Wednesday, January 22, 2020

புத்தரின் முக்குடை சொல்லும் வரலாறு!



தமிழ்ச் சமூகத்தில் அவைதீக மரபை மாற்றுக்கண்ணோட்டத்தோடு அணுகியவர்களில் முதன்மையானவர் பண்டிதர் அயோத்திதாசர் ஆவார். பௌத்த, சமண மரபுகள் என்று தமிழ்ச் சமூக ஆய்வாளர்கள் பிரித்துப் பார்த்த சூழலில் பண்டிதர் இவற்றைப் "பௌத்த மரபு" என்னும் கண்ணோட்டத்தில் அணுகுவது பௌத்த வரலாற்றியல் ஆய்வில் மிக முக்கியமானதாகும்.



1936ஆம் ஆண்டு கிறித்தவமும் தமிழும் என்ற புத்தகத்தை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1940ஆம் ஆண்டு தனது மிக முக்கியமான "பௌத்தமும் தமிழும்" என்ற நூலை வெளியிட்டார். பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்நூலில் மயிலையார் சமணம் என்பது அனைத்து சமய துறவிகளையும் குறிக்கும் பொது சொல் என்கிறார். அதாவது சமணம் என்பது தனி மதத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக பார்க்கப்பட்டு வந்த சூழலில் அச்சொல்லுக்கு இருக்கும் மற்றொரு பரிமாணத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அவைதீக மரபைப் பற்றி ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் அத்துறையில் முன்னோடி அறிஞர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுவதில்லை என்பதை ஆய்வுக் குறைபாடாகவோ அல்லது தாங்களே சாதிய சாயம் பூசிக்கொள்பவர்களாக திகழ்கிறார்கள் என்பதாகவோ புரிந்துகொள்ளலாம்.

தமிழ்ச் சமூகத்தில் சிலைகளைப் பற்றி ஆய்வை மேற்கொள்பவர்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட விதிமுறைகளையே பின்பற்றுகிறார்கள், அது சமூகத்தில் தங்களுக்கான சமூக இருப்பில் வசதியாக இருப்பதையும் உணர்கிறார்கள் அல்லது தாங்கள் வரையறுத்துக்கொண்ட விதிமுறைகளை சாதிய சட்டகத்துக்குள் வைத்துக்கொண்டு பௌத்தத்தைத் தங்களின் விடுதலை கருவியாகப் பார்க்கும் தலித்துகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடுகின்றனர்.

இங்கு தார்வாடில் உள்ள கர்நாடகப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் R.C. ஹிரேமத் அவர்கள் எழுதிய Buddhism in Karnataka (முதல் பதிப்பு 1994, இரண்டாம் பதிப்பு 2002) என்னும் நூலின் அட்டையில் இடம்பெற்றுள்ள புத்தரின் படம் நம் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. மேலும், இப்படம் பௌத்த ஆய்வியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இப்படத்தை நன்கு உற்று கவனிக்கும்போது நமக்கு சில புரிதல்கள் ஏற்படக்கூடும்.

புத்தர் சிலையையும் தீர்த்தங்கரர் சிலையையும் வேறுபடுத்திப் பார்க்கும்போது ஆய்வாளர்கள் வகுக்கப்பட்ட விதிமுறைகளைக் கையாள்கின்றனர்.

1. சீவராடை அணிந்திருந்தால் புத்தர், இல்லையென்றால் தீர்த்தங்கரர் - என்பது அவ்விதிமுறைகளில் ஒன்றாகும்.

2. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சிலைகள் சிதைவுற்ற நிலையில் இருக்கும்போது சீவராடை உள்ளதா இல்லையா என்று தெளிவாக தெரியாதபொழுது, சிலையின் தலைக்கு மேலே காணப்படும் முக்குடையை (மூன்றடுக்கு) அடிப்படையாக கொண்டு அது புத்தர் சிலை இல்லை என்றும், அது தீர்த்தங்கரர் சிலை என்றும் முடிவுக்கு வருகின்றனர்.

இதிலிருந்து முக்குடை இருந்தால் தீர்த்தங்கரர் என்று முடிவுக்கு வருவதன் மூலம் அது புத்தர் சிலை இல்லை என்று நிராகரிக்கின்றனர். இங்குதான் டாக்டர் ஹிரேமத்தின் நூலின் அட்டையில் முக்குடையை சுமந்துள்ள புத்தர் நம் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளார்.

இப்படத்தை உற்று கவனித்தால் முக்குடை இருப்பதோடு மட்டும் இல்லாமல் சீவராடை இருப்பதையும் அறியமுடியும். விதிமுறையின்படி தீர்த்தங்கரருக்கு சீவராடை இல்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மேலும் புத்தருக்குப் பின்னால் அமைந்திருக்கும் வட்டம் தீர்த்தங்கரருக்கும் உண்டு என்றாலும், இச்சிலையில் அசோக சக்கரத்தை நினைவுறுத்தும் வகையில் பூவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளதைப் படத்தில் காணமுடியும்.

பௌத்தத்தின் மீது பெரும் நாசகார வேலையை நிகழ்த்தி அதை வீழ்ச்சியடைந்த மதமாக குறிக்கும் வரலாற்றுப் போக்கில் இச்சிலை வரலாற்றை நேர்செய்யும் ஆயுதமாகவே விளங்குகிறது.

கர்நாடக மாநிலத்தில் ஐஹோலில் உள்ள இச்சிலையே இப்புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சிலை உள்ள ஐஹோல் என்னும் இடம் ஐவள்ளி, ஆர்யபுரம் எனவும் அழைக்கப்பெறுமாம். இந்திய மொழிமரபில் இந்தோ - ஆரிய மொழிகளில் பகரமாக இருப்பது திராவிட மொழிகளில் வகரமாக பயன்படுத்தப்படும். இதற்கு பங்காள தேசம் என்பதை தமிழில் வங்காளதேசம் என்று கூறுவதை உதாரணாமாக கொள்ளலாம். எனவே ஐபள்ளி என்றிருந்ததையே ஐவள்ளி என்றழைத்துள்ளனர் எனலாம். ஐபள்ளி என்பதன் பொருளை அய்யன் அல்லது ஐயன் புத்தர் வீற்றிருக்கும் பள்ளி அல்லது விகார் என்று பொருள்கொள்ளலாம்.

மேலும் பௌத்த தெய்வங்கள் ஆர்ய தேவர் என்றும் ஆர்ய தேவி என்றும் அழைக்கப்படுவதை நினைவில் கொண்டால் ஐஹோலின் மற்றொரு பெயரான ஆர்யபுரம் பௌத்தத்தின்பாற்பட்டு அமைவதை அறிய முடியும்.

எனவே, முக்குடை பௌத்த மார்க்கத்திற்கும் உரியது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மேலும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சமணம் பொதுசொல்லாக அனைத்து மத துறவிகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்று கூறுவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தீர்த்தங்கரரின் சிலையும், புத்தரின் சிலையும் மக்களால் புத்தர் என்றே குறிக்கப்பெறுவதை ஆய்வாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். விருத்தாசலம் பகுதியில் உள்ள எடையூர் என்னும் ஊரில் உள்ள இரண்டு தீர்த்தங்கரரின் சிலைகள் அங்குள்ள மக்களால் புத்தர் சிலை என்றே குறிக்கப்பெறுகிறது. இதை ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. மேலும் இச்சிலைகள் தலித்துகள் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு சாதி இந்துக்கள் வசிக்கும் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன என்கிற அடிப்படைத் தகவலைக்கூட ஆய்வாளர்கள் எழுத மறுக்கின்றனர் அல்லது இப்பரப்பில் ஆய்வை மேற்கொள்ளும்போது வசதியாகவே சாதிய சமூக அமைப்பை மறந்துவிட்டு பெயரளவில் அது தீர்த்தங்கரர் என்று மட்டுமே குறிக்கின்றனர். இங்கு தீர்த்தங்கரர் சிலையை மக்கள் புத்தர் என்று அழைப்பது அறியாமையின் வெளிப்பாடு என்று ஆய்வாளர்கள் நினைத்தால், அது மக்களின் அறியாமை அல்ல ஆய்வாளர்களின் அறியாமையாகவே கொள்ள வேண்டும்.

பொதுசொல்லாக சமணம் இருப்பதைப் போல கேரளாவில் இந்து மதத்தை தவிர்த்து மற்ற ஏனைய மதங்கள் அனைத்துக்கும் "பௌத்த மார்க்கம்" என்பது பொது சொல்லாடலாக இருந்ததைப் பற்றி மிக விரிவாக அலெக்ஸாண்டர் தனது கேரளாவில் பௌத்தம் என்ற நூலில் எழுதியுள்ளார். அதாவது பௌத்தம், ஜைனம், இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மதங்களைக் குறிக்க "பௌத்த மார்க்கம்" என்ற சொல்லாடலே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதைப் போலவே தமிழகத்தில் மக்கள் தீர்த்தங்கரர் சிலையையும் புத்தர் சிலையையும் குறிக்க புத்தர் என்ற பொது சொல்லையே பயன்படுத்துகின்றனர் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.

பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் இடையே உள்ள மிக நெருக்கமான உறவை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஜைனம் என்பதன் தமிழ் வடிவமே சமணம் என்று கூறுவதையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமோ என்று தோன்றுகிறது. சமணர்கள் அமணர்களாக இருப்பதினால் நேரடியாக குறிப்பிடாமல் மங்கல வழக்காக மாற்றி சமணர்கள் என்று கூறுகின்றனர் என்கிற கருத்தை கவனத்தில் கொண்டால் ஜைனர்களில் இருபெரும் பிரிவாக உள்ள சுவேதம்பரர், திகம்பரர் (திசையையே ஆடையாக உடுத்திக்கொள்ளும் அமணர் என்னும் சமணர்) என்பவர்களில் சமணம் என்பது ஜைனம் முழுவதையும் குறிக்காமல் ஜைனத்தில் ஒரு பிரிவை மட்டுமே குறிக்கக்கூடிய சொல்லாக விளங்குவதை அறியலாம்.

மேலும் கடலூர், விழுப்புர மாவட்டம் போன்ற தமிழகத்தின் வட மாவட்டங்களில் கால்களை மடித்து அமர்வதற்குக் கூறப்படும் சப்பலாங்கோடு என்கிற சொல்லை சமணம் என்ற சொல்லோடு இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது சப்பலாங்கோடு அல்லது சம்மணங்கோடு என்று வழக்கில் கூறுவதை சமணம் என்பதோடு இணைத்துப் பார்த்தால் புத்தர், தீர்த்தங்கரர்கள் தங்களுடைய கால்களை மடித்து அமர்ந்து தியான நிலையில் சம்மணங்கோடு முறையில் இருந்து சிறப்பு பெற்றதால் இவர்கள் சமணர்கள் என்றும் அழைக்கப்பெற்றிருக்கலாம். இங்கு மயிலை சீனி. வேங்கடசாமி சமணம் பொதுசொல் என்று குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதைப் போலவே அருகன் என்பது சமணக்கடவுளைக் குறிக்கும் என்று கூறும் கருத்தையும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். பாண்டிச்சேரியில் உள்ள அரிக்கன்மேடு என்பதை அருகன்மேடு என்ற வடிவம் கொண்டு A. ராமசுவாமி தனது History of Pondichery என்னும் நூலில் 'ஜின மலை அல்லது புத்தர் மலை' என்று பொருள்கொள்கிறார். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் சிலையை அடிப்படையாக கொண்டு D.C. அஹிர் தனது Buddhism in South India என்ற நூலில் அருகன்மேடு என்பது 'புத்தர் மலை'யே என்று அழுத்தமாக வலியிறுத்துகிறார். மேலும், புத்தர் சிலை இருக்கும் சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் என்னும் ஊர்ப்பெயரையும் வீரம்+அருகனூர் என்று பொருள்கொண்டால் அருகன் புத்தரைக் குறிப்பதை அறியமுடியும்.

பௌத்தத்திற்கும் தமிழ்ச் சமணத்திற்கும் இடையே மிக நெருக்கமான உறவு உள்ளது என்பதற்கு சமணம், பௌத்த மார்க்கம், புத்தர், அருகன் ஆகிய சொற்கள் சாட்சியாக உள்ளன. வெறும் முக்குடையை அடிப்படையாக வைத்துக்கொண்டு இது தீர்த்தங்கரர், இது புத்தர் இல்லை என்று கூறும் அளவுகோலை ஐஹோல் அல்லது ஐபள்ளி அல்லது ஆர்யபுரத்தின் முக்குடை சுமந்த புத்தரை சிலை புறந்தள்ளிவிடுகிறது. இச்சிலை பௌத்த சிற்பவியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப்பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இச்சிலையை அடிப்படை சான்றாக கொண்டு புத்தரை முக்குடைப் புத்தர் என்றே அழைக்கலாம்.

No comments:

Post a Comment