வள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூலில் கடவுள் என்ற சொல் அதிகார தலைப்பில் மட்டுமே ஒரே ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது. வேறு அதிகார தலைப்புகளிலோ திருக்குறல்களிலோ கடவுள் என்ற சொல் இடம்பெறவில்லை. இத்தகைய சூழலில் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்து வந்த கடவுள் மறுப்புக் கொள்கையின் ஊடாக திருக்குறள் ஒரு புதிய வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டது. இந்நூல் தமிழர்களின் அடையாளமாக போற்றப்பட்டு வளர்ச்சி அடைந்து வந்த கடவுள் மறுப்பு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கடவுள் வாழ்த்து என்ற சொல் திருக்குறள் நூலில் இடைச்செருகலாக இடம்பெற்றுள்ளது என்று வாசிக்கும் அளவிற்கு கடவுள் மறுப்பு கோட்பாட்டாளர்கள் அதிதீவிர எதிர்முனைக்கே சென்றனர். இக்கருத்தை நிரூபணம் செய்யும் வகையில் இக்கருத்தை மேற்கொண்டவர்கள் அறிவியல் முறை சார்ந்த ஆய்வில் ஈடுபட்டு ஓலைச்சுவடி துணைகொண்டு எவ்வகையான ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இங்கு நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது கடவுள் என்ற சொல் திருக்குறளில் இடைச்செருகலாக அமையவில்லை என்பதுதான். இந்து மதத்தில் இருந்து கடவுள் மறுப்பு பேசியவர்கள் திருக்குறளில் இடம்பெற்ற கடவுள் என்ற சொல் அவர்களுடைய சிந்தனைக்கு எதிரானது என்று கருதினார்கள். எனவே போகிற போக்கில் கடவுள் என்ற சொல் திருக்குறளின் அதிகார தலைப்பில் இடைச்செருகலாக இடம்பெற்றுவிட்டது என்று கூறினார்கள்.
உண்மையில் திருக்குறளில் இடம்பெற்றுள்ள கடவுள் என்ற சொல் இடைச்செருகல் இல்லை. ஒரு சொல் சூழலியல் சார்ந்து பொருள் மாறுபாடு அடைகிறது. கடவுள் என்ற சொல் இந்து மதத்தில் ஒரு பொருளையும் பௌத்த மதத்தில் ஒரு பொருளையும் அந்தந்த மாதத்திற்கு ஏற்ப பொருள் தந்து அமைகிறது. இந்த வேறுபாட்டை உணராமல் கடவுள் என்ற சொல் திருக்குறளில் இடைச்செருகலாக இடம்பெற்றுள்ளது என்று கூறுவது உண்மைக்கு முரணானதாகும் கடவுள் என்ற சொல் பவுத்தத்தில் புத்தர் என்ற சொல்லுக்கு மாற்றான சொல்லாகும். கடவுள் என்ற சொல் இந்து மதத்தில் உலகத்தை படைத்தார் போன்ற அறிவியலுக்கு மாற்றான கருத்தை விளக்கும் சொல்லாடலாக உள்ளபோது அது பௌத்தத்தில் இந்துமதத்திற்கு நேர் எதிரான பொருளை கொண்டுள்ளது. கடவுள் என்ற சொல்லுக்கு பவுத்தத்தில் உலகத்தை படைத்தார் என்ற கருத்தாக்கத்தில் அமையவில்லை போதிசத்துவர், புத்தர் என்கிற நிலைகளைக் குறிக்க பௌத்தத்தில் சொற்கள் இருப்பதைப்போல கடவுள் என்ற சொல்லும் புத்த நிலையை குறிப்பதற்கு இணையான ஒரு சொல்லாடல் ஆகும். ஒரு சொல் சூழலியல் சார்ந்து பொருண்மைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். கடவுள் என்ற சொல்லுக்கு இந்து மத சூழலில் வேறு பொருளாகவும் பௌத்தமத சூழலில் வேறு பொருளாகவும் அமைந்துள்ளது எனவே கடவுள் என்ற சொல் திருக்குறளில் பௌத்தமத சூழலில் அமைந்துள்ளது. இதனால் திருக்குறளில் இடம்பெற்றுள்ள கடவுள் என்ற சொல் இருபதாம் நூற்றாண்டில் கடவுள் மறுப்பு கோட்பாட்டாளர்கள் எண்ணியதை போல இடைச்செருகல் இல்லை கடவுள் என்கிற சொல் பௌத்தத்தில் புத்தரைக் குறிக்கிறது.
திருக்குறள் நூலை வெறும் தமிழர்களின் அடையாள நூலாக அணுகியதன் விளைவாக கடவுள் என்ற சொல் இடைச்செருகல் என்று எண்ணக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்நூலை தமிழ் அடையாளத்தோடு சேர்த்து பிரதானமாக பௌத்த அடையாளத்தோடு அணுகியிருந்தால் இச்சொல் இடைச்செருகல் இல்லை என்பதை உணர்ந்திருக்கலாம்.
No comments:
Post a Comment