Saturday, November 21, 2020

பாண்டிச்சேரியில் பௌத்தம் - டி.சி. அஹிர்

 பாண்டிச்சேரியில் பௌத்தம் - டி.சி. அஹிர்

****************** ********************

பிரெஞ்சு காலனியப் பகுதியாக இருந்த பாண்டிச்சேரி 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்திய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. 1962ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி கொண்டுவரப்பட்ட அமலாக்க சட்டத்தின்படி பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, யானம் ஆகிய நான்கு பகுதிகளும் பாண்டிச்சேரி யூனியனில் ஒன்றிணைக்கப்பட்டது. 492 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இவ்யூனியன் பிரதேசத்தில் பாண்டிச்சேரி 293 சதுர கி.மீ பரப்பளவும், காரைக்கால் 160 சதுர கி.மீ பரப்பளவும், மாஹி 9 சதுர கி.மீ பரப்பளவும், யானம் 30 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டுள்ளது. பாண்டிச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. தெற்கே கடலூர் மாவட்டம் அமைந்துள்ளது.

பண்டைய காலத்தில் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி இருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் முதல் பௌத்தப் பேரரசர் அசோகரின் ஆட்சிக்காலத்திலேயே தமிழ்நாட்டின் பிற இடங்களில் பௌத்தம் பரவியதைப் போலவே பாண்டிச்சேரியிலும் வலிமையாகப் பரவியதாக தோன்றுகிறது. சங்க காலத்தில் (கி.மு. 3நூ - கி.பி. 3நூ) பாண்டிச்சேரியில் பௌத்தப் பிக்குகளும் விகார்களும் இருந்ததற்கான சான்றாதாரங்கள் உள்ளன. ஒரு காலத்தில் பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள அரியாங்குப்பம் நதியின் கழிமுகத்தில் அரிக்கமேடு இருந்தது. இது பெரும் செழித்தோங்கிய வணிக மையமாக விளங்கியது. சங்க காலத்திற்குப் பிறகு அரிக்கமேடு அழிவுற்றதாகத் தோன்றுகிறது.

அரிக்கமேடு என்ற சொல்லுக்குப் பொருள் கூறுவதில் அறிஞர்களிடையே கருத்து மாறுபாடுகள் உள்ளன. அழிவுற்ற இப்பண்டைய நகரத்தை சில அறிஞர்கள் 'சிதலமடைந்த மண்மேடு' அல்லது 'நதிக்கரை மேடு' என்னும் பொருள் தரும் அருக்குமேடு என்று கூறுகின்றனர். சில அறிஞர்கள் 'ஜின மேடு' அல்லது 'புத்தர் மேடு' என்னும் பொருள் தரும் அருக்கன்மேடு என்று கூறுகின்றனர். இவ்விடத்தில் அரிக்கமேட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையை பொருத்திப்பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும். அழிந்துபோன இந்நகரம் ஒரு காலத்தில் வலிமையான பௌத்தப் பகுதியாக இருந்தது. எனவே, 'புத்தர் மேடு' எனபதுவே அரிக்கன்மேடு என்பதற்கான மிகச்சரியான விளக்கமாக இருக்கும்.

1981ஆம் ஆண்டு பாண்டிச்சேரியின் மொத்த மக்கள்தொகை 604,471. இதில் பௌத்தர்களின் எண்ணிக்கை 75 மட்டுமே. இத்தொகை 1971ஆம் ஆண்டில் இருந்த 21பேரிலிருந்து சற்று அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment