நாட்டுப்புறவியல் ஆய்வின் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருக்கும் தெய்வங்களை ஆராய தொடங்கியதன் விளைவாக, இத்தெய்வங்களை வேஷ பிராமண மதக்காரர்கள் கூறும் தெய்வாங்களோடு ஒப்பிட்டு இவர்களின் மதங்களைப் பெருந்தெய்வங்கள் என்றும் நாட்டுப்புற தெய்வங்களை சிறுதெய்வங்கள் என்றும் சொல்லும் தேவையற்ற ஒரு போக்கு நிலவிவிட்டது.
நாட்டுப்புறத்தெய்வம் என்பதை கிராமத் தெய்வம், குலத்தெய்வம் என்று பொருள்கொள்ளும் ஆய்வாளர்கள் பெருந்தெய்வம் என்று அவர்கள் வரையறுத்த தெய்வங்களோடு புத்தரையும் சேர்த்துவிடுகின்றனர். இதனால்தால் பௌத்தம் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள்கூட நாட்டுப்புற தெய்வங்களில் பௌத்தம் பற்றிய கூறுகளை அவர்கள் கண்டறிகிறபோது, பௌத்தம் நாட்டுப்புறத்தெய்வத்தில் கலந்துவிட்டது, நாட்டார் தெய்வங்களின் பண்பாடு அல்லது குலத்தெய்வங்களின் பண்பாடு பௌத்தத்தை உள்வாங்கிக்கொண்டது அல்லது பௌத்தம் குலத்தெய்வ பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டது என்று கூறுகின்றனர். இந்த சிக்கல் வேஷ பிராமணர்களின் தெய்வங்களோடு குலத்தெய்வங்களை ஒப்பிடும் அதே அளவுகோலைப் பௌத்தத்திற்கும் பொருத்திப் பார்ப்பதால் ஏற்படுகிறது.
உண்மையில் பௌத்த தெய்வ வழிபாட்டு முறை என்பது குலத்தெய்வ வழிபாட்டு முறையே ஆகும். பௌத்த வழிபாடு என்பதும் குலத்தெய்வ வழிபாட்டு மரபு என்பதும் வேறுவேறானவை அல்ல. பௌத்த வழிபாட்டு மரபைக் குலத்தெய்வ வழிபாட்டு மரபு என்றோ குலத்தெய்வ வழிபாட்டு மரபை பௌத்த வழிபாட்டு மரபு என்றோ கூறிக்கொள்ளலாம். சிலப்பதிகார காப்பியத்தில் கோவலன், மாதவி ஆகியோர்களின் மகளாகிய மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நிகழ்ச்சியை மாடலன் என்ற மறையோன் கோவலனுக்கு நினைவுறுத்துவதாக இளங்கோவடிகள் அமைத்திருப்பார். இந்நிகழ்வில் மாதவியின் குலம் சார்ந்த கணிகையர்கள் சூழ்ந்து மணிமேகலைக்கு பெயர்சூட்டும்போது, என்ன பெயரை வைக்க வேண்டும் என்று கோவலன் அவர்களுக்குக் கூறுவதோடு மட்டும் இல்லாமல், அதற்கான காரணத்தையும் விளக்குகிறான்.கோவலனின் மூதாதையர் ஒருவர் கடல்வழி பயணத்தை மேற்கொள்ளும்போது, பெரும் புயல் வீசி படகு நடுக்கடலில் உடைபடுகிறது. அவர் கடலில் தவிக்கிறார். அப்பொழுது மணிமேகலா என்ற கடல் தெய்வம் இந்தரனின் (புத்தர்) கட்டளையின்படி வந்து அவரை காப்பாற்றுகிறது. கடலில் சிக்கியவன் நீண்ட நாட்கள் கடலில் தவித்தாலும் இறந்துவிடாமல் அவர் காப்பாற்றப்படுவதற்குக் காரணம் 'புண்ணிய தானம் செய்தவர் ஆவார்'. இதை மணிமேகலா தெய்வமே கடலில் சிக்கியவரிடம் கூறுகிறது.
எனவே தன் மூதாதையரைக் காப்பாற்றிய மணிமேகலா தெய்வத்தின் பெயரையே தன்னுடைய மகளுக்கு மணிமேகலை என்று பெயரிடுமாறு கோவலன் சொல்லுகிறான். அவ்வாறு சொல்லும்போது "எம்குலத் தெய்வப்பெயர் ஈங்கு இடுக என" கூறுகிறான். மணிமேகலா தெய்வம் பற்றி கோவலன் கூறுகிறபோது எம் குலத்தெய்வம் என்று கூறுவதை மிக சாதாரணமாக கடந்துவிடமுடியாது. பௌத்த தெய்வம் குலத்தெய்வம் என்று வழங்கப்பட்டு வந்ததையே அது காட்டுகிறது. எனவே பௌத்தமும் குலத்தெய்வ வழிபாட்டு மரபும் வேறுவேறல்ல என்பதை உணரலாம்.
பண்டிதர் அயோத்திதாசர் அம்மன் போன்ற பௌத்த தெய்வங்களைப் பற்றி எழுதியது என்பது தனித்துகிடந்த குலத்தெய்வங்களையோ அல்லது நாட்டுப்புற தெய்வங்களிலிருந்து பௌத்த தெய்வங்களைக் கண்டறிந்தார் என்பதல்ல பொருள். மாறாக பௌத்த வழிபாடும் தமிழ்ச்சமூக குலத்தெய்வ வழிபாட்டு மரபும் ஒன்று என்று அவர் அறிந்திருந்ததே காரணமாகும். இன்றைக்கும் பௌத்த தெய்வமான மணிமேகலை காஞ்சிபுரத்தில் மணிமேகலை அம்மன் என்றுதான் அழைக்கப்படுகிறார். எனவே சிறுதெய்வம், பெருந்தெய்வம் என்கிற பாகுபாடு பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் புத்தராக இருந்தாலும் மணிமேகலாவாக இருந்தாலும் அய்யப்பனாக இருந்தாலும் அய்யனாராக இருந்தாலும் அவர்கள் குலத்தெய்வங்கள்தான். இன்னும் சொல்லப்போனால் இளங்கோவடிகளால் குலத்தெய்வம் என்று போற்றப்பட்ட மணிமேகலா தெய்வம் பற்றி ஆசிய நாடுகள் முழுவதும் பல கதைகள் இருப்பதை ஜாதக கதைகள் கூறுகின்றன. இது குலத்தெய்வமாமிய மணிமேகலா ஆசியா என்னும் பெரும் நிலப்பரப்பில் பெருந்தெய்வமாக காட்சியளிப்பதையே காட்டுகிறது. அழுத்தமாக சொல்லப்போனால் பௌத்தத்தில் சிறுதெய்வம், பெருந்தெய்வம் என்ற வேறுபாடு இல்லையென்றாலும் இவைகளின் பொருண்மையில் அனைத்து பௌத்த தெய்வங்களும் பெருந்தெய்வங்களாகவே காட்சியளிக்கின்றன.
No comments:
Post a Comment