Saturday, May 2, 2020

காஞ்சிபுரத்தில் பௌத்தச் சுவடுகள்
***************** ************ ********

(1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த இண்டியன் ஆண்டிகுவரியில் T.A. கோபிநாத ராவ் அவர்களின் " Baudda Vestiges in Kanchipura" என்ற கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

இந்தியாவின் புகழ்வாய்ந்த நகரமாகவும் பண்டைய காலத்தில் இருந்த ஏழு பெரும் நகரங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் (காஞ்சீவரம்) விளங்கியது. கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் பதஞ்சலியின் மகாபாஷ்யத்தில் இந்நகரம் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. அழகான நகரமாக விளங்கிய காஞ்சிபுர நகரம் எப்பொழுதும் கற்றறியும் ஒரு இடமாக திகழ்ந்தது. இங்கு பல்வேறு சமயங்களைப் பின்பற்றுபவர்கள் இருந்தனர். பல்வேறு தத்துவப் பள்ளிகள் இருந்தன. வேத போதகர்கள் ஜைனம், பௌத்தம் போன்ற அவைதீக தத்துவப் போதகர்கள் வாழ்ந்த இடங்களுக்கு அருகாமையிலேயே வாழ்ந்தனர். இம்மதங்கள் பண்டைய கால அரசர்களால் சமமாக நடத்தப்பட்டன. இதை தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த முற்கால பல்லவர்கள் புத்தவர்மன், ஸ்கந்தவர்மன், பரமேஸ்வர்மன் என இவர்கள் பெயர் சூட்டிக்கொண்டதிலிருந்து அறியலாம். இப்பெயர்கள் இவர்கள் ஒவ்வொருவரும் எந்த மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கின்றன. இப்பொழுது நாம் காஞ்சிபுரத்தில் பௌத்த மதம் வளர்ச்சி பெற்று இருந்ததைக் காணலாம். எனவே, காஞ்சிபுரத்திலும் இதை சுற்றியுள்ள பகுதியிலும் பௌத்தமும் பௌத்தச் சுவடுகளும் இருந்ததைப் பற்றி ஆராயலாம்.

காஞ்-சி-பு-லோ (காஞ்சிபுரம்) என்ற இடத்தைக் கண்டதைப் பற்றி யுவான் சுவாங் பின்வருமாறு கூறுகிறார். "இது முப்பது லி சுற்றளவைக் கொண்ட பகுதி. இப்பகுதி வளமான மண்வளத்தைக் கொண்டது. இங்கு பழங்களும் மலர்களும் உயரிய பொருட்களும் விளைந்தன. இங்குள்ள மக்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும் முழுநம்பிக்கை உடையவர்களாகவும் நன்கு கற்றறிந்தவர்களாகவும் உள்ளனர். இவர்களுடைய எழுத்து மொழியும் பேச்சு மொழியும் மத்திய - இந்தியாவிலிருந்து வேறுபட்டு இருந்தது. இங்கு 100க்கும் மேற்பட்ட பௌத்த விகார்கள் இருந்தன. பௌத்த மரபைச் சேர்ந்த ஸ்தவிரவாத பள்ளியைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பிக்குகளும் இருந்தனர். இங்கு 80 தேவக்கோயில்கள் இருந்தன. இவற்றுள் பெரும்பான்மையான கோயில்கள் திகம்பரர்களைச் சேர்ந்தது. காஞ்சிபுரத்திற்குப் புத்தர் அடிக்கடி வந்துள்ளார். புத்தர் எங்கெல்லாம் தம் போதனைகளைப் போதித்து சீடர்களைச் சேர்த்துக்கொண்டாரோ, அவ்விடங்களிலெல்லாம் பேரரசர் அசோகர் டோப்புகளைக் கட்டினார். த-லோ- பி-து அல்லது திராவிட நாட்டின் தலைநகரமான காஞ்சிபுரம் தர்மபால பூசரின் பிறப்பிடமாகும். தர்மபால பூசர் இந்நகரத்தில் இருந்த உயர் அதிகாரியின் மூத்த மகனாவார் (1)............ காஞ்சிபுரத்திற்குத் தெற்குத் திசையில் மிக அருகாமையிலேயே பெரிய விகார் ஒன்று இருந்தது. இவ்விகார் நாட்டிலுள்ள பெரும்பான்மையான அறிஞர்கள் வந்து கூடும் மன்றமாக இருந்தது. புத்தர் தன் போதனைகளால் தீர்த்தங்கரர்களை வென்று பலபேரைத் தன் சீடர்களாக மாற்றிய இவ்விடத்தில் 100 அடிக்கும் மேலான அசோகர் டோப் இருந்தது. இதனருகில் நான்கு கடந்தகால புத்தர்களின் ஒரு அமரும் இடமும் நடைப்பயிற்சிக்கான இடமும் இருந்தன" (2). எனவே, இவ்வாய்விலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் பெருமளவில் பௌத்தர்களின் எண்ணிக்கை இருந்தது என்பதோடு மட்டும் இல்லாமல் மக்களின் பல வழிபாட்டுத் தலங்கள் இருந்தன என்பதையும் நாம் அறிகிறோம்.

சீன யாத்ரீகர்களின் கூற்றுகளை மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள விளக்கங்களின் வழி நாம் காணலாம். சோழ மன்னன் கிள்ளி என்பவரால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட பௌத்த விகாரை மணிமேகலை சென்று பார்த்தாள். மன்னன் கிள்ளியின் ஆட்சிக்குட்பட்ட காஞ்சிபுரத்திற்கு மணிமேகலை வந்த செய்தியை அறிந்த அவர் தன் அமைச்சர்களுடன் நேரில் சென்று மணிமேகலையைப் பார்த்தார். மணிபல்லவத் தீவில் உள்ளதைப் போல் தான் கட்டிய பௌத்த விகாரை மணிமேகலைக்குக் காட்டினார் கிள்ளி; மணிமேகலையின் வேண்டுதலின்படி புத்த விகாரும் தீபதிலகை, மணிமேகலை ஆகியோர்களுக்குப் பௌத்தக் கோயில்களையும் கட்டினார்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவப்பக்தர் திருஞானசம்பந்தரின் காலத்தில் பௌத்தர்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர். இவர் பௌத்தர்களைப் போதியர் (போதி மரத்தை வழிபடுபவர்கள்) என்றும் தேரர்கள் என்றும் குறித்துள்ளார். பௌத்தப் பிக்குகள் பாய்களை ஆடையாக அணிந்துகொள்பவர்கள் என்றும் குறித்துள்ளார்.

வேதாந்த போதகரான சங்கறாச்சாரியர் பௌத்தர்களுடன் சமயவாதத்தில் ஈடுபட்டு, அவர்களைக் காஞ்சிபுரத்திற்கு வெளியே துரத்தினார் என்ற கதை மரபு உள்ளது. இது போல ஜைன மதகுரு அகளங்கர் பற்றியும் ஒரு கதை மரபு உள்ளது.

அகளங்கர் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த பௌத்த மன்னனோடு சமயவாதத்தில் ஈடுபட்டு முழுவெற்றியைக் கொண்டார். வரலாற்றியல் சார்ந்தும் புராணமரபு சார்ந்தும் உள்ள பெரும் அளவிலான கதையாடல்கள் காஞ்சிபுரத்தில் பௌத்தத்தின் தாக்கம் ஆழமாக இருந்ததையும், இவ்விடம் பௌத்தர்களின் வாழ்விடமாக இருந்ததையும் காட்டுகின்றன. மேலும், இவை காஞ்சிபுரம் பௌத்த வழிபாட்டுத் தலங்களாக இருந்ததையும் காட்டுகின்றன. இத்தகைய நிலை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது.

ஜைனக் கோயில்கள் இப்பொழுதும் இருக்கின்றன என்கிறபோது பௌத்தர்களின் இடங்களும் வழிபாட்டுத் தலங்களும் என்னவாக மாறின? என்கிற கேள்வி தோன்றுவது இயல்பானதாகும். காஞ்சிபுரத்தின் பழமையான ஆவணங்கள், காஞ்சியில் பல்லவர்களின் ஆட்சி போன்ற பொருள்களைப் பற்றி ஆய்வு செய்த நவீன அறிஞர்கள் சிற்பங்களும் கட்டிடக்கலையும் யுவான்சுவாங் காஞ்சிபுரம் பற்றி கூறியதை நிவர்த்தி செய்யவில்லை என்று கூறுகின்றனர். மேலும், காஞ்சீவரத்தின் பௌத்த இருப்பையும் மறுக்கின்றனர். இந்நவீன அறிஞர்களில் பெரும்பான்மையானோர் காஞ்சிபுரத்திலுள்ள பௌத்தத் தடங்களைப் பற்றி மிகவும் குறைவாகவே அறிந்திருந்தனர் அல்லது அவர்கள் ஒன்றுமே அறியவில்லை என்று பயமில்லாமல் கூறலாம். மிக முக்கியமான இடமாக விளங்கும் காஞ்சிபுரம் பற்றி தொல்லியல் துறையைச் சார்ந்தவர்களும் தேவையான கவனத்தைச் செலுத்தவில்லை என்பது எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. பன்னிரண்டு மணி நேரங்கள் மட்டுமே தொடர்ந்து கள ஆய்வில் ஈடுபட்டதன் வாயிலாக புகழ்பெற்று விளங்கும் காமாட்சிதேவி கோயிலைச் சுற்றி அரை மைல் தூரத்திற்குள் ஐந்துக்கும் குறையாத புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்தேன். புத்தரின் இரண்டு பெருங்கற்கால சிலைகள் இக்கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்டதாகவும் என்னிடம் மக்கள் கூறினர். இச்சிலைகளைப் பற்றிய சுருக்கமான விளக்கத்தையும், கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் கீழே குறித்துள்ளேன்.
(சிலை 1)
முதல் சிலை:இவ்வைந்து சிலைகளில் முதலாவதாகவும் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நின்றநிலையில் உள்ள புத்தர் சிலையாகும் (படம் 1). இச்சிலை காமாட்சிதேவி கோயிலின் முதல் சுற்றுப்பிரகாரத்தில் (உள் சுற்றுப்பிரகாரம்) காணப்பட்டது. பீடத்தோடு சேர்த்து இச்சிலையின் உயரம் 7 அடி 10 அங்குலம் ஆகும். இச்சிலையின் அளவு விளக்கம் பின்வருமாறு:-

* சிலையின் உயரம் (பீடம் இல்லாமல்) - 7 அடி
* பீடத்தின் உயரம் - 10 அங்குலம்
* மார்பளவு அகலம் - 2 அடி
* முகத்தின் நீளம் - 9 அங்குலம் (3)
* முகத்தின் அகலம் - 8 அங்குலம்
* கழுத்தின் உயரம் - 2 1/2 அங்குலம்

இச்சிலையின் இரண்டு கைகளும் உடைந்துள்ளன. இதனால் கைகளில் என்ன பொருள்கள் இருந்தன என்று நிச்சயமாகக் கூற முடியாது. வலது கை அபய முத்திரை நிலையிலும் இடது கையில் அமுதசுரபியும் இருந்தன என்று அனுமானிக்கலாம். இச்சிலையின் மூக்கு மிகவும் அதிகமாக தேய்ந்துள்ளது. மற்றபடி இச்சிலை மிகவும் சிறப்பான நிலையில் உள்ளது. இடது தோளில் / கையில் இருந்து துணிகளின் மடிப்புகள் கீழ்நோக்கி ஓடுகின்றன. அதே மடிப்புகள் வலதுகாலின் தொடையின் மீது செல்லுகிறது. இது செம்மையாக செய்யப்பட்டுள்ளது. இச்சிலை இருக்கும் இடம் கோயில் திட்டப்பணியில் A என்று குறிக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் தற்போதைய நிலையை வைத்து காமாட்சி கோயிலோடு தொடர்புப்படுத்தி இரண்டு வகைகளில் அனுமானிக்கலாம். அவை,

1. இச்சிலை காமாட்சி தேவி கோயிலில் தொடக்கக் காலத்தில் இருந்து இன்றுவரை உள்ள முக்கியத்துவம் பெற்ற சிலையாகும்.

(அல்லது)

2. இச்சிலை யாரோ சிலரால் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு பாதுகாப்பிற்காக காமாட்சி தேவி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
(காமாட்சி அம்மன் கோயில் வரைபடம்)
இரண்டாவது அனுமானத்தை முதலில் ஆராயலாம். இரண்டாவது அனுமானத்தை நிரூபணம் செய்யமுடியாமல் போனால் முதல் அனுமானம் இறுதி முடிவாக மாறும். இப்பெரும் கற்சிலை வேறு எங்கேயோ இருந்து யாரோ ஒருவரால் உள்நோக்கத்தோடு இப்பொழுது இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று நம்பினால் சில கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். அக்கேள்விகள்,

1. இக்கோயிலுக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பாக இச்சிலை எங்கே இருந்தது?

2. இச்சிலையைக் காமாட்சிதேவி கோயிலுக்குக் கொண்டுவந்தவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?

இச்சிலை 1) கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருந்திருக்கலாம். 2) அருகாமையில் இருந்திருக்கலாம். 3) இக்கோயிலின் வளாகத்திற்குள்ளேயே இருந்திருக்கலாம். முதலிரண்டு நிகழ்வு தொடர்பாக அங்கிருந்து இச்சிலையைக் காமாட்சி கோயிலுக்கு எடுத்துச்செல்வது மிகக் கடினமான வேலையாகும். சற்று தூரத்தில் இருந்து கொண்டுவந்து தற்போது இருக்கும் இடத்தில் இச்சிலையை வைப்பது என்பது மிகவும் கடினமானதாகும். சில ஆயிரக்கணக்கான எடைகள் கொண்ட இச்சிலையை நீண்ட தூரம் சுமக்க வேண்டும் என்பதோடு ஏழு அடிக்கும் மேலாக தூக்கிச் சுமக்க வேண்டும். இச்சிலையைக் கோயிலுக்குள் கொண்டுசெல்ல இரண்டு அல்லது மூன்றுக்கும் குறையாத நுழைவாயில்களைக் கடக்க வேண்டும்.

ஏன் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது? என்ற கேள்விக்கும் நாம் விடை காண வேண்டும். இச்சிலை பாதுகாப்பிற்காக எடுத்துச்செல்லப்பட்டது என்றால், நன்றாக அமைக்கப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். வெளி சுற்றுப்பிரகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தாது என்பதால் இச்சிலையை இங்கேயே வைத்திருக்கலாம். இருப்பினும் வேலையாட்கள் கோயிலின் உள்சுற்றுப்பிரகாரத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர் எனலாம்.

இச்சிலை தற்போது இருக்கும் இடத்திற்கு மிகவும் அருகாமையில் இருந்து, அந்த ஆதி இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது இருக்கும் இடத்திலேயே வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவது எளிதாக இருக்கலாம்.

இச்சிலையை உள்சுற்றுப்பிரகாரத்தில் வைக்கும் சிரமமான பணியை மேற்கொண்டது யார்? இந்துவா? அல்லது பௌத்தரா? என்ற கேள்வி எழுகிறது. இதை செய்தது இந்துவாக இருந்தால், யார் கோயிலுக்குள் வைத்தது? இச்சிலையின் மீது அக்கறை கொண்டது யார்? ஏன் அவர் தன்னுடைய அக்கறையைக் கோயிலுக்கு அருகில் கிடக்கும் மற்ற சிலைகளின் மீது அக்கறை செலுத்தவில்லை? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. ஓர் இந்து அனைத்து பிரச்சனைகளையும் சுமந்துகொண்டு பாதுகாப்பிற்காக இச்சிலையை இந்து கோயிலுக்குள் கொண்டுவந்தது போல் தெரியவில்லை.

இதே கோயிலுக்குள் முக்கியமான இடத்தில் இருந்த சிலையை எடுத்து இப்பொழுது இருக்கும் இடத்தில் வைத்திருக்கலாம். இச்சிலையை ஒரு பௌத்தர் வெளியிலிருந்து கொண்டுவந்து இந்துக் கோயிலுக்குள் வைத்தார் என்றால், ஒரு பௌத்தர் புத்தரின் சிலையைக் கொண்டுவந்து பாதுகாப்பிற்காக இந்துக் கோயிலுக்குள் வைப்பதற்கு எந்த ஒரு இந்துவும் அனுமதிக்கமாட்டார். எனவே, காமாட்சி இந்துக் கோயிலுக்கு வெளியே இருந்த புத்தர் சிலையை இக்கோயிலுக்குள் பாதுகாப்பிற்காகக் கொண்டு வருவது சாத்தியமற்றதாகும். காமாட்சிதேவி கோயில் பௌத்தக் கோயிலாக இருக்க வேண்டும் அல்லது இக்கோயிலின் ஒரு பகுதி பௌத்தம் சார்ந்ததாக இருக்க வேண்டும். காமாட்சி கோயில் தொடக்கக்காலங்களில் தாராதேவி கோயில் என்று வழங்கிவந்தது. இக்கோயில் பௌத்த மரபைச் சார்ந்த தாராதேவி கோயில் என்று கூறுவதற்கு அனைத்து வகையான சாத்தியக்கூறுகளும் உள்ளன. மேலும், புத்தரை இந்துக் கடவுள்களின் அவதாரமாக கருதிய நம்பிக்கையினால், வேறு பல கோயில்களை இந்துக் கோயில்களாக மாற்றியதைப் போல தாராதேவி கோயிலையும் இந்துக் கோயிலாகப் பிற்காலத்தில் மாற்றியுள்ளனர்.
(சிலை 2)
இரண்டாவது சிலை:இச்சிலையின் தலை உடைந்துள்ளதோடு காணாமலும் போய்விட்டது. இச்சிலை காமாட்சி தேவி கோயிலின் இரண்டாவது சுற்றுப்பிரகாரத்தில் காணப்பட்டது. இச்சிலையின் உடல் முழுவதும் சிதைந்துள்ளது. பூமியில் மறைந்திருந்த இச்சிலையைப் புகைபடம் எடுப்பதற்காக பூமிக்கு மேலே எடுத்து வைக்கப்பட்டது. இச்சிலை இருக்கும் இடம் கோயில் திட்டப்பணியில் B என்று குறிக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் இரண்டு கைகளும் மடியின் மீது யோகா முத்திரை நிலையில் உள்ளது.
(சிலை 3)
மூன்றாவது சிலை:
இச்சிலை காமாட்சிதேவி கோயிலுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிலையின் கைகள் இரண்டும் யோகா முத்திரையோடு தியான நிலையில் அமைந்துள்ளது. தலையில் உள்ள ஜுவாலா, மேலாடை மற்றும் வேறு சில சிறுசிறு கூறுகள் இச்சிலை புத்தர் என்பதைக் காட்டுகிறது. மேலும், இதே தோட்டத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தரின் வேறு இரண்டு மாபெரும் சிலைகள் புதைக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். இச்சிலைகள் தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வெளிப்படுத்தப்பட்டால், இச்செயல் ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும்.

நான்காவது & ஐந்தாவது சிலைகள்:
இச்சிலைகள் கருக்கில் அமர்ந்த அம்மன் கோயிலில் உள்ளன. இக்கோயில் விஷ்ணு - காஞ்சி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. கருக்கில் அமர்ந்த அம்மன் என்னும் பெண் தெய்வம் வீற்றிருக்கும் இடத்தைச் சுற்றி கிடந்த அனைத்து கற்சிலைகளையும் பக்தி உள்ள ஒருவர் திரட்டி இக்கோயிலில் இப்பொழுது சிலைகள் இருக்கும் இடத்தில் வைத்ததாக என்னிடம் மக்கள் கூறினர். படம் 4ல் உள்ள சிலை யோகா முத்திரை நிலையில் உள்ளது. படம் 5ல் உள்ள சிலையின் வலது கை பூமிபர்ஸ முத்திரை நிலையில் உள்ளது.
(சிலை 4)


(சிலை 5)









சுவடுகளைக் கண்டறிய மிகத்தீவிரமான ஆய்வை மேற்கொண்டால், பல சிலைகளையும் கட்டிடங்களையும் கண்டுபிடிக்கலாம் என்பது என்னுடைய நம்பிக்கையாகும். ஆர்வமும் ஆற்றலும் கொண்ட மெட்ராஸ் அரசின் தொல்லியலாளர்கள் தங்களுடைய கவனத்தையும் விசாரணையையும் பௌத்தக் களத்தில் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அடிக்குறிப்புகள்:

1) தர்மபால பூசர் ஈனயான பௌத்தப் பிரிவைச் சேர்ந்தவர். இவர் வட இந்தியாவுக்குச் சென்றபோது மகாயான பௌத்தப் பிரிவிற்கு மாறினார் என்று தோன்றுகிறது. யுவான் சுவாங் நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு வருகைத் தந்தபோது, இப்பல்கலைக் கழகத்தில் தர்மபால பூசர் பேராசிரியாக இருந்தார்.

2) watter's translation, Vol. II., P.226.

3) இச்சிலை உத்தம - தஸதால என்பதன் முறைப்படி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாதரமாய் உள்ளது. என்னுடைய Elements of Hindu Iconography Vol. lல் பின்னிணைப்பு Bயைக் காண்க.

No comments:

Post a Comment