வள்ளுவர் தாம் இயற்றிய திரிக்குறளின் தெய்வ வாழ்த்தாக அமைத்த முதல் குறளில் புத்தரை "ஆதி பகவன்" என்று போற்றியுள்ளார். பௌத்த இலக்கண நூலான வீரசோழிய உரையில் காணப்படும் புத்தரைக் குறிக்கும் பாடல் ஒன்று "போதி, ஆதி, பாதம் ஓது!" என்றமைந்துள்ளது. இவ்வரியில் புத்தரைக் குறிக்க "ஆதி" என்ற சொல் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.
பண்டைய காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி புத்தரை ஆதியங் கடவுள் என்று கூறுகிறது. அப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.
"ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
சோதியஞ் செல்வநின் திருவடி வணங்கினம்".
இப்பாடல் இவ்வாறு தமிழ் வெர்ட்சுவல் யுனிவர்சிட்டி இணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பாடலை எடுத்தாண்டுள்ள மயிலையார் பதிவுசெய்ததில் "அருமறை அருகனை" என்றும் "திருவடி தொழுதனம்" என்றும் காணப்படுகிறது. அருகன் என்பது புத்தரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இவ்வேறுபாடு ஆராயத்தக்கது.
வீரசோழியத்திலும், யாப்பருங்கல உரையிலும் காணப்படும் புத்தர் பாடல் ஒன்று புத்தரை அவரின் பல்வேறு பெயர்களால் பக்தியுணர்வோடு விளிக்கிறது. அப்பாடல் பின்வருமாறு...
"ஆதி நீஇ ! அமலன் நீஇ !
அயனும் நீஇ ! அரியும் நீஇ !
சோதி நீஇ ! நாதன் நீஇ !
துறைவன் நீஇ ! இறைவன் நீஇ !
அருளும் நீஇ ! பொருளும் நீஇ !
அறிவன் நீஇ ! அநகன் நீஇ !
தெருளும் நீஇ ! திருவும் நீஇ !
செறிவும் நீஇ ! செம்மல் நீஇ !"
இப்பாடலில் ஆதி நீஇ! என்று புத்தர் அழைக்கப்பட்டிருப்பதை அறியலாம்.
எனவே, வள்ளுவன் போற்றிய ஆதி பகவன் என்பது ஆதி புத்தர் என்பதை உணரலாம்.
No comments:
Post a Comment