Thursday, February 6, 2020

குறும்பூர் சிங்க அய்யனார்!



குறும்பூர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது. இவ்வூர் ஏரிக்கரையில் அய்யனார் உள்ளார். குறும்பூர் என்றால் குறும்புக்கார ஊர் என்று விளையாட்டாக இவ்வூரை கிண்டலடித்தாலும் முனைவர் இரவிச்சந்திரன் அவர்கள் இவ்வூரில் சொல்லப்படும் பொருளைக் கூறினார். ஆடு மேய்க்கும் குரும்பர்கள் வந்து தங்கிய ஊர் ஆதலால் குரும்பூர் என்று வழங்குவதாக அவ்வூரில் பேசப்படும் பொருளைக் கூறினார்.

இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது குறும்பூர்? அல்லது குரும்பூர்? என்பதில் எது சரி என்பதுதான். குரும்பர்கள் என்றால் ஆடு, மேடு மேய்க்கும் கதையோடு சம்பந்தப்பட்டதுதான். ஆனால் காலவோட்டத்தில் பெயர் எப்பொழுது எப்படி மாறுகிறது என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.

குறும்பூர் என்றால் கோட்டை இருந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் குறும்பு என்றால் கோட்டை, மண்மேடு என்று பொருள். எனவே குறும்பூர் என்றால் கோட்டை அமைந்த ஊர் அல்லது மேடான பகுதி என்று பொருள் கொள்ளலாம்.

குறும்பூரை சுற்றியுள்ள பாலி, விசலூர், பள்ளிப்பட்டு, பள்ளியந்தாங்கல், காட்டுநெமிலி, கோவிலானூர் ஆகிய ஊர்ப்பெயர்களைக் கவனித்தால் இவை பௌத்த ஊர்ப்பெயர்களாக இருக்கின்றன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. குறும்பூர் என்பதை மண்மேடு, கோட்டை ஆகிய பொருளைத் தரும் ஊராக கொண்டால் இவ்வூர் காலத்தால் பழமையானதாகும்.

இவ்வூரின் ஏரிக்கரையில் உள்ள அய்யனார் கோயில் மறுசீரமைப்பு பணியின் போது அங்கிருந்த அய்யனாரை வெளியே அகற்றிவிட்டு புதிய சிலையை வைத்துள்ளனர். பழைய சிலை கோயிலுக்கு வெளியே கிடக்கிறது. இந்த அய்யனார் சிங்கத்தின் மீது அமைந்துள்ளார். அசோகப் பேரரசர் ஆட்சிக்காலத்தைப் பார்க்கும்போது சிங்கம் மிகமுக்கியமான குறியீடாக அமைந்திருப்பதை நாம் அறிகிறோம். புத்தரின் சிலைகளும் சிங்க பீடத்தின் மீது அமைந்துள்ளதைக் காண்கிறோம். இந்த வகையில் சிங்கத்தின் மீதுள்ள அய்யனார் நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

நீங்கள் மேய்ப்பதற்கு நாங்கள் ஆடுகளல்ல! சிங்கங்கள்...!

No comments:

Post a Comment