Thursday, January 23, 2020

உடைக்கப்பட்ட மணிமேகலை சிலையும் மாற்றப்பட்ட பௌத்த வரலாறும்...



பௌத்தப் பிக்குணி மணிமேகலையின் பெயராலேயே இவரைப் பற்றிய கதையாடல்கள் ஆசிய நாடுகள் முழுவதும் காணப்படுகின்றன. இத்தகைய கதைகள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ்க் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், மணிமேகலையின் பெயராலேயே ஒரு காப்பியம் இருப்பது தமிழிலக்கியத்திற்கே உரியதாக திகழ்கிறது. சாத்தனார் மணிமேகைலையின் பெயரை இந்திய பௌத்தப் பொதுமரபிலிருந்து தேர்வு செய்துள்ளார்.




பௌத்தப் பிக்குணி மணிமேகலையைப் பற்றி வெறும் இலக்கியப் பதிவாக மட்டும் தமிழ்ச் சமூக சூழலில் நின்றுவிடவில்லை. அது மக்களின் மத்தியில் பௌத்தப் பண்பாட்டு பழக்க வழக்கத்திலும் இருந்தது. இலக்கிய களம், சமூக தளம் என இரண்டிலும் தன் அடையாளத்தைப் பதித்திருந்த மணிமேகலைக்கு இன்றும் வழிபாட்டு வடிவம் உள்ளது என்பதிலிருந்து அவ்வளவு எளிதில் இந்திய மண்ணில் பௌத்தத்தை வேரறுத்துவிட முடியாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

மயிலை சீனி. வேங்கடசாமி தன்னுடைய பௌத்தமும் தமிழும் (1940) என்ற நூலில் மணிமேகலைக்கு காஞ்சிபுரத்தில் கோயில் உள்ளது என்று குறிப்பிடும் அவர் கருக்கினில் அமர்ந்த அம்மன் என்று அக்கோயிலுக்குப் பெயர் வழங்கப்படுவதாக குறிக்கிறார். இன்றும் இப்பெயரிலேயே இக்கோயில் வழங்கப்படுகிறது என்பதைக் கள ஆய்வில் நானும் சகோதரர் அருள் முத்துக்குமரன் அவர்களும் நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொண்டோம்.

இக்கோயிலில் உள்ள மணிமேகலையின் சிலை சிதைந்த நிலையில் உள்ளதால் அதன் இரு கைகளும் இல்லை. சிமெண்ட் பூசி வைக்கப்பட்டுள்ளதால் இச்சிலை அரை சிலையாக வடிவமைக்கப்பட்டதா? அல்லது முழுசிலையாக வடிவமைக்கப்பட்டதா? என்பதை அறிய முடியவில்லை அல்லது அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டதா என்பதையும் அறியமுடியவில்லை. இருப்பினும் இச்சிலையின் முகம் இன்றும் தெளிவுற உள்ளது. பொதுவாக பௌத்த மரபில் உள்ள தெய்வங்களை வடிவமைக்கும்போது புத்தரின் சாயலில் வடிவமைப்பது முறையாகும். புத்தரைப் போலவே பௌத்தப் பிக்குணி மணிமேகலையும் வடிவமைக்கப்பட்டுள்ளாள். புத்தருக்குத் தலையில் சிறப்பு ஞானத்தைக் குறிக்கும் வகையில் உள்ள உர்ன அல்லது ஜ்வல என்றழைப்படும் இது மணிமேகலையின் தலையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தரின் காதுகள் தோள்வரை நீண்டிருப்பது போல மணிமேகலையின் காதுகளும் நீண்டிருக்கின்றன. மணிமேகலையின் கழுத்தில் இரண்டு மணிகள் தொங்குகின்றன. பௌத்தத் துறவி ஆபரணத்தை அணியக்கூடாது, எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்க மணிகள் இருப்பதால் இதை மணிமேகலை இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. இது மணிமேகலைதான் என்பதற்கு இக்கோயிலின் பெயரும் இச்சிலையின் புத்தரின் சாயலும் போதுமான சான்றாகும். இருப்பினும் மணிமேகலையின் சிலையில் ஏன் மணிகள் உள்ளன என்பதற்கு டாக்டர் ஷு
ஹிகோசாகாவின் கருத்திலிருந்து அறிய முற்படலாம். மணிமேகலைக் காப்பியத்தை ஆராய்ந்த அவர் இக்காப்பியத்தில் பௌத்தப் பிக்குணி மலர் சூடியிருப்பதாக கூறப்பட்டுள்ளதை அறிந்த அவர் அது பௌத்த பிக்குகளின் விதிமுறைகளுக்கு எதிராக இருந்தாலும் தமிழ்ப்பண்பாட்டில் மலர்கள் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் இது தமிழ்ப்பௌத்தத்திற்குரிய முறை என்று அதன் சமூகவியல் பின்னணியை எடுத்து இயம்புகிறார். இதிலிருந்து மணிமேகலையின் கழுத்தில் உள்ள ஆபரணங்கள் அல்லது மணிகள் விலைமிக்கது இல்லை என்றும் அது சாதாரணமாக மக்களின் வழக்கத்தில் புழங்குப்பொருட்களாக இருந்த மணி ஆபரணங்கள் என்று அறிவதோடு மட்டும் இல்லாமல் இது தமிழ்ப்பௌத்தத்தின் அடையாளம் என்பதையும் அறியலாம்.

இங்குள்ள மணிமேகலையை மக்கள் வழக்கில் அமுதம்மா என்று விளிக்கின்றனர். இது மணிமேகலை காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அமுதசுரபியை நினைவுறுத்துகிறது. மேலும் மணிமேகலையை கல்யாணம் ஆவாத சாமி என்று கூறுகின்றனர். இது அவள் பிக்குணி அல்லது துறவி என்பதைக் குறிக்கிறது.

மணிமேகலையிடம் வேண்டினாள் திருனணம் நடக்கும் என்ற நம்பிக்கை இம்மக்கள் மத்தியில் உள்ளது. துறவறத்தில் இருக்கும் சாமியிடம் இல்லற விருத்திக்காக வேண்டுவது ஆசிய பௌத்த மரபில் பொதுவானதுதான். இத்தகைய பண்பை சீனத்து குவானியின் என்னும் பௌத்தப்பிக்குணியும் பெற்றுள்ளாள்.

இக்கோயில் மக்களின் கவனத்தை ஈர்க்ககூடிய அளவிற்கு சற்று பெரியதாக உள்ளது என்றாலும் கட்டிடங்கள் எழுப்பிக்கட்டப்பட்ட கோயிலுக்குள் உள்ள கருவறையில் உள்ள தெய்வம் இந்துதெய்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மணிமேகலை தெய்வம் இக்கட்டிடங்களுக்கு வெளியே வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் கருவறையில் இருக்க வேண்டிய மணிமேகலை வெளியே வைக்கப்பட்டுள்ளால் என்பதை பிராமணீய ஆதிக்கம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இதனால்தான் இச்சிலை தானாக உடைந்தது என்று எண்ணமுடியவில்லை, உடைக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. இதன் முகத்தின் தெளிவைக் காணும்பொழுது கைகள் சிதைவுண்டு இருப்பது உடைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.

மேலும் இக்கோயிலில் இரண்டு புத்தர் சிலைகள் உள்ளன. இக்கோயிலில் பிராமணர் ஒருவர் பூஜை செய்து வருகிறார். அவருடன் நானும் சகோதரர் அருள் முத்துக்குமரனும் உரையாட தொடங்கினோம். கோயிலின் கருவறையில் இரத்தக்காவு வாங்கும் இந்து தெய்வம் இருக்க கருவறைக்கு நேர் எதிரில் இரண்டு புத்தர் சிலைகளும் கருவறையை நோக்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு சிலைகளில் ஒன்று தியான முத்திரையிலும் மற்றொன்று பூமிஸ்பர்ச முத்திரையிலும் அமர்ந்தநிலையில் உள்ளன. உரையாடலில் அப்பிராமணர் எங்களிடம் வினாக்களைத் தொடுத்தார்.
1. பூமிஸ்பர்ச நிலையில் உள்ள சிலை யாருடையது? என்றார். நாங்கள் வாயைத்திறப்பதற்கு முன்பாக அவரே முந்திக்கொண்டு அது சமண தீர்த்தங்கரர் என்று கூறினார். நாங்கள் புத்தர் என்றோம். உண்மையில் அதைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் யாரோ வந்தவர்கள் அவ்வாறு கூறியதாகவும் கூறினார்.
2. ஏன் அப்புத்தர்களின் சிலைகள் கருவறையில் உள்ள சிலையை நோக்கி அமர்ந்துள்ளன? என்றார். இது எனக்கும் அருள் முத்துக்குமரனுக்கும் மிகவும் டஃப்பான கேள்வியாக இருந்தது. விடை தெரியாமல் நான் முழித்தேன். அருள் முத்துக்குமரன் கண்பிதுங்கி நின்றார். நான் மனதுக்குள் என்னடா இது பௌத்த ஆய்வாளர்களுக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டேன்.

அக்கேள்விக்கு அவரே பதிலைக் கூறினார். கருவறையில் உள்ள தெய்வம் இரத்தம் குடிக்கும் தெய்வமாதலால் அது எப்பொழுதும் கோபமாகவே இருக்கும். அதை சாந்தப்படுத்தவே, சாந்தமான முகங்களைக் கொண்டு அமைதியாக இருக்கும் அவ்விரண்டு புத்தர் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன என்றார். இதிலிருந்து ஒருவர் தன் சொந்த கேள்விக்கே மகாமட்டமான பதிலை அளிக்க முடியும் என்று நாங்கள் அவர் பதிலை சொல்லும்பொழுதே உணர்ந்தோம் என்றாலும் அமைதியாக நின்றோம். ஒரு இரத்தக்காவு தெய்வத்தை சாந்தப்படுத்த இரண்டு புத்தர்கள் தேவையா? என்று நினைத்துக்கொண்டேன்.



இக்கோயில் மணிமேகலையின் பெயரில் வழங்கும் பௌத்தக் கோயில் என்றாலும் இக்கோயிலில் உள்ள இவ்விரண்டு புத்தர் சிலைகளும் ஆதியில் இக்கோயிலில் வைக்கப்பட்டதில்லை. இக்கோயில் இந்துமயமாக்கப்பட்ட பிறகு இச்சிலைகள் பௌத்தக் கோயிலாக இருந்த காஞ்சி காமாட்சியம்மன் கோயிலை இந்துக்கோயிலாக மாற்றும் முயற்சியில் அங்கிருந்த இவ்விரண்டு புத்தர் சிலைகளும் இக்கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளது. 1915ல் வெளியிடப்பட்ட T.A. கோபிநாத ராவ் அவர்கள் Buddha vestiges in kanchipuram என்ற தனது கட்டுரையில் இவ்விரண்டு புத்தர் சிலைகள் காஞ்சி காமட்சியம்மன் கோயிலிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக பதிவு செய்துள்ளார். இச்சிலைகளின் புகைபடங்களையும் அவர் இத்தோடு இணைத்துள்ளார். எனவே இச்சிலை இரண்டும் 20ஆம் நூற்றாண்டில்தான் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலிலிருந்து மணிமேகலை கோயிலுக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிலிருந்த புத்தர் சிலைகளை மணிமேகலை அம்மன் கோயிலில் வைத்தால் இது பௌத்தக் கோயில் என்று உறுதிப்படுத்தப்படாத, அதை தூக்கியெறிய வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு எங்கேயோதான் தூக்கி எறிய வேண்டும் அதை மணிமேகலை கோயிலில் வைத்திருக்க மாட்டார்களே என்று எண்ணலாம். பரவலாக தமிழகத்தில் புகழ்பெற்ற காஞ்சி காமட்சியம்மனை இந்துக்கோயிலாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கம் பிரதானமானதாகும்.


அப்பிராமணரின் கட்டுக்கதையை பௌத்தம் சார்ந்த பின்னணி இல்லாமல் இருந்தால் நாங்கள் நம்பிதான் ஆக வேண்டும். இப்படித்தான் கட்டுக்கதைகள் இந்துமயமாக்களுக்குப் பெரிதும் துணைபுரிந்தன. இத்தகைய சூழலில் பௌத்த வரலாற்றையும் அதன் பண்பாட்டையும் மீட்டுருவாக்கம் செய்வது ஆய்வாளர்களுக்கு மிகவும் கடினமானதாகும்.

மணிமேகலை காலத்தால் அழிக்க முடியாத ஆசிய பிம்பம்.

No comments:

Post a Comment