறை வடிவம் தர 1900ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பெரம்பூரில் தென்னிந்திய பௌத்த சங்கத்தை நிறுவினார். இச்சங்கம் தென்னிந்தியாவில் தம்மத்தை இன்றளவும் போற்றி வருகின்றது.

பண்டிதர் அயோதிதாசர் "புத்தர்தம் ஆதிவேதம்" என்னும் மிக முக்கியமான நூலைத் தமிழில் இயற்றியுள்ளார். இவர் தென்னிந்திய பௌத்த சங்கத்தின் சார்பில் "தமிழன்" என்னும் வார இதழை சில ஆண்டுகள் நடத்தினார். இவர் 1914ஆம் ஆண்டு பரிநிப்பாணம் அடைந்த பிறகு இவ்விதழ் நின்றுவிட்டது.

தென்னிந்தியாவின் மற்றொரு முக்கியமான பௌத்தத் தலைவர் அப்பாதுரை அல்லது அப்பாசுவாமி ஆவார். தீண்டப்படாத தமிழர்களில் ஒருவரான இவர் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் பணியை மேற்கொண்டார். 1920களில் இவர் கோலார் தங்க வயலில் வலிமையான பௌத்த அடித்தளத்தை உருவாக்கினார். இன்று கோலார் தங்க வயல் பௌத்த மையமாக விளங்குகிறது. அறிஞர்களில் பௌத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் A.S. முதலியார், H.R. ரங்கசுவாமி, T.N. ராமச்சந்திரன், N. அய்யாசுவாமி சாஸ்திரி, K.R. சுப்பிரமணியம் ஆகியோர்கள் ஆவர். A.S. முதலியார் 1903ஆம் ஆண்டு பௌத்தம் பற்றி ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டுள்ளார்.

பௌத்தப் பேரறிஞர்களுள் ஒருவரான பேரா. P. லக்‌ஷ்மி நரசுவை நவீன தென்னிந்தியா உருவாக்கியது. 1897ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். இதே கல்லூரியில் இவர் இயற்பியல் மற்றும் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவரைப் பச்சையப்பன் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே, இவர் வெகுவிரைவாக கல்வியாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

பேரா. லக்‌ஷ்மி நரசுவை இந்திய மகாபோதி சொசைட்டியின் நிறுவனர் அனாகரிக தர்மபாலர் அறிந்திருந்தார். 1900ஆம் ஆண்டு நரசு M. சிங்காரவேலுடன் சேர்ந்து மெட்ராஸில் மகாபோதி சொசைட்டியின் ஒரு கிளையைத் திறந்தார். இந்த சொசைட்டியின் சார்பில் நரசு சிலகாலம் "திராவிட பௌத்தக் குழந்தைகளின்" ஆரம்பக் கல்விக்காக மெட்ராஸில் உள்ள பெரம்பூரில் ஒரு பள்ளியை நடத்தினார். பௌத்த மறுமலர்ச்சியின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் பிற்காலத்தில் தென்னிந்திய பௌத்த சங்கத்தோடு இணைந்து மிக தீவிரமாக செயல்பட்டார். தென்னிந்திய பௌத்த சங்கத்தின் நிறுவனரான பண்டிதர் அயோத்திதாசரின் மறைவுக்குப் பிறகு நரசு இச்சங்கத்தின் தலைவரானார்.

பேரா. நரசு வளமான எழுத்தாளராகவும் தர்க்கவியலாளராகவும் இருந்தார். The Essence of Buddhism என்னும் புத்தகம் 1907ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மீண்டும் இப்புத்தகம் 1912ஆண்டு மறுபதிப்பாக வெளிவந்தது. இப்புத்தகம் பௌத்தத்திலும் மற்ற மதங்களோடு ஒப்பாய்வு செய்ததிலும் சிறந்து விளங்குகிறது. பாட அறிவிலும் மொழியிலும் இவர் சிறந்து விளங்குகிறார். இவர் "கேள்வி கேட்காமலேயே உண்மை என்று நம்புவதும், மீஎதார்த்தத்தைக் கடவுளால் நிகழ்த்தப்பட்டது என்று நம்புவதும் கிறித்தவ ஞானமாகும். மனிதக் கட்டுப்பாட்டுக்கு மீறிய எதிர்காலத்தை ஒரு சக்தி கட்டுப்படுத்துவதாக நம்புவதும் வெறித்தனமும் முஸ்லீம்களின் ஞானமாகும். சாதியும் சடங்கும் பிராமணரின் ஞானமாகும். சந்நியாசமும் நிர்வாணமும் ஜைனர்களின் ஞானமாகும். மறைபொருளும் சூனியமும் தாவோயிஸ்டுகளின் ஞானமாகும். நடைமுறையியலும் சமயப்பற்றும் கன்பூசியர்களின் ஞானமாகும். மூதாதையர்களை வழிபடுவதும் மிக்கோடாவை வழிபடுவதும் சிந்தோயிஸ்களின் ஞானமாகும். ஆனால், அன்பும் சமயப்பற்றும்தான் பௌத்தர்களின் முதல் ஞானமாகும்" என்று கூறுகிறார்.

பேரா. லக்‌ஷ்மி நரசுவின் இப்புத்தகத்தை டாக்டர் பீ.ஆர். அம்பேத்கர் மிகவும் விரும்பினார். தன்னைப் பின்பற்றுபவர்கள் இப்புத்தகத்தைப் படிக்குமாறு பரிந்துரைத்தார். இப்புத்தகம் 1948ஆம் ஆண்டு மூன்றாவது பதிப்பாக கொண்டு வந்த டாக்டர் அம்பேத்கர், இப்பதிப்பில் பேரா. லக்‌ஷ்மி நரசுவைப் பற்றி சுருக்கமான வாழ்க்கை குறிப்பைத் தருகிறார்:

"பேரா. நரசு 19ஆம் நூற்றாண்டின் இரும்பு மனிதராவார். இவர் தேசப்பற்றைக் கொண்டு ஐரோப்பிய ஆதிக்கத்தை எதிர்த்தார். விமர்சிக்கும் திறனோடு பழமைவாத இந்துயிசத்தை எதிர்த்தார். பழமைவாத பிராமணர்களைத் தேசியப்பார்வையுடன் எதிர்த்தார். முரட்டுத்தனமான கிறித்தவர்களைப் பகுத்தறிவால் எதிர்த்தார். இவை யாவற்றையும் அவர் மகாஞானி புத்தரின் போதனைகளை உள்வாங்கியதால் செய்தார்".

What is buddhism என்னும் மற்றொரு புகழ்பெற்ற புத்தகத்தைப் பேரா. நரசு எழுதினார். இப்புத்தகம் பௌத்தத்தை மிக சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது என்றாலும் மிகவும் பயனுடையதாக இருக்கிறது. 1934ஆம் ஆண்டு பேரா. லக்‌ஷ்மி நரசு பரிநிப்பாணம் அடைந்தார்.

தென்னிந்திய பௌத்த சங்கத்தால் முதல் புத்த விகார் தமிழ்நாட்டில் உள்ள பெரம்பூரில் கட்டப்பட்டது. இப்புத்த விகார் "திருமதி மேரி போஸ்டர் பௌத்த விகார்" என்று அழைக்கப்பட்டது (இதன் முகவரி 41, நெல்வயல் சாலை, பெரம்பூர், மெட்ராஸ்). இவ்விடம் இந்தியாவுக்கு வருகை தந்த அனாகரிக தர்மபாலருடன் சேர்ந்திருந்த கொனோலுலுவைச் சேர்ந்த திருமதி மேரி, E. போஸ்டர் ஆகியோர்கள் அளித்த நன்கொடையால் வாங்கப்பட்டது. இவ்விகாரின் முதல் பிக்கு-பொறுப்பாளியாக இலங்கையைச் சேர்ந்த பிக்கு நந்தாராமா அவர்கள் இருந்தார். இவர் 1906ஆம் ஆண்டு இங்கு உள்ளூர் மக்களிடம் தம்மத்தைப் போதிக்க வந்தார். இக்காலத்தில் இவ்விகார் தென்னிந்திய பௌத்த சங்கத்தின் தலைமையிடமாக அமைந்திருந்தது.

தமிழ்நாட்டில் தம்மத்தைப் போதித்த பௌத்தப் பிக்குகளில் தமிழ்மொழியை அறிந்த நில்வக்கே சோமாநந்தா தேரா மிகவும் முக்கியமானவராவார். இவர் 1930களில் மெட்ராஸில் இருந்த மகாபோதி சொசைட்டியின் பிரதிநிதியாக செயல்பட்டார். 1970ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து வருடத்திற்கும் மேலாக மெட்ராஸ் மகாபோதி சொசைட்டியின் பொறுப்பாளியாக இருந்த மற்றொரு குறிப்பிடத்தகுந்த பிக்கு E. நந்திஸ்வரர் ஆவார். தற்பொழுது மெட்ராஸ்-எக்மோர்-கென்னட் சாலையில் உள்ள புத்த விகாரின் தலைவராக பிக்கு U. ரத்தன்பால உள்ளார். இவர் தென்னிந்தியா முழுவதும் மிக தீவிரமாக செயல்பட்டவர்.

மேலும் இரண்டு புத்த விகார்கள் தென்னிந்திய பௌத்த சங்கத்தால் கட்டப்பட்டன. அவற்றுள் ஒன்று சென்னை மாவட்டத்தில் உள்ள புத்தவேடு என்னும் ஊரில் கட்டப்பட்டது. மற்றொன்று ராமநாடு மாவட்டத்தில் ராஜபாளையம் என்னும் ஊரில் கட்டப்பட்டது. பௌத்த அறிஞர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டபோதும் இம்மாநிலத்தில் பௌத்தர்களின் மக்கள்தொகை பெருமளவில் அதிகரிக்கவில்லை. 1981ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் பௌத்தர்களின் எண்ணிக்கை வெறும் 735 மட்டுமேயாகும். 

No comments:

Post a Comment