பண்டைய தமிழ்ச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் (தலைவன், தலைவி) ஒருவருக்கொருவர் விரும்பி, அவர்களின் காதலை அவர்களின் பெற்றோர்கள் ஏற்காத பொழுது இருவரும் உடன்போக்குச் செல்வார்கள். உடன்போக்கு என்பது பெற்றோர்கள் மறுத்த பிறகு, தலைவனும் தலைவியும் பெற்றோர்களை விட்டு நீங்கி தாங்கள் நினைத்த வாழ்வை வாழ்வதற்காக இருவரும் ஒருவர் உடன் மற்றொருவர் செல்வதாகும். இக்கால சமூகத்தில் இந்நிகழ்வை ஓடிப்போதல் என்பார்கள். உடன்போக்கு அல்லது ஓடிப்போதல் என்பது பௌத்த வாழ்வியலில் அறமாகிறது. ஓடிப்போதல் என்பதே நாகரிகமாகும்.
தலைவனும் தலைவியும் காதலித்து அக்காதலைப் பெற்றோர்கள் ஏற்காதபோது இருவரும் ஓடிப்போதல் அல்லது உடன்போக்குச் செய்தல் அறமாகும். பெற்றோர்கள் மறுக்கிறபோது பெற்றோர்களுக்கு செவிசாய்த்து உடன்போக்கு மேற்கொள்ளாமல் விட்டுவிடுவது அறமற்ற செயலாகும்.
உடன்போக்கு எவ்வாறு பௌத்த அறமாக மாறுகிறது அல்லது பௌத்த வாழ்வியலில் உடன்போக்கு எவ்வாறு அறமாக அமைந்துள்ளது என்ற கேள்விக்கான விடையைக் கலித்தொகையில் பெருங்கடுங்கோ பாடிய பாலைக்கலி பாடலினால் அறிந்துகொள்ளலாம். 'எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்' என்னும் பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை அறிந்துகொண்டால் உடன்போக்கு பௌத்த அறம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பாலை நிலத்தின் வழி தலைவனும் தலைவியும் உடன்போக்கினை மேற்கொண்டார்கள். தலைவியின் தாய் அந்நிலத்து வழியே அவர்களைத் தேடிச் செல்கிறாள். அங்கே அத்தாய் ஒரு அந்தணரை சந்திக்கிறாள். அவரிடம் என் மகள் ஒருத்தியும் வேறொருத்தியின் மகனும் இவ்வழியில் சென்றதைக் கண்டீர்களா அந்தணரே என்கிறாள். அதற்கு அவரோ பார்க்கவில்லை என்று சொல்லமாட்டேன், பார்த்தேன் என்கிறார்.
வெறுமனே அக்கேள்விக்குப் பார்த்தேன் என்று மட்டும் பதலளித்ததோடு நின்றுவிடாமல் சந்தனத்தைப் பூசிக்கொள்பவருக்கு அது பயன்படுமே தவிர அது மலையில் பிறந்தாலும் அதனால் மலைக்குப் பயனில்லை. நினைத்துப் பார்த்தால் இது போல உன்மகள் உமக்குச் சொந்தமில்லை, அத்தலைவனுக்கே சொந்தம் என்கிறார். இதை அந்தணர் "பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே" என்று கூறுகிறார்.
சிறந்த வெண்ணிற முத்துக்கள் அணிபவர்களுக்குப் பயன்படுமே தவிர அவைகள் கடலில் பிறந்தாலும் கடலுக்கு அவைகளால் பயனில்லை. நன்கு ஆராய்ந்து தேரி முடிவுக்கு வந்தால் இதுபோல உன்மகள் உமக்கு சொந்தமில்லை அத்தலைவனுக்கே சொந்தம் என்கிறார். இதை "சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே" என்ற வரிகளால் குறிப்பிடுகிறார். இங்கு தேருங்கால் என்ற சொல் பௌத்த மரபிற்குரிய சொல்லாடல் ஆகும். அறிவில் நன்கு தேரியவர்கள் தேரவாத பௌத்தர்கள் ஆவர். எனவே பௌத்தர்கள் இச்சொல்லை அடிக்கடி பயன்படுத்துவர்.
ஏழு நரம்புகள் பொருந்திய யாழிசைக் கருவியிலிருந்து வரும் இசை கேட்பவருக்கு சொந்தமாகுமே தவிர அவ்விசைக் கருவிக்கு இசை சொந்தமாகாது. இதுபோல உம்மகள் உமக்கு சொந்தமில்லை. அத்தலைவனுக்கே சொந்தம் என்று அந்தணர் கூறுகிறார். இதை "ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அணையளே" என்ற வரிகளால் அறியலாம்.
இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அத்தாய் கேட்ட கேள்விக்கு வெறுமனே பார்த்தேன் என்று மட்டும் பதிலளிக்காமல், காதலின் அவசியத்தை அந்தணர் உணர்த்துகிறார். அப்பெண் அந்த ஆணுக்கே சொந்தம் என்ற வாதம்தான் அந்தணரின் அழுத்தமான வாதம் ஆகும். ஒரு உதாரணம் அல்ல சந்தனம், முத்துக்கள், யாழிசை ஆகியவற்றின் தன்மையை முன்னிறுத்தி உடன்போக்கை அங்கீகரிக்கிறார் அந்தணர்.
இங்கு எழுப்பப்படும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் வெவ்வேறு குழுவிலிருந்து ஆணும் பெண்ணும் விரும்பினால் அதை குழுவாதத்தால் பிரிப்பது சாதிய சமூக அமைப்பில் உள்ள பிராமணர்களின் வேலையாகும். பண்டிதர் அயோத்திதாசரின் மொழியில் சொல்ல வேண்டுமேயானால் வேஷப்பிராமணர்களின் வேலையாகும். இப்பாடலில் வரும் அந்தணர் வெவ்வேறு குழுக்களுக்கிடையே உள்ள காதலை உடன்போக்குச் சூழலிலும் அங்கீகரிக்கிறார் என்றால் அவர் பௌத்த அந்தணராக இருக்க வேண்டும். பண்டிதரின் மொழியில் சொல்லவேண்டுமேயானால் யதார்த்த பிராமணரின் வேலையாகும்.
இப்பாடலில் வரும் அந்தணர் பிச்சைப் பாத்திரத்தை வைத்துள்ளார். பௌத்த மத பிக்குகளாகிய அந்தணர்கள் பிச்சை பாத்திரத்தை வைத்திருப்பதை இங்கு நினைவில்கொள்ள வேண்டும். தலைவனும் தலைவியும் உடன்போக்கை மேற்கொள்வது பாலை நிலமாகும். இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் மேற்கொண்ட உடன்போக்கு அசாதாரண நிகழ்வு என்பதைக் காட்ட காட்சிப் பின்னணியாக பாலைக்காட்சி இடம்பெறும் என்றாலும், இக்காட்சியைப் பின்னணியாகக் கொண்டு அந்தணர் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வரும் காலம் மழை அல்லாத வெப்ப காலமாகும். சூரிய வெப்பம் வீசியது என்பதை 'எறித்தரு கதிர்' என்ற தொடரால் அறியலாம். எனவே பௌத்த அந்தணர்கள் பிச்சை எடுப்பதற்குரிய காலம் இதுவென்று அறிந்துகொள்ளலாம். எனவே காதலின் உடன்போக்கை மிகத் தீவிரமாக அங்கீகரிக்க இலக்கிய உலகிலும் யதார்த்த வாழ்விலும் பௌத்த அந்தணரால் மட்டுமே முடியும் என்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் உடன்போக்கு மேற்கொண்டது அற நெறியிலிருந்து தவறாமல் இருப்பதற்காகவே என்று பௌத்த அந்தணர் 'அறம் தலை பிரியா' என்றுணர்த்துகிறார். அறம் என்ற சொல்லே பௌத்த மரபைச் சார்ந்தது என்றும் இச்சொல்லுக்கும் வேஷப் பிராமணர்களுக்கும் தொடர்பில்லை என்றும் நாம் அறிந்ததையே அடிப்படையாக வைத்துக்கொண்டுப் பார்த்தால் புலவர் பெருங்கடுங்கோ பௌத்தக் கருத்தியலை பௌத்த பிக்குவின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.
எனவே 'காதல் உடன்போக்கு' என்பதை அங்கீகரிப்பது பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பௌத்த அறமாக இருந்துள்ளதை நாம் அறியலாம்.
No comments:
Post a Comment