பண்டைய தமிழகத்தின் கிழக்கு, மேற்கு எல்லைகளைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறபோது கிழக்கும் மேற்கும் கடல்கள் எல்லைகளாக அமைந்துள்ளன என்று கூறுகிறது. இந்தியாவின் தீவிர பௌத்த ஆய்வாளர் டி.சி. அஹீர் தன்னுடைய தென்னிந்தியாவில் பௌத்தம் என்ற புத்தகத்தில் பண்டைய தமிழ்ப்பௌத்ததின் எல்லைகளைப் பற்றி குறிப்பிடுகிறபோது கிழக்கே நாகப்பட்டினமும் மேற்கே ஸ்ரீ மூலவாசமும் அமைந்தது என்கிறார். இவ்விரண்டு இடங்களும் முறையே கிழக்கு, மேற்கு கடற்கரையில் அமைந்த இடங்களாகும். ஸ்ரீ மூலவாசம் என்பது மேற்கு கடற்கரையில் அமைந்த மிகப்பெரிய பௌத்த விகார் என்பதோடு மட்டும் இல்லாமல் பண்டைய இந்தியாவில் சிறந்து விளங்கிய பௌத்த மையங்களுள் ஒன்றாக விளங்கியது. நாகப்பட்டினத்தைப் போலவே ஸ்ரீ மூலவாசமும் ஆசியாவின் கவனத்தை ஈர்த்த ஒரு பௌத்த தலமாகும்.
இங்குதான் தொல்காப்பிய பாயிரம் தமிழ்மொழி வழங்கிய எல்லைகளைப் பற்றி குறிப்பிடுவது கவனத்திற்குரியதாகும். இது தமிழ்மொழி வழங்கிய பகுதியாக வடக்கில் வேங்கடத்தையும் (திருப்பதி) தெற்கே கன்னியாகுமரியையும் குறிப்பிடுகிறது. சற்று கவனித்தால் இது தமிழ்மொழி வழங்கிய பகுதிக்கு வரையறையைக் கூறியிருந்தாலும் அதுவே பண்டைய தமிழ்ப்பௌத்தத்தின் எல்லைகளாகும். திருப்பதி பாலாஜி பௌத்தவிகார் என்பதும் கன்னியாகுமரி என்பவர் பௌத்த பிக்குணி என்பதும் பௌத்தவரலாறு நமக்கு கூறும் செய்தியாகும்.
எனவே, பண்டைய தமிழ்ப்பௌத்தின் எல்லைகளாக கிழக்கே நாகப்பட்டினமும் மேற்கே ஸ்ரீ மூலவாசமும் தெற்கே கன்னியாகுமரியும் வடக்கே திருப்பதியும் அமைந்திருந்தது எனலாம்.
No comments:
Post a Comment