Tuesday, March 31, 2020

திருச்சிராப்பள்ளி பெயர்கூறும் பௌத்த வரலாாறு!





ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்டுள்ள திருச்சிராப்பள்ளி என்னும் பெயருக்கே பல்வேறு சமயங்கள் சார்ந்தும் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. பௌத்தம், சமணம், இந்து மதம் சார்ந்து திருச்சிராப்பள்ளிக்கு அளிக்கப்படும் பெயர் விளக்கத்தை இங்கு ஆராய்ந்துப் பார்க்கலாம். மேலும் இம்மொழிக்கான புதிய விளக்கத்தையும் இக்கட்டுரையில் காணலாம்.


திருச்சிராப்பள்ளியின் பெயர் காரணத்தை விளக்குவதற்கு இப்பெயருக்கு வழங்கப்படும் திருச்னோபோளி, திரிஷிராபுரம், திருச்சிராப்பள்ளி ஆகிய பெயர்களுக்கு விளக்கம் காண வேண்டிய தேவை உள்ளது. திருச்சிராப்பள்ளி என்னும் ஊர்ப்பெயரை திருச்சி என்று சுருக்கி அழைப்பதற்கு வசதியாக இருந்தாலும் இச்சுருக்கம் மாபெரும் வரலாற்றை மறைத்து விடும் அபாயம் உள்ளது என்பதையும் இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் இந்தியாவில் திருச்சிராப்பள்ளி என்பதை திருச்னோபோளி என்று மாற்றி உச்சரித்து இருக்கவேண்டும். இவ்வடிவத்தை பிரிட்டிஷ் இந்தியாவில் வழங்கப்பட்ட ஆவணங்களில் மட்டும் நாம் காண்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு மாவட்டமாக இருந்த திருச்சிராப்பள்ளி திருச்னோபோளி என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு உதாரணத்திற்காக மட்டும் 1907 ஆம் ஆண்டு ஹெமிங்லே F.R அவர்களால் வெளியிடப்பட்ட மெட்ராஸ் மாவட்ட அரசாவணத்தில் திருச்னோபோளி என்று குறிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வடிவம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஏற்பட்ட மாற்றம் எனலாம்.

எஞ்சியுள்ள திரிஷிராபுரம், திருச்சிராப்பள்ளி ஆகிய இரண்டு வடிவங்களில் திருச்சிராப்பள்ளி என்பது பழமையான வடிவமாகவும் திரிஷிராபுரம் என்பது புராணக்கதை சார்ந்த புதுமையான வடிவமாகவும் தோன்றுகிறது.

பக்தி இலக்கியங்களில் இவ்வூர் பெயர் சிராப்பள்ளி என்றும் திரிச்சிராப்பள்ளி என்றும் இடம்பெற்றுள்ளது. எனவே பக்தி இலக்கிய காலகட்டத்திற்கு முன்பிருந்தே சிராப்பள்ளி, திரிச்சிராப்பள்ளி ஆகியன வழக்கிலிருந்த மொழியாகும். பக்தி இலக்கியமே திரிச்சிராப்பள்ளி என்று இருந்தது திருச்சிராப்பள்ளி என்று மாறியதற்கான சான்றாதாரமாக உள்ளது.

மேலும் திரிஷிராபுரம் என்று இந்து புராணக் கதையில் இடம்பெறுவது மற்றொரு வரலாற்றை உருவாக்குவதன் பின்னணியில் தோன்றியது எனலாம்.

திரிஷிராபுரம் என்பதை திரி+சிரம்+புரம் என்று பிரித்து திரி - மூன்று, சிரம் - தலை, புரம் - ஊர் என்று விளக்கி இதற்கு 'மூன்று தலையூர்' எனப் பொருளாகும் என்று விளக்கம் கூறுகின்றனர். இவ்விளக்கம் புராணக் கதையை பின்னணியாகக் கொண்டு உள்ளது. அப்புராணக்கதை பின்வருமாறு அமைந்துள்ளது:

"இந்து சமயப் புராணங்களில் 'திரிசரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் (மூன்று தலைகள்) கொண்ட அரக்கன், இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்கு அந்த அரக்கனின் பெயராலே திரிசிரன் பள்ளி என்பதை தழுவி திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவியுள்ளதால், இவ்வூருக்கு திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்தாககவும் கூறப்படுகிறது" (விக்கிப்பீடியா).

இக்கதைக்கும் இவ்வூர்ப்பெயர் விளக்கத்திற்கும் போடப்பட்ட முணுச்சி போலித்தனமானது என்றாலும் இப்பெயர் விளக்கம் குறித்து இங்கு நாம் ஆராயலாம்.

திரி என்று தொடங்கும் பௌத்த ஊர்ப்பெயர்களை அல்லது பௌத்த ஊர்ப் பெயர்களை மாற்றியமைக்க திரி என்பதை திரு என்று மாற்றி பௌத்தத்தின் வரலாற்றை மறைக்கும் போக்கு வரலாற்றின் காலக் கட்டத்தில் இருந்ததை நாம் அறிகிறோம். இங்கு பண்டிதர் அயோத்திதாசர் திருக்குறளை திரிக்குறள் என்று கூறுவதை நினைவில் கொண்டால் திரி என்பது திரு என்று மாற்றப்பட்டிருப்பதை அறியலாம். பண்டிதரின் இக்கருத்து சிலருக்குக் கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவரின் கருத்து மறுக்க முடியாத உண்மை என்பதை பல சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. பக்தி இலக்கியமும், இந்துப் புராணக்கதைகளும் திருச்சிராப்பள்ளியில் உள்ள திரு என்பது திரி என்று இருந்ததை காட்டுகிறது. இந்துபுராணக்கதை சிரா என்பதற்குத் தலை என்று பொருள் தந்துவிட்டு பள்ளி என்பதைப் புரம் என்று மாற்றிவிட்டது. ஏனென்றால் பள்ளி என்பது நேரடியாக பௌத்தப் பள்ளியைக் குறிக்கும் சொல்லாடலாகும். இந்துக்கதையாடலுக்கு ஏற்றவாறு திரிஷிராபுரம் என்று கூறியவர்கள் அக்கதைக்கு ஏற்ப திரிஷிராப்பள்ளி என்று கூறமுடியாது என்பதை உணர்ந்திருந்தார்கள். பள்ளி பௌத்தத்தின் அடையாளமாக விளங்குவதால் திரிஷிராப்பள்ளி என்று பயன்படுத்தினால் அதன் பெயரிலேயே பௌத்தத்தின் வரலாறு வெளிப்படும் என்பதை இந்துக்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே பக்தி இலக்கியத்திலேயே திரிச்சிராப்பள்ளி என்று இடம்பெற்றிருந்த போதிலும் திரிஷிராபுரம் என்ற மற்றொரு பெயரை உருவாக்கினர் போலும். திரிச்சிராப்பள்ளி என்பதை திருச்னோபோளி என்று உச்சரித்தது ஆங்கிலேயர்களின் வாய்கோளாறு என்றால் திரிஷிராபுரம் என்று மாற்றி உச்சரிக்க வைத்தது இந்துக்களின் பிறவிக்கோளாறாகும். எதிர்வரும் காலங்களில் புதிய புதிய ஊர்கள் தோன்றினாலும் அப்பெயர்களுக்கு இந்துமதம் சார்ந்த புராணக்கதைகள் தயார்நிலையில் இருக்கும். எனவே இந்தியாவில் வழங்கும் ஊர்ப்பெயர்களில் 'புரம்' என்றிருந்தால் அவை பள்ளி என்று இருந்து புரம் என்று மாற்றப்பட்டிருக்கலாம் என்று வலுவாக சந்தேகிக்கலாம். உதாரணத்திற்கு திருவனந்தபுரம் என்பது திரிவனந்தப்பள்ளி என்று இருந்திருக்கலாம் என்று அனுமானிப்பதைப் போல. இதை காஞ்சீவரம் என்னும் பழைய வடிவம் காஞ்சிபுரம் என்று மாற்றப்பட்டதை நினைவில் கொண்டு அணுக வேண்டும்.

திருச்சிராப்பள்ளி என்பதை திரு+சிராய்+பள்ளி என்று பிரிக்கின்றனர். சிராய் என்றால் பாறை என்று பொர்ய்ள்கொண்டு பாறைப்பள்ளி என்று விளக்குகின்றனர். 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திரு-சிலா-பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி என்று வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இவை சிராய், சிலா என்பதற்குப் பாறை என்ற பொருளே அமைந்துள்ளது.

இவ்வூருக்கு சமண சமயம் சார்ந்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இங்கு சிரா என்னும் சமணத்துறவி ஒருவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. எனவே சிராப்பள்ளி என்றால் "சிரா பள்ளிகொண்ட இடம் (உறைவிடம்)" என்று கூறுகின்றனர்.

உபேந்திர சிங் அவர்கள் தன்னுடைய A history of ancient and early medival india from the stone age to the 12th centuary என்ற புத்தகத்தில் மத்திய இந்தியாவில் சிரா பஹாரி என்ற இடத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஜைனத்தடயம் கிடைத்துள்ளது என்கிறார். சிரா பஹாரி என்ற இவ்விடத்தினைக் குறிக்க சிரா என்ற சொல்லும் இங்கு இடம்பெற்றுள்ளதை நாம் அறிகிறோம். இவ்விடம் இப்பொழுது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு சிரா என்று வருவதினால் சிரா என்ற சமணத்துறவி வாழ்ந்தார் என்ற பொருளிலோ அல்லது அவரின் நினைவாகவோ வைக்கப்பட்டதாக இல்லை எனலாம். சிரா என்ற பெயரில் திருச்சிராப்பள்ளியில் சமணத்துறவி வாழவில்லை என்று மறுப்பதற்கும் இல்லை. சிரா என்ற சொல் பொதுவாக இந்திய ஊர்ப்பெயர்களில் காணப்படும் சொல்லாக இருப்பதை அறிகிறோம். தெலுங்கான மாநிலத்தில் சிரணப்பள்ளி என்ற ஊரும் உண்டு. எனவே சிரா என்பது அவைதீக மரபில் பெரும் சொல்லாடலாக இருப்பதை உணரலாம்.
திருச்சிராப்பள்ளி என்ற ஊர்ப்பெயருக்கு 

இந்து, சமணம் ஆகிய மதங்களைச் சார்ந்த விளங்களைக் கண்டுள்ளோம். இனி பௌத்தம் சார்ந்த விளக்கங்களைக் காணலாம்.

காஞ்சிபுரத்தின் பழைய பெயர்களுள் ஒன்று காஞ்சீவரம் ஆகும். சீவரம் என்றால் பௌத்தத் துறவிகளின் சீவராடை. இச்சீவராடை உள்ளாடை, மேலாடை, வெளியாடை என மூன்று சீவரங்களைக் (திரிசீவரம்) கொண்டுள்ளது. திரிசீவரம் என்பது பௌத்தத் துறவிகளின் ஆடையைக் குறிக்கிறது. திரிசீவரம் என்பதே திருச்சி என்று மாறியிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

திருச்சிராப்பள்ளி என்பதை திரு+சின்ன+பள்ளி என்றும் பிரிக்கின்றனர். தெலுங்கு அறிஞர் சி.பி. பிரவுன் என்பவர் இவ்வாறே பிரிக்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு சிரா என்பதற்குச் சிறார் என்று பொருள்கொண்டால் சிராப்பள்ளி என்பதை சிறார்ப்பள்ளி என்று பொருள்கொள்ளலாம். பௌத்தப் பள்ளி மரபில் சிறார்களுக்கு என்று தனிப்பள்ளியும் பெரியோர்களுக்கு என்று தனிப்பள்ளியும் இருந்தன. காஞ்சிபுரத்தில் சிறார்களுக்கும் பெரியோர்களுக்கும் பயிற்சியளிக்க தனித்தனிப் பள்ளிகள் இருந்தன. சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட பள்ளி 'பிள்ளையார் பாளியம்' என்றும் பெரியோர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட இடம் 'பாளிமேடு' என்றும் அழைக்கப்பட்டன. இவ்விடங்கள் இன்றைக்கும் காஞ்சிபுரத்தில் உள்ளன. எனவே சிராப்பள்ளி என்றால் சிறார்ப்பள்ளி என்றும் பொருள்கொள்ளலாம். மேலும் திரிச்சிராப்பள்ளி என்பதை திரிசரணத்தைப் போதிக்கும் சிறார்ப்பள்ளி என்றும் திரிபிடகத்தைப் போதிக்கும் சிறார்ப்பள்ளி என்றும் பொருள்கொள்ளலாம்.

சிரா (சிரம்) என்பதற்குத் தலை என்று பொருள் கொண்டு அணுகினால் திரிச்சிராப்பள்ளி என்பதற்குத் திரிசரணத்தை அல்லது திரிபிடகத்தைப் போதிக்கும் தலைமைப் பள்ளி என்று பொருள்கொள்ளலாம். சிரா என்பதற்கு மூளை என்ற பொருளும் உண்டு. மூளை அறிவோடு தொடர்புடைய உறுப்பு ஆதலால், இதனை அடிப்படையாகக் கொண்டு திரிசரண அறிவுப்பள்ளி என்றும் திரிபிடக அறிவுப்பள்ளி என்றும் பொருள்கொள்ளலாம். 

திருச்சிராப்பள்ளி என்பதற்கு இந்து மதம் சார்ந்து விளக்கம் அளிக்கப்பட்டாலும் இது வெறும் புராணக்கதை சார்ந்து மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட விளக்கமாகும். மேலும் இவ்விளக்கம் திருச்சிராப்பள்ளி என்பதன் பூர்வீக அடையாளத்தோடு தொடர்பற்றதாகும். சமண, பௌத்தம் சார்ந்த அளிக்கப்படும் விளக்கம் தொடர்புடையவையாகும். மேலும் பௌத்தம் சார்ந்த விளங்கிக்கொள்வது திருச்சிராப்பள்ளி என்பதன் மூல வடிவத்தோடு பொருந்துகிறது. எனவே திருச்சிராப்பள்ளி பண்டைய பௌத்த இடமாக இருந்து வந்துள்ளதை நாம் அறிகிறோம். திருச்சி என்று கூறினாலும் அது தனக்குள் திருச்சிராப்பள்ளி அல்லது திரிச்சிராப்பள்ளி என்கிற முழு வடிவத்தையே கொண்டிருக்கிறது என்பதையும் அதற்குப் பின்னால் பௌத்த வரலாறு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

Sunday, March 29, 2020

"தமிழ் நூல்களில் பௌத்தம்" - நூல் விமர்சனம்!





1928 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் நாள் தென்னிந்திய பௌத்த சங்கத்தின் சார்பாக சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தென்னிந்திய பௌத்த மகாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமைப் பொறுப்பை அறிஞர் லட்சுமி நரசு வகித்தார். இம்மாநாட்டில் "தமிழ் நூல்களில் பௌத்தம்" என்ற உரையை திரு.வி. கலியாண சுந்தர முதலியார் நிகழ்த்தினார். இவ்வுரையை 1929 ஆம் ஆண்டு ஒரு சிறு நூலாக அச்சிட்டு வெளியிட்டார். இவ்வுரை நூலாக்கம் பெற்றபோது பெரிய மாற்றம் இல்லாமல்
 சிறிய மாற்றத்துடன்  அச்சாக்கப்பட்டது என்று திரு.வி.க கூறுகிறார். இந்நூலைப் பற்றிய விமர்சனமே இக்கட்டுரையாகும்.

இவ்வுரை பௌத்த அறிஞர்கள் கூடிய அரங்கில் பௌத்த பேரறிஞராக விளங்கிய லட்சுமி நரசு அவர்களின் தலைமையில் வாசிக்கப்பட்டது என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். சைவப் பற்றாளரான திரு.வி.கவுக்கு ஏற்பட்டிருந்த நீண்டகால நோயை தீர்த்தவர் பண்டிதர் அயோத்திதாசர் என்பது பற்றி திரு.வி.க அவர்களே எழுதியுள்ளார். பண்டிதர் பரிநிர்வாணம் அடைந்து 13 ஆண்டுகள் கழித்து தென்னிந்திய பௌத்த சங்கத்தில் திரு.வி.க உரையாற்றினார். இம்மாநாட்டில் தலைமை வகித்த லட்சுமி நரசு அவர்கள் கூட்டம் ஒன்றில்  பேசியபோது சைவப்பற்று கொண்டு களைத்தவர் திரு.வி.க என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சைவ நிலைப்பாட்டை எடுத்துவந்த போதிலும் தென்னிந்திய பௌத்த சங்கம் அவருக்கு உரையாற்ற அழைப்பு விடுத்ததிலிருந்து தென்னிந்திய பௌத்த சங்கம் மாற்றுக்கருத்துக்கு இடம் வழங்கியதை அறியலாம்.

"தமிழ் நூல்களில் பௌத்தம்" என்ற தலைப்பில் தீவிர சைவப்பற்றாளர் நிகழ்த்திய உரை என்பதற்கு இவ்வுரை உதாரணமாக விளங்குகிறது எனலாம். மேலும் சிறு நூலாக இருப்பினும் விவாதிப்பதற்கு இந்நூல் சில தகவல்களை கொண்டுள்ளது எனலாம்.
இந்நூலில் திரு.வி.க "தமிழ்ப் பௌத்தம்" என்ற சொல்லாடலை பயன்படுத்தியுள்ளார். இது பண்டிதர் அயோத்திதாசர் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகும்.

திரு.வி.க இந்நூலை 1. தொல்காப்பியம் 2. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு 3. ஐம்பெரும் காப்பியம் 4. திருமுறைகள் 5. கம்பராமாயணம் 6. புராணங்கள் 7. பிற்பட்ட நூல்கள் எனப் பகுத்துக் கொண்டு அவற்றில் இடம்பெறும் பௌத்தம் பற்றி ஆராய்கிறார்.

தொல்காப்பியம்:
தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறும் திரு.வி.க்ச் இந்நூல் புத்தர் பிறப்பதற்கு முன்பே தோன்றியது என்கிறார். இதன் மூலம் தொல்காப்பியத்தில் புத்தர் போதித்த கருத்துக்கள் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். புத்தரின் பிறப்புக்குப் பிறகு தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்பது என்னுடைய கருத்து.

மேலும் தொல்காப்பிய நூல் எழுதப்பட்ட காலத்தில் பௌத்தம் வழங்கவில்லை என்று அவர் எண்ணுவதால் தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய சமயத்தை ஆராய முற்படுகிறார். இதனால் அவர் தொல்காப்பியத்தில் இடம்பெறும் சேய், மால், வேந்து, வண்ணம் போன்ற சொற்களுக்கு இயற்கை சார்ந்து விளக்கமளித்து அச்சமயம் இயற்கை சமயம் (இயற்கை அழகு) என்ற கருத்தை முன்வைக்கிறார். இக்கடவுள்களோடு பழந்தமிழ் மக்களின் கடவுள்களுள் ஒன்றாக அவர் கந்தழி என்பதை அடையாளப்படுத்துகிறார். இவற்றை அவர் புத்தர் பிறப்பதற்கு முன்பாக தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய சமயமென்று முன்வைக்கிறார்.

அவர் சுட்டிக்காட்டிய கடவுளின் பெயர்களில் ஒன்றான கந்தழி என்பது பௌத்த மரபை சார்ந்ததாக இருக்கவேண்டும். மணிமேகலைக் காப்பியத்தில் கந்திற்பாவை தெய்வம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. இத்தெய்வம் கந்திற்பாவை அல்லது கந்து தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. எனவே கந்து என்ற பௌத்த தெய்வத்தையே தொல்காப்பியம் கந்தழி என்று குறிப்பிடுகிறது எனலாம்.

அவதம்சக சூத்ரா என்னும் பௌத்த நூலில் கந்தவ்யூகம் என்ற ஒரு அதிகாரம் அல்லது பிரிவு உள்ளது. இப்பெயர் கந்தழி, கந்து ஆகியவற்றோடு சொல் வடிவில் ஒத்துப்போகிறது. கந்தழி என்பது கட்டற்ற ஒன்று. அழுக்காறு (பொறாமை), அவா, வெகுளி (கோபம்), பகைமை முதலிய கட்டுக்களை கடந்த நிலை கந்தழி எனப்படும். கந்தவ்யூகத்தின் தலைவர் சுதன குமாரர் கட்டற்றவராகவும் அழுக்காறு, ஆசை, கோபம், பகைமை போன்ற உணர்வுகள் அற்றவராக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எனவே தொல்காப்பியத்தில் இடம்பெறும் கந்தழி பௌத்த தெய்வம் எனலாம்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
இக்காலத்தில் பௌத்தம் தமிழ்நாட்டில் பரவியது என்கிறார் திரு.வி.க. பௌத்த கருத்துக்களும் இக்கால இலக்கியங்களில் இடம் பெற்றன என்கிறார். நாலடியாரும் திருக்குறளும் பௌத்த நூல்களா என்று பலரும் கேள்வி எழுப்புவததை முன்னிறுத்தி இக்கேள்விக்குத் திரு.வி.க கூறும் பதில் மிகவும் கவனிக்கத்தக்கதாகும் நாலடியாரும் திருக்குறளும் சமண நூல் என்று அவர் கூறினாலும் திருக்குறளில் பௌத்த சமயக் கருத்துக்கள் இருப்பதை அவர் மறுக்கவில்லை. இந்நூலில் பௌத்த சமயக் கருத்துக்கள் மணம் கமழ்ந்து வீசுகிறது என்கிறார். இந்நூல்களைப் பற்றி பேசுகிறபோது அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறும் கருத்து இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

"சமணமும் பௌத்தமும் அறத்தில் பெரிதும் வேறுபட்டது அல்ல, மிகச் சிறு வேறுபாடுகள் உண்டு. அவ்வேற்றுமைகளை ஈண்டுக் கருதுதல் அனாவசியம்" (பக்கம் 12).

"அறத்தில் சமண பௌத்த சமயங்களில் எவ்வித மயக்கமும் எவரும் கொள்ள வேண்டுவதில்லை"  (பக்கம் 12).

"சமண அறங்களில் பௌத்த சமயங்களும் ஒன்றிவிடும்"  (பக்கம் 13).

இவ்வாறு திரு.வி.க சமண பௌத்த சமயங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை வலியுறுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அவர் அறத்தின் அடிப்படையில் சமணத்தையும் பௌத்தத்தையும் தனித்தனியாக காண விரும்பவில்லை என்பதையே அவருடைய கருத்துக்கள் காட்டுகின்றன.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள் எழுந்த காலகட்டத்தில் வழங்கிய பௌத்தத்தைத் திரு.வி.க "பழம் பௌத்தம்" என்ற  சொல்லாடலால் குறிக்கிறார். இக்கால கட்டத்திற்குப் பின்பு உருவாகிய பக்தி இலக்கிய காலகட்டத்தில் வழங்கிய பௌத்தத்தைப் புதிய பௌத்தம் என்றே கூற முயல்கிறார். திரு.வி.க உருவாக்கும் பழைய பௌத்தம், புதிய பௌத்தம் என்ற சொல்லாடல்களை வெவ்வேறு காலகட்டத்தில் வழங்கிய பௌத்தத்தைக் கூறுவதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை. பழம் பௌத்தம், புதிய பௌத்தம் என்று குறிப்பிடுவதன் பின்னணியில் திரு.வி.கவின் சைவத்திமிருக்கு இடமிருப்பதை அறியலாம்.

ஐம்பெரும் காப்பியங்கள்:
ஐம்பெரும் காப்பியங்களில் சீவக சிந்தாமணியும் வளையாபதியும் சமணக் காப்பியம் என்று குறிப்பிடும் திரு.வி.க இந்நூல்களில் பௌத்த அறங்கள் இடம் பெற்றுள்ளன என்று கூறுகிறார். மணிமேகலைக் காப்பியத்தைப் பௌத்த நூல் என்று ஏற்றுக்கொள்ளும் அவர் இந்நூலை அற நிலையம் என்று அழைக்கிறார். சிலப்பதிகாரம் சமணமாக இருந்தாலும் பௌத்தமாக இருந்தாலும் இந்நூலில் பௌத்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்கிறார். இவர்

"புத்தர் பெருமான் உலகிற்கு அறிவுறுத்திய அறம் சிலப்பதிகாரத்தில் எவ்விடத்தில் பொலியாமல் இல்லை? கண்ணகியும் கோவலனும் சோழநாடு விடுத்துப் பாண்டிய நாடு நோக்கி நடந்த வழிகளையும் சோலைகளையும் காடுகளையும் வருணிக்கப் புகுந்த இளங்கோ அடிகள், அவைகள் எல்லாவற்றையும் புத்தர் பெருமான் தர்ம மயமாக்கிவிட்டனர். வழிநடை வருணனையிலும் சிலப்பதிகாரத்தில் பௌத்த அறங்கள் ஒழுகி வழிகின்றனவெனில், மற்றப் பகுதிகளின் அறநிலைகளை அடுக்கி அடுக்கிக் கூறவும் வேண்டுமா" (பக்கம் 14) என்று கூறுகிறார். திரு.வி.கவின் இக்கூற்றை எடுத்துக்கொண்டு சிலப்பதிகாரத்தைப் பௌத்தவியல் கண்ணோட்டத்தில் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

இந்நூலில் திரு.வி.க பௌத்தத்திற்கும் பூதவாதத்திற்கும் இடையே உள்ள உறவை விளக்க முற்படுகிறார். பௌத்தமும் பூதவாதமும் ஒன்று என்று சிலர் கருதுவதை இவர் ஏற்க மறுக்கிறார். பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்று அவர் முன்வைக்கும் கருத்துக்கு மணிமேகலைக் காப்பியத்தையே துணையாக கொள்கிறார்.

பூதவாதம் பௌத்தத்திலிருந்து வேறுபட்டது என்பதை விளக்க மணிமேகலையில் இடம்பெற்றுள்ள சமயக் கணக்கர் திறம் கேட்ட காதையை எடுத்துக்கொள்கிறார். தான் கருதியதை விளக்க நினைக்கும் திரு.வி
கவுக்கு இது அகச்சான்றாகும். இக்கதையில் மணிமேகலை ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த சமயக்கணக்கரை (சமய அறிஞர்) சந்தித்து அவரவர் சார்ந்திருக்கும் சமயத்தின் கருத்துக்களை உரைக்குமாறு கேட்கிறாள். அப்பொழுது பூதவாத சமயத்தைச் சார்ந்த அறிஞரின் கருத்தையும் மணிமேகலை கேட்கிறாள். இவர் கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறாள். பௌத்த சமயத்தை சேர்ந்த மணிமேகலை பூதவாதியின் கருத்தைக் கேட்டு ஏற்க மறுத்ததினால் பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்ற முடிவுக்கு வருகிறார். திரு.வி.கவின் இக்கருத்தை நாம் மீண்டும் மறுபரிசீலனை செய்யலாம்.

மணிமேகலைக்கு பூதவாதி உரைத்தது:-
• இம்மை இல்லை
• மறுமை இல்லை
• மறுபிறப்பு இல்லை
• கர்மம் இல்லை (கர்மா இல்லை)

மணிமேகலைக் காப்பியக் கதை முழுவதும் மறுபிறப்பை உயிர்நாடியாக கொண்டு நகர்கிறது. இக்காப்பியத்தின் பல்வேறு கதாபாத்திரங்களின் பழம் பிறப்பு பற்றி கூறப்படுகிறது. இது மறுபிறப்பைப் பற்றியதாகும். காப்பியத் தலைவியான மணிமேகலைப் பாத்திரம் கூட தன் முந்தைய பிறப்பையும் (இலக்குமி) அடுத்தடுத்த பிறப்பையும் (இறுதி பிறப்பு புத்தர்) அறிந்தவராக இருப்பதால் பூதவாதியின் கருத்துக்களை மணிமேகலை ஏற்க மறுக்கிறாள். எனவேதான் திரு.வி.க பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது. மணிமேகலைக் கதாபாத்திரத்தைப் பௌத்தத்தின் பிரதிநிதியாக பொத்தாம் பொதுவாக பார்க்காமல், இவ்விடத்தில் மணிமேகலையை மகாயான பௌத்தத்தின் பிரதிநிதியாக பார்க்கவேண்டும். மகாயானப் பௌத்தத்தில் இம்மை, மறுமை, மறு பிறப்பு, கர்மா ஆகிய ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பூதவாதம் என்பது பௌத்தத்தின் மற்றொரு பிரிவாகும். இக்கோட்பாடு ஈனயானப் பௌத்தத்தைச் சார்ந்துள்ளது. மணிமேகலைக் காப்பியம் பல்வேறுவகையான பௌத்த சமயக் கருத்துக்கள் நிறைந்த மாலை போல் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈனயானப் பௌத்தத்தில் இம்மை, மறுமை, மறுபிறப்பு, கர்மா ஆகியவற்றுக்கு இடமில்லை. எனவே பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்று கூறுவதற்குப் பதிலாக மணிமேகலைப் பாத்திரம் பௌத்தத்தின் ஒரு பிரிவைச் சார்ந்துள்ளதைப் போல பூதவாதம் பௌத்தத்தின் மற்றொரு பிரிவாகும். எனவே பௌத்தமும் பூதவாதமும் வேறு வேறல்ல என்பதை உணரலாம்.

மேலும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பூதம் பொய் கூறுதலுக்கு எதிரான பௌத்தத் தெய்வமாக விளங்குவதை அறியலாம்.
சிலப்பதிகார காப்பியத்தில் இடம்பெறும் கதை ஒன்று இதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இளைஞன் ஒருவன் பத்தினிப் பெண் ஒருவளைப் பற்றி தவறாக அப்பெண்ணின் கணவனிடம் கூறுகிறான். இதை அறிந்த பூதம் அவ்விளஞனைக் கொல்லுவதற்குப் பிடித்துக்கொள்கிறது. இதை அறிந்த அவ்விளைஞனின் தாய் அப்பூதத்திடம் வந்து தன் மகனை விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள். தன்னுயிரை எடுத்துக்கொண்டு தன் மகனின் உயிரை விட்டுவிடும்படி அத்தாய் கெஞ்சியபொழுதும், கெட்டவனின் ஒருவனின் உயிருக்குப் பதிலீடாக நல்லவரின் உயிரை எடுப்பது முறையல்ல என்று அப்பூதம் அத்தாய்க்கு மறுப்பு கூறுகிறது. அவ்விளஞனைக் கொல்லுகிறது. இந்த பௌத்தக் கதை பொய்கூறாமையை வலியுறுத்துகிறது.

மேலும், தமிழகத்தில் பூதமங்கலம் என்ற பெயரில் பௌத்த ஊர் இருந்ததை நாம் அறியலாம். இவ்வூரைப் பற்றி மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் "பூதமங்கலம் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று. இவ்வூரில் பிண்டிதாசர் என்றும் வேணுதாசர் என்றும் பெயருள்ள ஒருவரால் அமைக்கப்பட்ட பௌத்தப்பள்ளி ஒன்று இருந்தது என்றும், அப்பள்ளியில் சில காலம் தங்கியிருந்தபோது ஆசாரியர் புத்ததத்த தேரர் 'வினிய வினிச்சயம்' என்னும் பாளிமொழி நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது" என்று கூறுகிறார். எனவே பூதவாதம் எனது பௌத்தத்திலிருந்து வேறானதல்ல, பௌத்தத்தின் ஒரு பிரிவேயாகும். இந்த வேற்பாட்டை திரு.வி.க உணராததால் பௌத்தம் வேறு பூதவாதம் வேறு என்று அழுத்தமாக கூறினார் போலும். சாதியவாத சமூகத்தில் பௌத்தம் சார்ந்த சொல்லாடல்கள் இழிவுச்சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். உண்மையை வலியுறுத்துவதற்குப்  பூததெய்வம் குறியீடாகவும் பௌத்த ஊர்ப்பெயராகவும் விளங்கும் பூதம் என்னும் சொல் இன்றைக்கு எதிர்மறை சொல்லாடலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குண்டாக இருப்பவரைப் பூதம் என்றும் விளங்காத வீட்டைப் பூதம்காத்த வீடு என்றும் இழிவான சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருவதிலிருந்து பூதம் என்னும் சொல் பௌத்த மரபைச் சார்ந்தது என்பதை உணரலாம். பூதவாதம் என்னும் உலோகாயதவாதத்தை இந்துமதக் கொள்கைகள் மறுக்கின்றன என்பதிலிருந்து பூதவாதம் இந்து மதத்திற்கு எதிராக விளங்குகிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

திருமுறைகள், கம்பராமாயணம், புராணங்கள், பிற்பட்ட நூல்கள்:

பக்தி இயக்கத்தார்கள் சமண, பௌத்தத்தைத் தாக்கிய போதிலும் அவர்கள் சமண, பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர் என்றும் அவர்கள் தாக்கிய பௌத்தம் புதிய பௌத்தத்தைத்தான் என்றும் அவர்கள் பழம் பௌத்தத்தைத் தாக்கவில்லை என்றும் கூறுகிறார்.

திருஞானசம்பந்தர்
"இன்னவுரு இன்னநிறம்
            என்றறிவதே லரிது நீதிபலவும்
தன்னவுரு வாமென மிகுத்தவன்
            நீதியொடு தானமர்விடம்"

- என்று பாடியது பௌத்த தர்மத்தை அடிப்படையாக கொண்டது என்கிறார் திரு.வி.க

திருநாவுக்கரசர் பயன்படுத்திய 'தயாமூல தர்மன்' என்ற மொழி பௌத்தத் தர்மத்தையே முதலாவதாகக் கொண்டது என்கிறார். மேலும் இவரின்

"நீதியால் நினைசெய் நெஞ்சே"
"சீலமும் நோன்பு மாவார்"
"நீதியால் நின்னையல்லால்
             நினையுமா நினைவிலனே"

- ஆகிய வரிகளிலும் பௌத்தத்தின் தாக்கம் இடம்பெற்றுள்ளது என்கிறார்.

சுந்தரமூர்த்தி
"தழாதறஞ் செய்ம்மின்"
"சீலமே"
"பண்பே"
- என்று பாடுவதெல்லாம் பௌத்தத்தின் தாக்கம் என்கிறார். இதுபோல இன்னபிற பக்தி இலக்கியங்களிலும் பௌத்தத்தின் தாக்கம் உள்ளது என்கிறார்.

பக்தி இலக்கிய காலத்திற்கு முன்பாக வழங்கிய பழம் பௌத்தம் சிறப்பானது என்றும் பக்தி இலக்கிய காலத்தில் வழங்கிய புதிய பௌத்தம் சீர்கேட்டிற்கு உள்ளாகி வன்முறையோடு வளர்ந்ததால் திருஞானசம்பந்தர் புதிய பௌத்தத்தை சீர்படுத்தவே முயன்றார் என்று திரு.வி.க கூறுகிறார். அவர் பௌத்தத்தை அழிக்க முற்படவில்லை, அவ்வாறு அவர் அழித்து இருந்தால் அது புதிய பௌத்தமே என்று கூறும் திரு.வி.க பௌத்தத்தைப் பழம் பௌத்தம்,  புதிய பௌத்தம் என்று பிரித்ததன் பின்னணி விளங்கும். இதிலிருந்து திரு.வி.க சைவர்களின் கொடூர செயல்பாடுகளுக்கான நியாயம் கற்பிக்க முயலுகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

சமணர்களின் தலைகள் வெட்டப்பட்டதாக தவறாக பாடல் ஒன்று ஞான சூரியன் என்ற புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். இதைப் பற்றி சற்று விரிவாகப் பேசும் அவர் நூலாசிரியரின் பெயரைக் கூறவில்லை நூலின் பெயர் ஞானசூரியன் என்று கூறியுள்ளார்.
"அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தைசெய்யா அருகர் திறங்களைச்
சிந்தவாது செயத்திரு வுள்ளமே"

- என்ற பாடலில் 'திறங்கள்' என்பதற்குப் பதிலாக 'சிரங்கள்' என்று தவறாக அச்சிடப்பட்டதாகக் கூறுகிறார். இதை நூலாசிரியரிடமே கூறியதாகவும், தன் தவற்றை உணர்ந்த நூலாசிரியர் தன் நூலில் இடம்பெற்றுள்ள சிரங்கள் என்பதை திறங்கள் என்று மாற்ற வேண்டும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்தாராம் என்று திரு.வி.க கூறுகிறார்.

திறங்கள் என்று இருந்தால் சமணர்களின் வலிமையை (திறத்தை) வீழ்த்த  வேண்டும் என்று பொருளாகும். சிரங்கள் என்றிருந்தால் சமணர்களின் தலையை வெட்ட வேண்டும் என்று  பொருளாகும்.  ஞானசூரியனின் முதல் பதிப்பில் (1928 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது -  திரு.வி.க இவ்வாண்டு தனது உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது ) திரு.வி.க அம்மாற்றத்தைக் கண்டிருக்க வேண்டும். நான் கண்ட ஞானசூரியன் நான்காம் பதிப்பில் (1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது) திறங்கள் என்றே உள்ளது. எனவே திரு.வி.க கூறுகிறபடி நூலாசிரியர் அதை ஏற்றுக்கொண்டு மாற்றியுள்ளார் என்று அறியலாம். இருப்பினும் சைவ, வைணவர்கள் சமணர்களுக்குக் கொடூரமான தீங்கை இழைக்காதவர்கள் என்று கூறமுடியாது.

கம்பரின் ராமாயணத்தைப் பற்றி கூறுகையில் "கம்பர் சமண பௌத்த காவியங்களை நன்கு பயின்றிருந்தார் என்பதற்கு அவர் ராமாயணத்தில் பல சான்றுகளுண்டு" என்று கூறுகிறார். திரு.வி.க கம்பரின் ராமாயணத்தில் ராவணன் சீதையைக் கடத்திச் சென்ற முறை "தமிழ்ப் பௌத்த அறம்" என்று கூறுகிறார். இதை நாம் வால்மீகியின் ராமாயணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையை அவளின் தொடையில் தன் கரங்களை வைத்து தூக்கிச் சென்றார் என்றும் கம்பராமாயணத்தில் சீதையின் மீது தன் கரம் படாமல் தூக்கி சென்றார் என்றும் கூறப்படும் வித்தியாசங்களை உணர்ந்தால் திரு.வி.க மதிப்பிடும் "தமிழ்ப் பௌத்த அறம்" என்பதைப் புரிந்து கொள்ளலாம். கம்ப ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள இக்காட்சி தமிழ்ப் பண்பாடு என்று கூறி வரும் வேளையில் திரு.வி.க அதை  "தமிழ்ப் பௌத்த அறம்" என்று கூறுவது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும்.

வால்மீகி இராமாயணத்தில் ராமன், சீதை முதலானோர் புலால் உண்ணுவதும் கம்பராமாயணத்தில் இவர்கள் புலால் உண்ணுவதாக இடம்பெறவில்லை என்பதையும் ஒப்பிடும் திரு.வி.க   கம்பரின் இந்த விவரிப்பும் "தமிழ்ப் பௌத்த அறம்" என்று கூறுகிறார்.

ஆரியர்களின் புராணங்கள் கூட பௌத்த ஜாதகக் கதைகள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்து கொண்டு எழுதப்பட்டவை ஆகும் என்று கூறுகிறார். இப்புராணங்களில் உள்ள அறங்களுக்குப் பௌத்தமே மூலம் என்று இவர் கருதுகிறார். தாயுமான சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள் ஆகியோர்களின் பாடல்களிலும் பௌத்தத்தின் தாக்கம் உள்ளது என்கிறார். ராமலிங்க சுவாமிகள் இறைவனை "அருகர் புத்தர் ஆதி என்பேன்" என்று உரைத்ததை எடுத்துக்காட்டி அவரின் பாடலில் பௌத்தத்தின் தாக்கம் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறார்.

இவ்வாறு  தமிழில் பௌத்த இலக்கியத்தின் வரலாற்றை விவரிக்கும் திரு.வி.க பௌத்தத்தின் பண்பாட்டு வரலாற்றையும் கூறிவிடுகிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும். இவ்வுரையில் (1928 இல் நடந்தது ) திரு.வி.க 25 ஆண்டுகளுக்கு முன்பாக ராயப்பேட்டையில் நிகழ்ந்த கூட்டமொன்றை நினைவு கூறுகிறார். அக்கூட்டத்தில் லட்சுமி நரசு நாயுடு உரையாற்றியதாகவும் அக்கூட்டத்தில் தான் அமர்ந்து அவர் உரையை கேட்டதையும் நினைவுகூறும் திரு.வி.க லட்சுமி நரசு அக்கூட்டத்தில் அரங்கநாதர் என்பது புத்தரையே குறிக்கும் என்று விளக்கிக் காட்டியதை எடுத்துரைக்கிறார். இதை திரு.வி.க ஏற்றுக்கொள்கிறார். எனவே அரங்கநாதர் என்ற பெயரில் வழங்கி வரும் இந்துக்கோயில்கள் பௌத்தக் கோயில்களாக இருந்தவை என்றும் இப்பௌத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டன என்றும் அறியலாம்.

திரு.வி.க "சிவபிரான் கோயில்களின் விழாக்களை உற்றுநோக்கி ஆய்ந்தால் புத்தர் வாழ்வு செவ்விதிற் புலனாகும்" என்று கூறுகிறார். ஒரு சைவர் இப்படி கூறியிருந்தது மிகவும் முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு அவர் கூறிய கூற்றுக்கு அவரே தான் கண்ட காட்சியை விளக்குகிறார்.

1928ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவைப் பற்றி விளக்குகிறார். பத்து நாள் திருவிழா நடைபெற்ற இக்கோயிலில் தேர்விழா முதலியன நடைபெற்ற பிறகு "பிச்சாண்டி சேவை" என்ற ஒன்று நடைபெறுகிறது பற்றி அவர் கூறுகிறார். பிச்சாண்டி சேவையைப் பற்றி கூறுகையில் "கௌதமர் அரச வாழ்வு நீத்து நிர்வாண நிலை யெய்தியதையன்றே அறிவுறுத்துகிறது? பிச்சாண்டி சேவைக்கு முந்திய சேவைகள் புத்தர் பெருமானின் முன்னைய அரச நிலையை அறிவிப்பந. பிச்சாண்டி சேவை  அவரது பின்னைய அறநிலையைத் தெரிவிப்பது" என்று கூறுகிறார். இவ்வாறு கூறும் திரு.வி.க "பௌத்தம் பலதுறைகளிலும் இந்துமதத்தில் நுழைந்திருக்கிறது" என்று கூறுகிறார். இவ்விழா இந்து மதத்தில் நுழைந்து விட்டது என்கிற கருத்தை இவர் முன்வைக்கிறார் எனலாம். ஆனால் திருமயிலை கபாலீஸ்வரர் கோயிலைப் பௌத்தக் கோயில் என்று அவர் கூறவில்லை என்றாலும் அவர் அங்கு நடைபெற்ற திருவிழாவைப் பற்றி விளக்கும் முறையிலிருந்து கபாலீஸ்வரர் கோயில் பௌத்தக் கோயில் என்று நாம் அறிந்து கொள்ளலாம். இது மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயில் பௌத்தக் கோயில் என்று அறிஞர்கள் பலரும் கூறி வருவதை உறுதிப்படுத்துகிறது.

திரு.வி.கவின் இவ்வுரை முக்கியமான வரலாற்றுக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரை என்பதோடு தீவிர சைவர் பௌத்தத்தின் இலக்கிய வரலாற்றைப் பற்றி பேசினார் என்பது முக்கியமானதாகும். இதற்கு அப்போதிருந்த பௌத்தச் சூழலே காரணம் எனலாம். இவ்வுரை பௌத்தத்தின் மீது பெரும் உரையாடலை ஏற்படுத்திப் பௌத்தத்தின் இலக்கிய வரலாற்றை மட்டுமல்ல பௌத்தத்தின் பண்பாட்டையும் கட்டமைக்க உதவுகிறது எனலாம்.

துணைநூல்கள்:

1. இலக்கியத் திறனாய்வு, ஈஸ்வரன் ச., சாரதா பதிப்பகம், சென்னை, 2014.

2. சிலப்பதிகாரம், இளங்கோவடிகள், சாமிநாதையர் (பதி), டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 2013.

3. ஞான சூரியன், சுவாமி சிவானந்த சரஸ்வதி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1935.

4. தமிழ் நூல்களில் பௌத்தம், கலியாணசுந்தர முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1929.

5. பௌத்தமும் தமிழும், வேங்கடசாமி., வள்ளிநாதன் கா.ஏ. (பதிப்பாளர்), சென்னை, 1940.

6. மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், சாமிநாதையர் (பதி), டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 2013.

7. Buddhism in Tamilnadu a new perspective, Shu Hikosaka, Institute of Asian Studies, Madras, 1989.

8. The flower of ornament scripture  Translation of Avatamsaka sutra, Thomas Cleary (Tran.), Shambhala, London, 1993.


Wednesday, March 18, 2020

சீத்தலைச் சாத்தனார் பெயரும் பௌத்த வரலாறும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் கோட்பாடுகளையும் தருக்கங்களையும் இலக்கியத்தில் வைத்து பிரம்மாண்டமான அளவில் முதலில் பாடியவர் மணிமேகலையை இயற்றிய சாத்தனார்தான். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றழைக்கப்படும் இவர் மதுரை, சீத்தலை ஆகிய இரண்டு ஊர்ப்பெயர்களைத் தன் பெயரோடு சேர்த்து அடையாளமாகக் கொண்டுள்ளார். இவ்வாறு இரண்டு ஊர்ப்பெயர்களைத் தன் பெயரோடு சேர்த்து அடையாளமாகக் கொண்ட முதலும் கடைசியுமான தமிழ்ப் புலவர் சாத்தனாராகத்தான் இருக்கக்கூடும்.

மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பதற்கு அறிஞர் பெருமக்கள் சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்த சாத்தனார் என்ற பெயர் கொண்ட இவர் மதுரையை மையமாகக் கொண்டு தானியங்களை வணிகம் செய்தவர் ஆவார் என்று விளக்கமளிக்கின்றனர். வணிகச் சமூகத்தால் பௌத்தம் பேராதரவைப் பெற்றது என்று வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். வணிகத்தை மேற்கொண்ட சாத்தனார் பௌத்த ஆதரவு, பௌத்தர் என்பதோடு மட்டும் இல்லாமல் பேரிலக்கியத்தைப் படைத்தார் என்கிற வரலாற்றை அவர் உருவாக்கியுள்ளார். பௌத்தத்தையும் வணிகத்தையும் பற்றி தொடர்புப்படுத்தி பேசுகையில் வடநாட்டு வணிகர்கள் பௌத்தத்திற்கு ஆதரவு அளித்தனர் என்பதைப் போல பேசிக்கொண்டிருக்கிறோம். உள்ளூர் தமிழ் வணிகர்கள் பௌத்தத்தை ஆதரித்தார்கள், பௌத்த இலக்கியங்களை எழுதினார்கள் என்பதற்குச் சாத்தனார் பெரும் உதாரணம் ஆகும்.

மாபெரும் தமிழிலக்கிய படைப்பாளியான சாத்தனாரின் ஊர்ப்பெயரான சீத்தலை என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ச் சமூகம் வன்முறை நிறைந்த கதையாடலை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக நிகழ்த்திவிட்டது. இன்றைக்கும் பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்களுக்கு சீத்தலைச் சாத்தனார் என்றால் சீழ்ப்பிடித்த தலையுடைய சாத்தனார் என்றே கற்பிக்கின்றனர். நானும் பள்ளிகளில், உயர்கல்வி நிறுவனங்களில் அப்படித்தான் பாடம் கேட்டுள்ளேன்.

ஒரு மாபெரும் அறிவுஜீவியின் கருத்தியலை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாதபொழுது பொறம்போக்குத் தனமாக அவன் மீது சேற்றைவாரி பூச நினைக்கும் எந்த சமூகமாக இருந்தாலும் அது முட்டாள்கள் நிறைந்த சமூகம்தான். சாத்தனார் பெரும் தத்துவக்கோட்பாட்டோடு சமூகத்தை அணுகினார் என்பதும் இலக்கியத்தைப் படைத்தார் என்பதும் நாம் மறந்துவிடக்கூடாது.

மணிமேகலை நூலை முதன்முதலாக உ.வே.சா பதிப்பித்தபோது திருவள்ளுவமாலையில் இடம்பெற்ற பாடலை ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு சாத்தனார் சங்கத்தில் வீற்றிருந்தார் என்றும் சிறந்த நூல்கள் சங்கத்தில் படைக்கப்படாதபோது எழுத்தாணியால் தன் தலையில் குத்திக்கொள்வார் என்றும் இதனால் அவருக்கு சீழ்ப்பிடித்தது என்றும் எழுதினார். திருவள்ளுவமாலையின் பாடல் ஒன்றின் துணையோடு அவர் எழுதியிருந்தாலும் இக்கதையாடல் உண்மையானது இல்லை என்றும் அவர் மறுத்தும் உள்ளார். மணிமேகலையை பதிப்பித்த நா.மு. வேங்கடசாமியின் பதிப்பில் இத்தகைய கதையாடல் பற்றி அவர் எதுவும் எழுதவில்லை. பிற்காலத்தில் வந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும் இக்கதையை சுட்டி அது உண்மை இல்லை என்று தீவிரமாக மறுத்துள்ளனர் என்றபோதிலும் சாத்தனார் சீழ்ப்பிடித்த தலையை உடையவர் என்பதே தமிழ்ச் சமூகத்தில் நின்றுவிட்டது.

சீதள என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமே சீத்தலை என்பதாகும். சீதள என்றால் குளிர்ச்சி பொருந்திய, குளிர்ச்சி, குளிர்ச்சித்தன்மை கொண்ட என பொருள்படும். எனவே சீத்தலைச் சாத்தனார் என்றால் குளிர்ச்சித் தன்மைகொண்ட சாத்தனார் என்று பொருள். குளிர்ச்சியான உடல் என்பதற்கு சீதள உடம்பு என்று வழக்கில் நாம் இன்றும் இச்சொல்லை பயன்படுத்துகிறோம்.

காஞ்சிபுரத்தை ஆண்ட பௌத்த மன்னன் சீதளன் என்பவர் (குளிர்ச்சியானவர்) எதிரி மன்னனால் தோற்கடிக்கப்பட்டபோது அவர் இலங்கைக்குச் சென்றார் என்பது வரலாறாகும். எனவே சீதளன் என்ற பெயரில் தமிழகத்திலேயே ஒரு பௌத்த மன்னன் ஆண்டான் என்பது வரலாறு.
எனவே சீத்தலை என்பதும் சீதளன் என்பதும் தமிழ் மண் அறிந்திருந்தவையே ஆகும்.

காவரி நதி பாயும் சோழநாட்டில் சீத்தலை என்ற ஊர் இருந்தது என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே சாத்தனார் சோழ நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பாண்டிய நாட்டில் வாணிபத்தை மேற்கொண்டார் என்றும் பொருள் கொள்ளலாம். சீதள என்பதன் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவம் சீத்தலை, சீதள என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் தண்டலை (தண்+தலை=தண்டலை) ஆகும். தண் என்றால் குளிர்ச்சி என்று பொருள்.

படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் தண்டலையார் சதகம் காவிரி நதி பாயும் பொன்னி நாட்டில் அல்லது சோழநாட்டில் உள்ள தண்டலை என்னும் ஊரில் உள்ள சிவனைப் போற்றி புகழ்கிறது. பௌத்தத்தை நிலைநிறுத்த போராடிய சாத்தனார் பிறந்த சீத்தலை அல்லது தண்டலை என்னும் ஊரின் பெயரிலேயே ஒரு சதக இலக்கியம் சிவனை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது. சீத்தலை என்ற அடைமொழியைப் பெற்றதனால் சாத்தனாருக்கு சீழ்ப்பிடித்த தலை என்று கதை கட்டியதைப் போல தண்டலை என்பதன் சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்படுத்தப்பட்ட வடிவமான சீத்தலை என்பதை அடிப்படையாகக் கொண்டு தண்டலையார் சதகத்தின் நாயகனான் சிவன் சீழ்ப்பிடித்த தலையைக் கொண்டவன் என்ற கதையாடல் இருந்தால் அதை இந்து சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது சாதாரண கேள்வியாக இருக்க முடியாது. இவ்வாறான ஒரு கதையாடல் சிவனின் மீது இருக்க வேண்டும் என்பதல்ல நம் நோக்கம். ஒரு மாபெரும் அறிவுஜீவியான சாத்தனாரைப் போன்றவர்கள் மீது போலி கதையாடல்கள் அமைந்துவிடக்கூடாது என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.

சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பதை மட்டும் இவ்வூர் அடையாளமாகக் கொண்டிருக்கவில்லை. சாத்தனார் என்னும் பௌத்தர் பிறந்த ஊர் என்றால் இவ்வூரில் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று பொருள்கொள்ளலாம். இத்தோடு மட்டும் இல்லாமல் சீத்தலை (சீதள, சீதளன் மன்னன்) என்பதே பௌத்த ஊர்ப்பெயராகும். எனவே, தண்டலை என்பதும் பௌத்த ஊர்ப்பெயராகும்.

சாத்தனார் என்ற பௌத்தப் பேரறிஞர் சீத்தலையில் பிறந்து பெரும் தமிழ்க் காப்பியத்தைப் படைத்தார். அதே ஊரின் பெயரை அடையாளமாகக் கொண்டு பிற்காலத்தில் தண்டலையார் சதகம் சிவனை முன்னிறுத்திப்பாடுவது சாதாரண நிகழ்வல்ல. இதை பௌத்தத்திற்கு எதிரான நடவடிக்கை என்றோ அல்லது பௌத்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட எதிர்நிகழ்வுகளின் தொடர்ச்சிகளில் ஒன்றாகவொ கருதலாம்.


சாத்தனாரின் மீது சுமத்தப்பட்ட இத்தகைய போலி கதையாடல் யதார்த்தமாக நிகழ்ந்ததல்ல. வள்ளுவர், சாத்தனாரைப் போன்ற பௌத்த அறிவுஜீவிகள் மீது கட்டப்பட்ட கதையாடல்கள் பௌத்தத்தை எதிர்ப்பதற்குத் திட்டமிட்ட தொடர்முயற்சியாக இருந்திருக்க வேண்டும். சாத்தனாரின் மீது சுமத்தப்படும் இத்தகைய பழிக்கதை சீத்தலை என்னும் ஊரில் பௌத்தம் இருந்தது என்பதையும் அங்கு பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் மறைப்பதற்காக இருந்திருக்கக்கூடும் அல்லது இத்தகைய போலிக்கதை சீத்தலையில் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள், சோழநாட்டில், பொன்னி நாட்டில் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை மறைத்துவிடுகிறது.

சாத்தனார் போன்ற ஒரு மாபெரும் புலவர் மீது ஆயிரம் ஆயிரம் போலி கதைகளைக் கட்டினாலும் அவைகளால் சாத்தாருக்கு இழுக்கேதும் இல்லை. அவர் பெரும் அறிவுஜீவி.

Sunday, March 15, 2020

காதல் உடன்போக்கும் பௌத்த அறமும்




பண்டைய தமிழ்ச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் (தலைவன், தலைவி) ஒருவருக்கொருவர் விரும்பி, அவர்களின் காதலை அவர்களின் பெற்றோர்கள் ஏற்காத பொழுது இருவரும் உடன்போக்குச் செல்வார்கள். உடன்போக்கு என்பது பெற்றோர்கள் மறுத்த பிறகு, தலைவனும் தலைவியும் பெற்றோர்களை விட்டு நீங்கி தாங்கள் நினைத்த வாழ்வை வாழ்வதற்காக இருவரும் ஒருவர் உடன் மற்றொருவர் செல்வதாகும். இக்கால சமூகத்தில் இந்நிகழ்வை ஓடிப்போதல் என்பார்கள். உடன்போக்கு அல்லது ஓடிப்போதல் என்பது பௌத்த வாழ்வியலில் அறமாகிறது. ஓடிப்போதல் என்பதே நாகரிகமாகும்.

தலைவனும் தலைவியும் காதலித்து அக்காதலைப் பெற்றோர்கள் ஏற்காதபோது இருவரும் ஓடிப்போதல் அல்லது உடன்போக்குச் செய்தல் அறமாகும். பெற்றோர்கள் மறுக்கிறபோது பெற்றோர்களுக்கு செவிசாய்த்து உடன்போக்கு மேற்கொள்ளாமல் விட்டுவிடுவது அறமற்ற செயலாகும்.

உடன்போக்கு எவ்வாறு பௌத்த அறமாக மாறுகிறது அல்லது பௌத்த வாழ்வியலில் உடன்போக்கு எவ்வாறு அறமாக அமைந்துள்ளது என்ற கேள்விக்கான விடையைக் கலித்தொகையில் பெருங்கடுங்கோ பாடிய பாலைக்கலி பாடலினால் அறிந்துகொள்ளலாம். 'எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்' என்னும் பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை அறிந்துகொண்டால் உடன்போக்கு பௌத்த அறம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பாலை நிலத்தின் வழி தலைவனும் தலைவியும் உடன்போக்கினை மேற்கொண்டார்கள். தலைவியின் தாய் அந்நிலத்து வழியே அவர்களைத் தேடிச் செல்கிறாள். அங்கே அத்தாய் ஒரு அந்தணரை சந்திக்கிறாள். அவரிடம் என் மகள் ஒருத்தியும் வேறொருத்தியின் மகனும் இவ்வழியில் சென்றதைக் கண்டீர்களா அந்தணரே என்கிறாள். அதற்கு அவரோ பார்க்கவில்லை என்று சொல்லமாட்டேன், பார்த்தேன் என்கிறார்.

வெறுமனே அக்கேள்விக்குப் பார்த்தேன் என்று மட்டும் பதலளித்ததோடு நின்றுவிடாமல் சந்தனத்தைப் பூசிக்கொள்பவருக்கு அது பயன்படுமே தவிர அது மலையில் பிறந்தாலும் அதனால் மலைக்குப் பயனில்லை. நினைத்துப் பார்த்தால் இது போல உன்மகள் உமக்குச் சொந்தமில்லை, அத்தலைவனுக்கே சொந்தம் என்கிறார். இதை அந்தணர் "பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே" என்று கூறுகிறார்.


சிறந்த வெண்ணிற முத்துக்கள் அணிபவர்களுக்குப் பயன்படுமே தவிர அவைகள் கடலில் பிறந்தாலும் கடலுக்கு அவைகளால் பயனில்லை. நன்கு ஆராய்ந்து தேரி முடிவுக்கு வந்தால் இதுபோல உன்மகள் உமக்கு சொந்தமில்லை அத்தலைவனுக்கே சொந்தம் என்கிறார். இதை "சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே" என்ற வரிகளால் குறிப்பிடுகிறார். இங்கு தேருங்கால் என்ற சொல் பௌத்த மரபிற்குரிய சொல்லாடல் ஆகும். அறிவில் நன்கு தேரியவர்கள் தேரவாத பௌத்தர்கள் ஆவர். எனவே பௌத்தர்கள் இச்சொல்லை அடிக்கடி பயன்படுத்துவர்.


ஏழு நரம்புகள் பொருந்திய யாழிசைக் கருவியிலிருந்து வரும் இசை கேட்பவருக்கு சொந்தமாகுமே தவிர அவ்விசைக் கருவிக்கு இசை சொந்தமாகாது. இதுபோல உம்மகள் உமக்கு சொந்தமில்லை. அத்தலைவனுக்கே சொந்தம் என்று அந்தணர் கூறுகிறார். இதை "ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அணையளே" என்ற வரிகளால் அறியலாம்.

இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அத்தாய் கேட்ட கேள்விக்கு வெறுமனே பார்த்தேன் என்று மட்டும் பதிலளிக்காமல், காதலின் அவசியத்தை அந்தணர் உணர்த்துகிறார். அப்பெண் அந்த ஆணுக்கே சொந்தம் என்ற வாதம்தான் அந்தணரின் அழுத்தமான வாதம் ஆகும். ஒரு உதாரணம் அல்ல சந்தனம், முத்துக்கள், யாழிசை ஆகியவற்றின் தன்மையை முன்னிறுத்தி உடன்போக்கை அங்கீகரிக்கிறார் அந்தணர்.

இங்கு எழுப்பப்படும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் வெவ்வேறு குழுவிலிருந்து ஆணும் பெண்ணும் விரும்பினால் அதை குழுவாதத்தால் பிரிப்பது சாதிய சமூக அமைப்பில் உள்ள பிராமணர்களின் வேலையாகும். பண்டிதர் அயோத்திதாசரின் மொழியில் சொல்ல வேண்டுமேயானால் வேஷப்பிராமணர்களின் வேலையாகும். இப்பாடலில் வரும் அந்தணர் வெவ்வேறு குழுக்களுக்கிடையே உள்ள காதலை உடன்போக்குச் சூழலிலும் அங்கீகரிக்கிறார் என்றால் அவர் பௌத்த அந்தணராக இருக்க வேண்டும். பண்டிதரின் மொழியில் சொல்லவேண்டுமேயானால் யதார்த்த பிராமணரின் வேலையாகும்.

இப்பாடலில் வரும் அந்தணர் பிச்சைப் பாத்திரத்தை வைத்துள்ளார். பௌத்த மத பிக்குகளாகிய அந்தணர்கள் பிச்சை பாத்திரத்தை வைத்திருப்பதை இங்கு நினைவில்கொள்ள வேண்டும். தலைவனும் தலைவியும் உடன்போக்கை மேற்கொள்வது பாலை நிலமாகும். இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் மேற்கொண்ட உடன்போக்கு அசாதாரண நிகழ்வு என்பதைக் காட்ட காட்சிப் பின்னணியாக பாலைக்காட்சி இடம்பெறும் என்றாலும், இக்காட்சியைப் பின்னணியாகக் கொண்டு அந்தணர் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வரும் காலம் மழை அல்லாத வெப்ப காலமாகும். சூரிய வெப்பம் வீசியது என்பதை 'எறித்தரு கதிர்' என்ற தொடரால் அறியலாம். எனவே பௌத்த அந்தணர்கள் பிச்சை எடுப்பதற்குரிய காலம் இதுவென்று அறிந்துகொள்ளலாம். எனவே காதலின் உடன்போக்கை மிகத் தீவிரமாக அங்கீகரிக்க இலக்கிய உலகிலும் யதார்த்த வாழ்விலும் பௌத்த அந்தணரால் மட்டுமே முடியும் என்பதை இது காட்டுகிறது.


இவ்வாறு அவர்கள் உடன்போக்கு மேற்கொண்டது அற நெறியிலிருந்து தவறாமல் இருப்பதற்காகவே என்று பௌத்த அந்தணர் 'அறம் தலை பிரியா' என்றுணர்த்துகிறார். அறம் என்ற சொல்லே பௌத்த மரபைச் சார்ந்தது என்றும் இச்சொல்லுக்கும் வேஷப் பிராமணர்களுக்கும் தொடர்பில்லை என்றும் நாம் அறிந்ததையே அடிப்படையாக வைத்துக்கொண்டுப் பார்த்தால் புலவர் பெருங்கடுங்கோ பௌத்தக் கருத்தியலை பௌத்த பிக்குவின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

எனவே 'காதல் உடன்போக்கு' என்பதை அங்கீகரிப்பது பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பௌத்த அறமாக இருந்துள்ளதை நாம் அறியலாம்.


Sunday, March 1, 2020

கீழடி மனித உருவமும் சாத்துக்கூடல் வீரனாரும்

              (கீழடி மனித உருவ சிலை)

 பிரிட்டிஷ் – இந்தியாவில் ஏற்படத் தொடங்கிய அகழாய்வு இந்தியாவின் பழமையான வரலாற்றைக் கட்டமைப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் உதவியது. ஒரு வகையான பண்பாட்டிற்குட்பட்ட வாழ்க்கை முறையை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் மனிதர்கள் மேற்கொண்டிருந்தனர் என்பதை அறிவதற்கும், இதை உலகிற்குப் பறைசாற்றுவதற்கும் யாவராலும் மறுக்கமுடியாத சாட்சிகளாய் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் அமைகின்றன. இவ்வகையில் கீழடி அகழாய்வு மனிதகுல வரலாற்றின் மாபெரும் சாட்சியாய் அமைந்துள்ளது.

 கீழடி அகழாய்வுகளில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்களும், 3 விலங்கு உருவங்களும் கிடைத்துள்ளன (2019, ப.21). சுடுமண்ணால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கலை வடிவமானது ஆதிகால கலை வரலாற்றையே காட்டுவதால் இவ்வுருவச் சிலைகள் காலப்பழமையானது என்பதோடு மட்டுமில்லாமல் காலப்பழமை சார்ந்த உருவம் வெளிப்படுத்துவன யாவை என்கிற மிக முக்கியமான கேள்விக்கு இது நம்மை இட்டுச் செல்கிறது. இவ்வுருவச் சிலைகளின் சில பெயர்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

1. மனித தலைப் பகுதி (தலை உருவம் மட்டும்)
2. ஆண் உடல் பாகம்
3. புடைப்பு உருவம்
4. உடல்பாக வடிவம்
5. தலையின் அச்சு
6. குதிரை தலை
7. காளையின் தலைப் பகுதி (மேலது, ப.48)

கீழடி புதைப்பொருட்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு  இந்நாகரிகம் சமய சார்பற்ற நாகரிகம் என்கிற கருத்து மேலோங்கியுள்ளது. இக்கருத்து கீழடியில் கிடைக்கபெற்ற பதின்மூன்று மனித உருவங்கள் அனைத்தும் எந்த மதத்தையும் சமயத்தையும் சாராத சமய சார்பற்ற உருவங்கள் என்பதையே வலியுறுத்துகிறது எனலாம்.

 புலங்கடந்த தொல்லியல் அறிவியல்களின் மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (PAMA) இயக்குநர் திரு. பி.ஜெ. செரியன் அவர்கள் “கீழடி அகழ்வாய்வுகளில் இருந்து  இதுவரை கவனமாக ஆய்வு செய்யத் தகுந்த மதம் தொடர்பான குறியீடுகள் எவையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” (மேலது, ப. அணிந்துரை) என்கிறார். இவருடைய கூற்றில் ‘மதம் தொடர்பான குறியீடுகள் எவையும் கிடைக்கவில்லை’ என்ற கருத்து மிக அழுத்தமான வாதமாகும். இவர் மேலும் ஓரிடத்தில் கீழடியைப் பற்றி கூறுகையில் “இயற்கையுடன் இணைந்த வாழ்வு, சாதி அமைப்பு இன்மை, குறைந்த அதிகாரங்கள் பயன்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு பண்பாட்டையே கீழடி அகழ்வாய்வுகள் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்” என்று கூறியவர் “கீழடி கண்டுபிடிப்புகள் நமக்கு உணர்த்த விரும்புவது என்னவென்றால் மதச்சார்பின்மை” என்று கூறுகிறார். இவருடைய கூற்றுகளில் கீழடி மதச்சார்பற்றது என்கிற கருத்து மிக அழுத்தமாக இடம்பெற்றுள்ளதை நாம் அறிகிறோம்.

 திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற புத்தகத்தில் கீழடியைப் பற்றி கூறுகையில் இந்நாகரிகம் சமயச் சார்பற்ற நாகரிகம் என்பதை வெளிப்படுத்த பின்வருமாறு கூறுகிறார்: “கீழடி அகழ்வாய்வுத் தடயங்களில் சமய வழிபாட்டிற்கான அடையாளங்கள் எதுவும் தூக்கலாக தென்படவில்லை என்பது தமிழ்த்தொன்மங்களின் அணுகுமுறையோடு இணக்கம் காட்டுவதோடு அது சிந்து வெளி நகர்மயச் சமூகவாழ்வின் அடிப்படைகளோடும் ஒப்பிடத்தக்கதாக உள்ளது” (2018, ப.28).

 மேற்குறிப்பிடப்பட்ட அறிஞர்கள் கீழடி நாகரிகம் சமயச் சார்பற்றவை என்று கூறியதை மிக கவனமாக எடுத்துக்கொண்டு, கீழடியில் கிடைக்கப்பெற்ற மனித தலைப் பகுதி உருவத்துடன் பொருந்தும் சிலையொன்றினை ஒப்பிட்டு ஆராயும் வகையில் இக்கட்டுரை அமையும்.

கீழடி மனித உருவச் சிலையும் சாத்துக்கூடல் வீரனாரும்…
 சமீபத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நாகரீகம் என்ற நூலைப் படித்த போது அதில் வெளியிடப்பட்டிருந்த ஒரு மனித உருவச் சிலை பெளத்த ஆராய்ச்சியாளரான எனது கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சாத்துக்கூடல் என்னும் ஊரில்  தலை ஆபரணம், நீண்ட காதுகள் கொண்ட  சிலை ஒன்றைக் கண்டோம். இச்சிலையின் தோற்றம் கீழடியில் காணப்பட்ட மனித உருவச் சிலையை ஒத்து காணப்படுகிறது. இச்சிலையை கிராம மக்கள் அந்த சிலையை வீரனார் என அழைத்தனர். மேலும், இச்சிலையைப் பார்ப்பதற்கு புத்தரின் சாயலில் இருந்தது.
 

வீரனார் அந்தப் பகுதி மக்களின் குலத்தெய்வமாக வழிபடப்படுகிறது. தலை மட்டுமே உள்ள இச்சிலை முன்பு தரையில் இருந்ததாகவும் இப்பொழுது மேடை அமைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கள ஆய்வில் அறிந்தோம். இவ்வீரனார் சிலைக்கு புத்தருக்கு காது நீண்டு இருப்பதைப் போல உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட புத்தர் சிலைகளின் தலையில் காணப்படும் ஞானப்புள்ளி, ஞானக்கூம்பு ஆகியன இச்சிலையில் காணப்படவில்லை என்றாலும் இச்சிலையின் தலையில் முடிசுருள் கூம்பாக அமைத்திருப்பது காந்தார கலைவடிவில் புத்தர் அமைந்திருக்கும் தோற்றத்தை நினைவுறுத்துகிறது. இச்சிலையின் பின்னந்தலையில் குறியீடு ஒன்று காணப்படுகிறது.


(புத்தரின் சாயலில் உள்ள சாத்துக்கூடல் வீரனார்)


         வீரனார் என்கிற பெயர் தமிழ்ச்சமூகத்தில் புத்தருக்கு வழங்கப்படும் பெயர்களுள் ஒன்று என கருதப்படுகிறது. ஏற்கனவே, புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட வீராம்பட்டினம் (அரிக்கன்மேடு, அருகன் மேடு), வீரகனூர் (வீர அருகனூர், சேலம் மாவட்டம்) ஆகிய இடங்களைக் குறிக்கும் ஊர்ப்பெயர்களில் வீரம் என்கிற அடைமொழி சேர்ந்துவருவது கவனிக்கத்தக்கது. புத்தராகிய சாஸ்தாவின் துதிப்பாடலில் இவர் வீராய என்று விளித்து அழைக்கப்படுகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். 1949 ஆம் ஆண்டு வெளிவந்த பி.சி. அலெக்ஸாண்டரின் கேரளாவில் பௌத்தம் என்ற நூலில் புத்தரைக் குறிக்கும் ஜினன் என்ற சொல்லுக்கு மாவீரன் என்று அறிஞர்கள் பொருள்கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். இவையாவும் புத்தருக்கு வீரன் என்ற பெயர் வழங்கிவந்ததையே காட்டுகிறது எனலாம்.

 சாத்துக்கூடல் என்னும் ஊர்ப்பெயருக்கு இவ்வூர் மக்கள் “ஏழு கன்னிமார்கள் கூடிய இடம்” என்று விளக்கமளிக்கின்றனர். இவ்வூரில் ஏழு கன்னிமார்கள் அமைந்த கோயில் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கன்னிமார்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். வடமொழியில் சாத் என்ற சொல்லுக்கு ஏழு என்று பொருளாகும். கிராம மக்களின் விளக்கத்திற்கு ஏற்ப துகரம் சாத் என்பதோடு சேர்ந்து சாத்து என்று அமைந்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஏழு கன்னிமார்கள் கூடிய இடம் என்று கிராம மக்கள் அளிக்கும் விளக்கத்திற்கு இவ்வூர்ப்பெயர் ஒத்துப்போகிறது. இத்தோடு மட்டும் இல்லாமல் சாத்துக்கூடல் என்பதற்கு மற்றொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. அதாவது சாத்து என்றால் உப்பு என்று பொருளாகும். எனவே உப்பு வணிகர்கள் கூடிய இடம் சாத்துக்கூடல் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வூரில் சாத்தன்  சிலை ஒன்றும் உள்ளது. சாத்தன் என்பது புத்தரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சாஸ்தா என்ற வடமொழி சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமாகும். சாத்துக்கூடல் என்பது சாத்தன்கூடல் என்றும் இருந்திருக்கலாம் என்றும் அனுமானிக்கலாம். என்றாலும் இவ்வூர்ப்பெயருக்கான விளக்கம் மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் இவ்வூருக்கு அப்பர் வந்துவிட்டுபோனதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். இவ்வூரில் அப்பர்சுவாமி மடம் என்றும் ஒரு மடம் ஒன்று உள்ளது. இது தனிநபர் சொத்தாகும்.

         கீழடி அகழாய்வுகளில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் காணப்படும் மனித தலைப்பகுதி சிலையொன்றோடு இவ்வீரனார் சிலை ஒத்துப்போகிறது என்பதை இவ்விரு படங்களையும் காணும்போது அறியலாம். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சிலையில் தலையைச் சுற்றி தலைப்பாகையைப் போல காணப்படும் தலை ஆபரணம் இருப்பதை அறியலாம். மேலும், இச்சிலையின் காதும் நீண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே போல இவ்வீரனாருக்கும் தலையைச் சுற்றி ஆபரணமும் நீண்ட காதும் அமைந்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியின் மேலே கூம்பு போன்ற வடிவம் சிதைந்துள்ளதைப் படத்தில் காணலாம்.  இவ்வீரனார் சிலையின் தலைக்கு மேல் முடிச்சுருளால் அமைந்த கூம்பு வடிவம் காணப்படுகிறது. மேலும், இதை தலைக்குமேல் காணப்படும் முடிச்சுருளால் அமைந்த செங்குத்தான அமைப்பாக இருக்கிறது என்றும் கூறலாம். இவ்வீரனார் சிலை காலத்தால் மிகவும் பிந்தையதாக அல்லது மிகவும் அண்மைக்காலத்து சிலையாக இருக்க வேண்டும். இருப்பினும் இச்சிலையின் தோற்றம் தமிழ்ச் சமூகத்தின் பழமையை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கீழடி மனித முகத்திற்கும் வீரனார் சிலைக்கும் வேற்றுமைகள் இல்லாமலில்லை. கீழடி மனித முகத்தில் தாடைப் பகுதி குறுகலாகத் தெரிகிறது. வீரனார் சிலையில் தாடைப் பகுதி நேர்வெட்டில் கீழே இறங்குவதுபோல் தெரிகிறது. மேலும் வீரனார் தலையில் உள்ள ஆபரணத்தில் நெற்றிக்கு நேராக தூக்கலான வடிவம் போல் காணப்படுகிறது. கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளில் கிடைக்கும் பொருட்கள் சமயம் சார்ந்த சமூகத்தைக் காட்டுகிறதா, மதச் சார்பற்ற சமூகத்தைக் காட்டுகிறதா என்ற விவாதம் நடந்து வருகிறது. கீழடி ஆய்வில் கிடைத்த மனித உருவத்திற்கும் வீரனார் சிலையின் தோற்றத்திற்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.

(இக்கட்டுரையின் ஆய்வாளர் கள ஆய்வு மேற்கொண்டபோது உடன் உதவிப்பேராசிரியர் முனைவர் க. இரவிச்சந்திரன் (தமிழ்த்துறை, ஆர்.கே.எஸ். கல்லூரி, கள்ளக்குறிச்சி), பௌத்தக் கள ஆய்வாளர் திரு. அருள் முத்துக்குமரன் ஆகியோர்களும் என்னுடன் கள ஆய்வுக்கு வந்தனர். இக்கள ஆய்வின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது இந்த கட்டுரை)

துணைநூல் பட்டியல்:
1. கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம், தொல்லியல் துறை தமிழ்நாடு அரசு, சென்னை, 2019.
2. பாலகிருஷ்ணன் ஆர்., சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், பாரதி புத்தகாலயம், சென்னை, 2018.
3. ஸ்ரீ குருநாதர் (சாஸ்தா-அய்யனார்-நாதர்) அஷ்டோத்தர சத – நாம ஸ்தோத்ரம் – நாமாவளி, ஆத்மாநந்த நிலயம், தஞ்சை, 1953.
4. Alexander P.C., Buddhism in Kerala, Annamalai University, Annamalainagar, 1949.
5. Dayalan D., Buddhist remains of South India, Sterling Publishers (p) Ltd., New Delhi,
(இடது - கீழடி மனித உருவ சிலை வலது - சாத்துக்கூடல் வீரனார்)