Sunday, March 1, 2020

கீழடி மனித உருவமும் சாத்துக்கூடல் வீரனாரும்

              (கீழடி மனித உருவ சிலை)

 பிரிட்டிஷ் – இந்தியாவில் ஏற்படத் தொடங்கிய அகழாய்வு இந்தியாவின் பழமையான வரலாற்றைக் கட்டமைப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் உதவியது. ஒரு வகையான பண்பாட்டிற்குட்பட்ட வாழ்க்கை முறையை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் மனிதர்கள் மேற்கொண்டிருந்தனர் என்பதை அறிவதற்கும், இதை உலகிற்குப் பறைசாற்றுவதற்கும் யாவராலும் மறுக்கமுடியாத சாட்சிகளாய் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் அமைகின்றன. இவ்வகையில் கீழடி அகழாய்வு மனிதகுல வரலாற்றின் மாபெரும் சாட்சியாய் அமைந்துள்ளது.

 கீழடி அகழாய்வுகளில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்களும், 3 விலங்கு உருவங்களும் கிடைத்துள்ளன (2019, ப.21). சுடுமண்ணால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கலை வடிவமானது ஆதிகால கலை வரலாற்றையே காட்டுவதால் இவ்வுருவச் சிலைகள் காலப்பழமையானது என்பதோடு மட்டுமில்லாமல் காலப்பழமை சார்ந்த உருவம் வெளிப்படுத்துவன யாவை என்கிற மிக முக்கியமான கேள்விக்கு இது நம்மை இட்டுச் செல்கிறது. இவ்வுருவச் சிலைகளின் சில பெயர்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

1. மனித தலைப் பகுதி (தலை உருவம் மட்டும்)
2. ஆண் உடல் பாகம்
3. புடைப்பு உருவம்
4. உடல்பாக வடிவம்
5. தலையின் அச்சு
6. குதிரை தலை
7. காளையின் தலைப் பகுதி (மேலது, ப.48)

கீழடி புதைப்பொருட்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு  இந்நாகரிகம் சமய சார்பற்ற நாகரிகம் என்கிற கருத்து மேலோங்கியுள்ளது. இக்கருத்து கீழடியில் கிடைக்கபெற்ற பதின்மூன்று மனித உருவங்கள் அனைத்தும் எந்த மதத்தையும் சமயத்தையும் சாராத சமய சார்பற்ற உருவங்கள் என்பதையே வலியுறுத்துகிறது எனலாம்.

 புலங்கடந்த தொல்லியல் அறிவியல்களின் மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (PAMA) இயக்குநர் திரு. பி.ஜெ. செரியன் அவர்கள் “கீழடி அகழ்வாய்வுகளில் இருந்து  இதுவரை கவனமாக ஆய்வு செய்யத் தகுந்த மதம் தொடர்பான குறியீடுகள் எவையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” (மேலது, ப. அணிந்துரை) என்கிறார். இவருடைய கூற்றில் ‘மதம் தொடர்பான குறியீடுகள் எவையும் கிடைக்கவில்லை’ என்ற கருத்து மிக அழுத்தமான வாதமாகும். இவர் மேலும் ஓரிடத்தில் கீழடியைப் பற்றி கூறுகையில் “இயற்கையுடன் இணைந்த வாழ்வு, சாதி அமைப்பு இன்மை, குறைந்த அதிகாரங்கள் பயன்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு பண்பாட்டையே கீழடி அகழ்வாய்வுகள் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்” என்று கூறியவர் “கீழடி கண்டுபிடிப்புகள் நமக்கு உணர்த்த விரும்புவது என்னவென்றால் மதச்சார்பின்மை” என்று கூறுகிறார். இவருடைய கூற்றுகளில் கீழடி மதச்சார்பற்றது என்கிற கருத்து மிக அழுத்தமாக இடம்பெற்றுள்ளதை நாம் அறிகிறோம்.

 திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற புத்தகத்தில் கீழடியைப் பற்றி கூறுகையில் இந்நாகரிகம் சமயச் சார்பற்ற நாகரிகம் என்பதை வெளிப்படுத்த பின்வருமாறு கூறுகிறார்: “கீழடி அகழ்வாய்வுத் தடயங்களில் சமய வழிபாட்டிற்கான அடையாளங்கள் எதுவும் தூக்கலாக தென்படவில்லை என்பது தமிழ்த்தொன்மங்களின் அணுகுமுறையோடு இணக்கம் காட்டுவதோடு அது சிந்து வெளி நகர்மயச் சமூகவாழ்வின் அடிப்படைகளோடும் ஒப்பிடத்தக்கதாக உள்ளது” (2018, ப.28).

 மேற்குறிப்பிடப்பட்ட அறிஞர்கள் கீழடி நாகரிகம் சமயச் சார்பற்றவை என்று கூறியதை மிக கவனமாக எடுத்துக்கொண்டு, கீழடியில் கிடைக்கப்பெற்ற மனித தலைப் பகுதி உருவத்துடன் பொருந்தும் சிலையொன்றினை ஒப்பிட்டு ஆராயும் வகையில் இக்கட்டுரை அமையும்.

கீழடி மனித உருவச் சிலையும் சாத்துக்கூடல் வீரனாரும்…
 சமீபத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நாகரீகம் என்ற நூலைப் படித்த போது அதில் வெளியிடப்பட்டிருந்த ஒரு மனித உருவச் சிலை பெளத்த ஆராய்ச்சியாளரான எனது கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சாத்துக்கூடல் என்னும் ஊரில்  தலை ஆபரணம், நீண்ட காதுகள் கொண்ட  சிலை ஒன்றைக் கண்டோம். இச்சிலையின் தோற்றம் கீழடியில் காணப்பட்ட மனித உருவச் சிலையை ஒத்து காணப்படுகிறது. இச்சிலையை கிராம மக்கள் அந்த சிலையை வீரனார் என அழைத்தனர். மேலும், இச்சிலையைப் பார்ப்பதற்கு புத்தரின் சாயலில் இருந்தது.
 

வீரனார் அந்தப் பகுதி மக்களின் குலத்தெய்வமாக வழிபடப்படுகிறது. தலை மட்டுமே உள்ள இச்சிலை முன்பு தரையில் இருந்ததாகவும் இப்பொழுது மேடை அமைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கள ஆய்வில் அறிந்தோம். இவ்வீரனார் சிலைக்கு புத்தருக்கு காது நீண்டு இருப்பதைப் போல உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட புத்தர் சிலைகளின் தலையில் காணப்படும் ஞானப்புள்ளி, ஞானக்கூம்பு ஆகியன இச்சிலையில் காணப்படவில்லை என்றாலும் இச்சிலையின் தலையில் முடிசுருள் கூம்பாக அமைத்திருப்பது காந்தார கலைவடிவில் புத்தர் அமைந்திருக்கும் தோற்றத்தை நினைவுறுத்துகிறது. இச்சிலையின் பின்னந்தலையில் குறியீடு ஒன்று காணப்படுகிறது.


(புத்தரின் சாயலில் உள்ள சாத்துக்கூடல் வீரனார்)


         வீரனார் என்கிற பெயர் தமிழ்ச்சமூகத்தில் புத்தருக்கு வழங்கப்படும் பெயர்களுள் ஒன்று என கருதப்படுகிறது. ஏற்கனவே, புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட வீராம்பட்டினம் (அரிக்கன்மேடு, அருகன் மேடு), வீரகனூர் (வீர அருகனூர், சேலம் மாவட்டம்) ஆகிய இடங்களைக் குறிக்கும் ஊர்ப்பெயர்களில் வீரம் என்கிற அடைமொழி சேர்ந்துவருவது கவனிக்கத்தக்கது. புத்தராகிய சாஸ்தாவின் துதிப்பாடலில் இவர் வீராய என்று விளித்து அழைக்கப்படுகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். 1949 ஆம் ஆண்டு வெளிவந்த பி.சி. அலெக்ஸாண்டரின் கேரளாவில் பௌத்தம் என்ற நூலில் புத்தரைக் குறிக்கும் ஜினன் என்ற சொல்லுக்கு மாவீரன் என்று அறிஞர்கள் பொருள்கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். இவையாவும் புத்தருக்கு வீரன் என்ற பெயர் வழங்கிவந்ததையே காட்டுகிறது எனலாம்.

 சாத்துக்கூடல் என்னும் ஊர்ப்பெயருக்கு இவ்வூர் மக்கள் “ஏழு கன்னிமார்கள் கூடிய இடம்” என்று விளக்கமளிக்கின்றனர். இவ்வூரில் ஏழு கன்னிமார்கள் அமைந்த கோயில் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கன்னிமார்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். வடமொழியில் சாத் என்ற சொல்லுக்கு ஏழு என்று பொருளாகும். கிராம மக்களின் விளக்கத்திற்கு ஏற்ப துகரம் சாத் என்பதோடு சேர்ந்து சாத்து என்று அமைந்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஏழு கன்னிமார்கள் கூடிய இடம் என்று கிராம மக்கள் அளிக்கும் விளக்கத்திற்கு இவ்வூர்ப்பெயர் ஒத்துப்போகிறது. இத்தோடு மட்டும் இல்லாமல் சாத்துக்கூடல் என்பதற்கு மற்றொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. அதாவது சாத்து என்றால் உப்பு என்று பொருளாகும். எனவே உப்பு வணிகர்கள் கூடிய இடம் சாத்துக்கூடல் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வூரில் சாத்தன்  சிலை ஒன்றும் உள்ளது. சாத்தன் என்பது புத்தரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சாஸ்தா என்ற வடமொழி சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமாகும். சாத்துக்கூடல் என்பது சாத்தன்கூடல் என்றும் இருந்திருக்கலாம் என்றும் அனுமானிக்கலாம். என்றாலும் இவ்வூர்ப்பெயருக்கான விளக்கம் மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் இவ்வூருக்கு அப்பர் வந்துவிட்டுபோனதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். இவ்வூரில் அப்பர்சுவாமி மடம் என்றும் ஒரு மடம் ஒன்று உள்ளது. இது தனிநபர் சொத்தாகும்.

         கீழடி அகழாய்வுகளில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் காணப்படும் மனித தலைப்பகுதி சிலையொன்றோடு இவ்வீரனார் சிலை ஒத்துப்போகிறது என்பதை இவ்விரு படங்களையும் காணும்போது அறியலாம். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சிலையில் தலையைச் சுற்றி தலைப்பாகையைப் போல காணப்படும் தலை ஆபரணம் இருப்பதை அறியலாம். மேலும், இச்சிலையின் காதும் நீண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே போல இவ்வீரனாருக்கும் தலையைச் சுற்றி ஆபரணமும் நீண்ட காதும் அமைந்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியின் மேலே கூம்பு போன்ற வடிவம் சிதைந்துள்ளதைப் படத்தில் காணலாம்.  இவ்வீரனார் சிலையின் தலைக்கு மேல் முடிச்சுருளால் அமைந்த கூம்பு வடிவம் காணப்படுகிறது. மேலும், இதை தலைக்குமேல் காணப்படும் முடிச்சுருளால் அமைந்த செங்குத்தான அமைப்பாக இருக்கிறது என்றும் கூறலாம். இவ்வீரனார் சிலை காலத்தால் மிகவும் பிந்தையதாக அல்லது மிகவும் அண்மைக்காலத்து சிலையாக இருக்க வேண்டும். இருப்பினும் இச்சிலையின் தோற்றம் தமிழ்ச் சமூகத்தின் பழமையை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கீழடி மனித முகத்திற்கும் வீரனார் சிலைக்கும் வேற்றுமைகள் இல்லாமலில்லை. கீழடி மனித முகத்தில் தாடைப் பகுதி குறுகலாகத் தெரிகிறது. வீரனார் சிலையில் தாடைப் பகுதி நேர்வெட்டில் கீழே இறங்குவதுபோல் தெரிகிறது. மேலும் வீரனார் தலையில் உள்ள ஆபரணத்தில் நெற்றிக்கு நேராக தூக்கலான வடிவம் போல் காணப்படுகிறது. கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளில் கிடைக்கும் பொருட்கள் சமயம் சார்ந்த சமூகத்தைக் காட்டுகிறதா, மதச் சார்பற்ற சமூகத்தைக் காட்டுகிறதா என்ற விவாதம் நடந்து வருகிறது. கீழடி ஆய்வில் கிடைத்த மனித உருவத்திற்கும் வீரனார் சிலையின் தோற்றத்திற்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.

(இக்கட்டுரையின் ஆய்வாளர் கள ஆய்வு மேற்கொண்டபோது உடன் உதவிப்பேராசிரியர் முனைவர் க. இரவிச்சந்திரன் (தமிழ்த்துறை, ஆர்.கே.எஸ். கல்லூரி, கள்ளக்குறிச்சி), பௌத்தக் கள ஆய்வாளர் திரு. அருள் முத்துக்குமரன் ஆகியோர்களும் என்னுடன் கள ஆய்வுக்கு வந்தனர். இக்கள ஆய்வின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது இந்த கட்டுரை)

துணைநூல் பட்டியல்:
1. கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம், தொல்லியல் துறை தமிழ்நாடு அரசு, சென்னை, 2019.
2. பாலகிருஷ்ணன் ஆர்., சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், பாரதி புத்தகாலயம், சென்னை, 2018.
3. ஸ்ரீ குருநாதர் (சாஸ்தா-அய்யனார்-நாதர்) அஷ்டோத்தர சத – நாம ஸ்தோத்ரம் – நாமாவளி, ஆத்மாநந்த நிலயம், தஞ்சை, 1953.
4. Alexander P.C., Buddhism in Kerala, Annamalai University, Annamalainagar, 1949.
5. Dayalan D., Buddhist remains of South India, Sterling Publishers (p) Ltd., New Delhi,
(இடது - கீழடி மனித உருவ சிலை வலது - சாத்துக்கூடல் வீரனார்)

1 comment: