Wednesday, March 18, 2020

சீத்தலைச் சாத்தனார் பெயரும் பௌத்த வரலாறும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் கோட்பாடுகளையும் தருக்கங்களையும் இலக்கியத்தில் வைத்து பிரம்மாண்டமான அளவில் முதலில் பாடியவர் மணிமேகலையை இயற்றிய சாத்தனார்தான். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றழைக்கப்படும் இவர் மதுரை, சீத்தலை ஆகிய இரண்டு ஊர்ப்பெயர்களைத் தன் பெயரோடு சேர்த்து அடையாளமாகக் கொண்டுள்ளார். இவ்வாறு இரண்டு ஊர்ப்பெயர்களைத் தன் பெயரோடு சேர்த்து அடையாளமாகக் கொண்ட முதலும் கடைசியுமான தமிழ்ப் புலவர் சாத்தனாராகத்தான் இருக்கக்கூடும்.

மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பதற்கு அறிஞர் பெருமக்கள் சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்த சாத்தனார் என்ற பெயர் கொண்ட இவர் மதுரையை மையமாகக் கொண்டு தானியங்களை வணிகம் செய்தவர் ஆவார் என்று விளக்கமளிக்கின்றனர். வணிகச் சமூகத்தால் பௌத்தம் பேராதரவைப் பெற்றது என்று வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். வணிகத்தை மேற்கொண்ட சாத்தனார் பௌத்த ஆதரவு, பௌத்தர் என்பதோடு மட்டும் இல்லாமல் பேரிலக்கியத்தைப் படைத்தார் என்கிற வரலாற்றை அவர் உருவாக்கியுள்ளார். பௌத்தத்தையும் வணிகத்தையும் பற்றி தொடர்புப்படுத்தி பேசுகையில் வடநாட்டு வணிகர்கள் பௌத்தத்திற்கு ஆதரவு அளித்தனர் என்பதைப் போல பேசிக்கொண்டிருக்கிறோம். உள்ளூர் தமிழ் வணிகர்கள் பௌத்தத்தை ஆதரித்தார்கள், பௌத்த இலக்கியங்களை எழுதினார்கள் என்பதற்குச் சாத்தனார் பெரும் உதாரணம் ஆகும்.

மாபெரும் தமிழிலக்கிய படைப்பாளியான சாத்தனாரின் ஊர்ப்பெயரான சீத்தலை என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ச் சமூகம் வன்முறை நிறைந்த கதையாடலை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக நிகழ்த்திவிட்டது. இன்றைக்கும் பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்களுக்கு சீத்தலைச் சாத்தனார் என்றால் சீழ்ப்பிடித்த தலையுடைய சாத்தனார் என்றே கற்பிக்கின்றனர். நானும் பள்ளிகளில், உயர்கல்வி நிறுவனங்களில் அப்படித்தான் பாடம் கேட்டுள்ளேன்.

ஒரு மாபெரும் அறிவுஜீவியின் கருத்தியலை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாதபொழுது பொறம்போக்குத் தனமாக அவன் மீது சேற்றைவாரி பூச நினைக்கும் எந்த சமூகமாக இருந்தாலும் அது முட்டாள்கள் நிறைந்த சமூகம்தான். சாத்தனார் பெரும் தத்துவக்கோட்பாட்டோடு சமூகத்தை அணுகினார் என்பதும் இலக்கியத்தைப் படைத்தார் என்பதும் நாம் மறந்துவிடக்கூடாது.

மணிமேகலை நூலை முதன்முதலாக உ.வே.சா பதிப்பித்தபோது திருவள்ளுவமாலையில் இடம்பெற்ற பாடலை ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு சாத்தனார் சங்கத்தில் வீற்றிருந்தார் என்றும் சிறந்த நூல்கள் சங்கத்தில் படைக்கப்படாதபோது எழுத்தாணியால் தன் தலையில் குத்திக்கொள்வார் என்றும் இதனால் அவருக்கு சீழ்ப்பிடித்தது என்றும் எழுதினார். திருவள்ளுவமாலையின் பாடல் ஒன்றின் துணையோடு அவர் எழுதியிருந்தாலும் இக்கதையாடல் உண்மையானது இல்லை என்றும் அவர் மறுத்தும் உள்ளார். மணிமேகலையை பதிப்பித்த நா.மு. வேங்கடசாமியின் பதிப்பில் இத்தகைய கதையாடல் பற்றி அவர் எதுவும் எழுதவில்லை. பிற்காலத்தில் வந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும் இக்கதையை சுட்டி அது உண்மை இல்லை என்று தீவிரமாக மறுத்துள்ளனர் என்றபோதிலும் சாத்தனார் சீழ்ப்பிடித்த தலையை உடையவர் என்பதே தமிழ்ச் சமூகத்தில் நின்றுவிட்டது.

சீதள என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமே சீத்தலை என்பதாகும். சீதள என்றால் குளிர்ச்சி பொருந்திய, குளிர்ச்சி, குளிர்ச்சித்தன்மை கொண்ட என பொருள்படும். எனவே சீத்தலைச் சாத்தனார் என்றால் குளிர்ச்சித் தன்மைகொண்ட சாத்தனார் என்று பொருள். குளிர்ச்சியான உடல் என்பதற்கு சீதள உடம்பு என்று வழக்கில் நாம் இன்றும் இச்சொல்லை பயன்படுத்துகிறோம்.

காஞ்சிபுரத்தை ஆண்ட பௌத்த மன்னன் சீதளன் என்பவர் (குளிர்ச்சியானவர்) எதிரி மன்னனால் தோற்கடிக்கப்பட்டபோது அவர் இலங்கைக்குச் சென்றார் என்பது வரலாறாகும். எனவே சீதளன் என்ற பெயரில் தமிழகத்திலேயே ஒரு பௌத்த மன்னன் ஆண்டான் என்பது வரலாறு.
எனவே சீத்தலை என்பதும் சீதளன் என்பதும் தமிழ் மண் அறிந்திருந்தவையே ஆகும்.

காவரி நதி பாயும் சோழநாட்டில் சீத்தலை என்ற ஊர் இருந்தது என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே சாத்தனார் சோழ நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பாண்டிய நாட்டில் வாணிபத்தை மேற்கொண்டார் என்றும் பொருள் கொள்ளலாம். சீதள என்பதன் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவம் சீத்தலை, சீதள என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் தண்டலை (தண்+தலை=தண்டலை) ஆகும். தண் என்றால் குளிர்ச்சி என்று பொருள்.

படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் தண்டலையார் சதகம் காவிரி நதி பாயும் பொன்னி நாட்டில் அல்லது சோழநாட்டில் உள்ள தண்டலை என்னும் ஊரில் உள்ள சிவனைப் போற்றி புகழ்கிறது. பௌத்தத்தை நிலைநிறுத்த போராடிய சாத்தனார் பிறந்த சீத்தலை அல்லது தண்டலை என்னும் ஊரின் பெயரிலேயே ஒரு சதக இலக்கியம் சிவனை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது. சீத்தலை என்ற அடைமொழியைப் பெற்றதனால் சாத்தனாருக்கு சீழ்ப்பிடித்த தலை என்று கதை கட்டியதைப் போல தண்டலை என்பதன் சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்படுத்தப்பட்ட வடிவமான சீத்தலை என்பதை அடிப்படையாகக் கொண்டு தண்டலையார் சதகத்தின் நாயகனான் சிவன் சீழ்ப்பிடித்த தலையைக் கொண்டவன் என்ற கதையாடல் இருந்தால் அதை இந்து சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது சாதாரண கேள்வியாக இருக்க முடியாது. இவ்வாறான ஒரு கதையாடல் சிவனின் மீது இருக்க வேண்டும் என்பதல்ல நம் நோக்கம். ஒரு மாபெரும் அறிவுஜீவியான சாத்தனாரைப் போன்றவர்கள் மீது போலி கதையாடல்கள் அமைந்துவிடக்கூடாது என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.

சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பதை மட்டும் இவ்வூர் அடையாளமாகக் கொண்டிருக்கவில்லை. சாத்தனார் என்னும் பௌத்தர் பிறந்த ஊர் என்றால் இவ்வூரில் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று பொருள்கொள்ளலாம். இத்தோடு மட்டும் இல்லாமல் சீத்தலை (சீதள, சீதளன் மன்னன்) என்பதே பௌத்த ஊர்ப்பெயராகும். எனவே, தண்டலை என்பதும் பௌத்த ஊர்ப்பெயராகும்.

சாத்தனார் என்ற பௌத்தப் பேரறிஞர் சீத்தலையில் பிறந்து பெரும் தமிழ்க் காப்பியத்தைப் படைத்தார். அதே ஊரின் பெயரை அடையாளமாகக் கொண்டு பிற்காலத்தில் தண்டலையார் சதகம் சிவனை முன்னிறுத்திப்பாடுவது சாதாரண நிகழ்வல்ல. இதை பௌத்தத்திற்கு எதிரான நடவடிக்கை என்றோ அல்லது பௌத்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட எதிர்நிகழ்வுகளின் தொடர்ச்சிகளில் ஒன்றாகவொ கருதலாம்.


சாத்தனாரின் மீது சுமத்தப்பட்ட இத்தகைய போலி கதையாடல் யதார்த்தமாக நிகழ்ந்ததல்ல. வள்ளுவர், சாத்தனாரைப் போன்ற பௌத்த அறிவுஜீவிகள் மீது கட்டப்பட்ட கதையாடல்கள் பௌத்தத்தை எதிர்ப்பதற்குத் திட்டமிட்ட தொடர்முயற்சியாக இருந்திருக்க வேண்டும். சாத்தனாரின் மீது சுமத்தப்படும் இத்தகைய பழிக்கதை சீத்தலை என்னும் ஊரில் பௌத்தம் இருந்தது என்பதையும் அங்கு பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் மறைப்பதற்காக இருந்திருக்கக்கூடும் அல்லது இத்தகைய போலிக்கதை சீத்தலையில் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள், சோழநாட்டில், பொன்னி நாட்டில் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை மறைத்துவிடுகிறது.

சாத்தனார் போன்ற ஒரு மாபெரும் புலவர் மீது ஆயிரம் ஆயிரம் போலி கதைகளைக் கட்டினாலும் அவைகளால் சாத்தாருக்கு இழுக்கேதும் இல்லை. அவர் பெரும் அறிவுஜீவி.

1 comment:

  1. சிறந்த பதிவு.. வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete