Sunday, July 5, 2020

பௌத்தம்: விருத்தாசலம் - தேவஸ்தான புடையூர் பாலாயி நினைவூட்டும் பௌத்த மரபு.



புடையூர் விருத்தாசலம் - வேப்பூருக்கு இடைப்பட்ட பகுதியில் கண்டப்பங்குறிச்சி என்னும் ஊருக்கு அருகாமையில் உள்ள ஊராகும். வேப்பூருக்கு அருகில் மற்றொரு புடையூர் உள்ளது என்றாலும் இவ்வூர் மங்களூர் புடையூர் அல்லது கல்லூர் புடையூர் என்று அழைக்கப்படும். இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் ஊர் தே.புடையூர் என்றழைக்கப்படும். தேவஸ்தான புடையூர் என்பது அதன் பொருள். இங்கு தேவர்கள் வந்து தங்கி சென்றதாக சொல்வார்கள். எனவே தேவர்களின் ஸ்தானமாம விளங்குகிறது என்பார்கள். 

இவ்வூரில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் பராக்கிராம பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாக எங்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன் கூறினார். அப்பொழுது அவர் சொல்வதுதான் எங்களுக்கு வரலாறு. அவர்தான் எங்களின் புத்தகம். அப்பொழுதே  எங்களின் ஊர்பெயர் தேவஸ்தான புடையூர் விருத்தாசலம் பெரியகோயிலில் சுவரில் கல்வெட்டாக உள்ளது என்று கூறினார். பிறகு நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை இந்த சிவன் கோயிலுக்கு சென்றபோது அக்கல்வெட்டைத் தேடினேன். அப்பெரிய கோயிலின் சுவரில் கண்டுபிடித்துவிட்டேன். மகிழ்ச்சியாய் இருந்தது, எங்கள் ஊரின் பெயராச்சே! 

பின்பு, நான் கல்லூரி சேர்ந்தபோது இளங்கலை தமிழ் இலக்கியம். பக்தி இலக்கிய வகுப்பு. திருஞான சம்மந்தர் விருத்தாசலத்து சிவன் கோயிலைப் பற்றி பாடியது. ஆயிரம் கதிர்களைத் தாங்கியுள்ள சிவன் வீற்றிருக்கும் திருமுதுகுன்றத்தை அடைவோமே என்கிறார்.  விருத்தாசலத்தின் பழைய பெயர் திருமுதுகுன்றம் என்பதை சம்பந்தர் பாடலின் மூலம் அறியலாம்.   திருமுதுகுன்றம் என்ற தமிழ் வடிவத்தின் சமஸ்கிருதப் பெயரே விருத்தாசலம் என்பதை மறைமலையடிகள் விளக்குவார். சம்பந்தரின் காலம் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. இதில் காலம் பற்றிய கருத்து மாறுபாடு இருந்தாலும் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு இக்கோயில் பழமையானது எனலாம். எனவே இக்கோயிலின் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள புடையூரும் மிகவும் பழமையான ஊராகும்.

இவ்வூரைப் பூர்வீகமாக கொண்டுள்ள பறையர்களால் வணங்கப்படும் பாலாயி தெய்வம், இவ்வூரைப் போல 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். பாலாயி தெய்வத்தின் காலத்தை கோயிலின் கட்டமைப்பையோ கோயிலின் சிலைகளையோ மட்டும் வைத்து கணக்கிட முடியாது. கற்கள், சிலைகள் பௌத்தத்தின் பழமையான நினைவுகளைத் தமக்குள் வைத்துள்ளன. இவ்வூரில் உள்ள பூர்வீக மக்களின் குலத்தெய்வமாக விளங்கும் முதன்மையான தெய்வமாக பாலாயி விளங்குவதால் அதன் காலத்தை ஊரின் பழமையான காலத்திலிருந்து தருவிக்க வேண்டியுள்ளது. 

இவ்வூரில் பெண்பிள்ளைகளுக்குப் பாலாயி என்றும் ஆண்பிள்ளைகளுக்குப் பாலையா, பாலய்யா என்றும் பெயர் வைக்கும் மரபு உண்டு. 

பாலாயி என்ற சொல்லை பால் + ஆயி என்று தமிழ் முறைப்படி கொள்ளலாம். முந்தைய பதிவில் ஆயி என்ற சொல் அம்மனுக்கு நிகரானது என்பதைப் பார்த்தோம். என் நெஞ்சுல பால வார்த்தியே என்றால் எனக்கு வந்த இடரை, துன்பத்தை நீக்கினாயே! என்று பொருள். எனவே பால் என்பது துன்பத்தை நீக்கும் குறியீடாக உள்ளது. பௌத்த தெய்வங்களான அவலோகிதீஸ்வரர், குவானியின்,  தாரா, கண்ணோன் இப்படி யாராக இருந்தாலும் , அவர்களின் பெயர்களின் உள்ளார்ந்த அர்த்தங்களைக் கடந்து, அவர்களின் பண்பு அல்லது குணத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தரக்கூடிய விளக்கம் மக்களைத் துன்பத்திலிருந்து நீங்குபவர்கள் என்றே கூறப்படுகிறது. மணிமேகலையில் சம்பாபதி தெய்வத்தின் தன்மையை விளக்கும்போது சாத்தனார் புவிக்குள்ளிருந்து வரும் அழுகுரலைக் கேட்டு அத்துன்பத்தை விளக்குபவர் என்றே கூறப்படுகிறது. மனிதன் துன்பத்திற்குக் கட்டாயம் ஆட்படுவான், அதிலிருந்து அவன் நினைத்தால் விடுதலை பெறலாம் என்கிறது பௌத்தம். பாலாயி துன்பத்தை நீக்குபவளாக அவலோகிதீஸ்வரர், குவானின், சம்பாபதியின் வரிசையில் நிற்கிறாள்.

மணிமேகலையில் ஆபுத்திரன் அனாதையாக குழந்தைப் பருவத்தில் கைவிடப்பட்டபோது அவனுக்குப் பசியைப் போக்க பசு பால்வார்க்கிறது. ஆபுத்திரன் வளர்ந்த மனிதனாக இருந்தபோது அவன் பிச்சைக்காரானக இருக்கிறான். சோழநாட்டில் பஞ்சமும் வறுமையும் தலைவிரித்தாடிய சூழலில் அதை ஒழிக்க அமுதசுரபி ஆபுத்திரனிடம் கிடைக்கிறது. பின்பு, சோழநாட்டில் வறுமை ஒழிந்த சூழலில் ஜாவாவில் வறுமை இருப்பதாகக் கேள்விப்பட்டு ஆபுத்திரன் ஜாவாவிற்கு செல்லும் வழியில் அவன் சென்ற படகு மணிபல்லவத் தீவில் ஒதுங்க அவனால் ஜாவா தீவிற்கு செல்ல முடியாமல் போகிறது. மணிபல்லவத்தீவில் இறந்துபோன ஆபுத்திரன் தான் செல்லமுடியாமல் போன ஜாவா தீவில் மன்னனின் வீட்டில் பசுவின் வயிற்றில் கன்றுகுட்டியாக பிறக்கிறான். அப்பசு கன்று குட்டியை ஈனுவதற்கு முன்பே பால் சுரக்கிறது. கன்றை ஈர்ந்தபிறகு பால் சுரக்க வேண்டிய பசு முன்பதாகவே சுரக்கிறது என்பது பசுமையை, செழுமையை, வளமையைக் காட்டுகிறது. இது பசி ஒழிப்பை உணர்த்துகிறது. மணிமேகலை காப்பியத்தில் பால் பசி ஒழிப்பின் குறியீடாக உள்ளது. தே. புடையூரின் பாலாயி தெய்வத்தின் பெயர் மணிமேகலையில் பால் பசி ஒழிப்பின் குறியீடாக விளங்குவதை நினைவூட்டுகிறது. 

பௌத்த மரபில் புத்தபால என்ற சொல்லாடல் உண்டு. மேலும் பால என்பது இந்திய தர்க்கவியல் மரபில் வினையின் விளைவு என்று பொருள்படும். இப்பகுதியில் இவ்வூரில் மட்டுமே பாலாயி என்னும் பெயரில் தெய்வம் உள்ளது. பாலாயி பாலை வார்க்கும் ஆயி, அம்மன் என்றால் அவள் துன்பத்தைப் போக்குபவள், பசித்துன்பத்தைப் போக்குபவள் என்று பௌத்தப்பண்பாட்டு மரபிலிருந்து வெளிச்சத்தை அல்லது பொருளைப் பெறலாம்.

No comments:

Post a Comment