Tuesday, February 25, 2020

புத்தன் அரிசியும் பள்ளு இலக்கியமும்





நிலவுடைமைச் சமூகத்தில் சாதிய இறுக்கம் வலுப்பெற்றபோது உணவு உற்பத்தியில் உழைப்புக் கருவிகளாக பூர்விகப் பௌத்தர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதற்குப் பள்ளு இலக்கியங்கள் சாட்சியாய் அமைகின்றன. இருப்பினும் பௌத்தத்தோடு தொடர்புடைய இவர்களின் பூர்விக அடையாளத்தைக் குறிக்கும் வகையில் பள்ளர் என்ற சொல் விளங்கிவந்தது எனலாம். பள்ளி என்னும் சொல் பௌத்தத்தோடு தொடர்புடைய சொல் என்றும் இச்சொல்லுக்குப் பின்னால் நீண்ட நெடிய வரலாறு உண்டு என்றும் நாம் அறிவோம். இச்சொல்லை அடிப்படையாக கொண்டு தமிழகத்தின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள் பள்ளி என்றும் தமிழகத்தின் தென்பகுதியில் வாழ்ந்த மக்கள் பள்ளர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறியலாம். இடைக்காலத்தில் உருவான இடங்கை வலங்கை பற்றிய நூல்கள் பள்ளி, பள்ளர் என்ற பிரிவுகளைப் பற்றி பேசுகின்றன என்பதோடு மட்டும் இல்லாமல் அவை பூர்விகச் சொல்லாடல்களைப் பதிவுசெய்துகொண்டன.

நெல்லு வகையை எண்ணினாலும் எண்ணலாம் பள்ளு வகையை எண்ண முடியாது என்னும் பழமொழி வளர்ந்துவந்த பள்ளு இலக்கியத்தின் வகையை அதிக வகைகளோடு இருந்துவந்த நெல் வகைகளோடு மட்டும் ஒப்பிடப்படுவதாக தெரிந்தாலும் நெல்லுக்கும் பள்ளுக்கும் இடையேயான நெருக்கமான உறவின் பின்னணியில் இப்பழமொழி தோன்றியது எனலாம். பள்ளு இலக்கியங்கள் நெல்லின் வகைகளைப் பற்றி கூறுகின்றன. இவற்றுள் முக்கூடற்பள்ளு இலக்கியம் புத்தன் நெல்லு வகை பெயரையும் திருமலை முருகன் பள்ளு இலக்கியம் புத்தன்வாரி நெல்லு வகை பெயரையும் குறிக்கிறது. பள்ளர் என்ற சொல்லே தனது வேரை பௌத்தத்தில் கொண்டிருக்கும்போது அவர்கள் நெல் உற்பத்தியில் ஈடுபட்ட நெல் வகைகள் புத்தன், புத்தன்வாரி என பெயர் பெற்றிருப்பது தங்களின் உற்பத்தியில் உருவான பொருளுக்குத் தங்களின் வேர்களின் அடையாளத்தையே கொண்டிருந்தனர் என்றும் புத்தன், புத்தன்வாரி ஆகிய பெயர்கள் பலநூற்றாண்டுகளாக சில நெல்லு வகைகளைக் குறிக்க தமிழ்ச்சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்து இப்பெயர்கள் பள்ளு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் நாம் கொள்ளலாம்.

No comments:

Post a Comment