Thursday, November 11, 2021
விவசாய பிரச்சனைக்கு தீர்வு - அம்பேத்கரிய பார்வை
இந்த நாட்டின் முதுகெலும்பு என பெருமைப்படுத்திக் கொண்டே விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. விவசாயம் என்பது சமூகத்தின் தனிப்பட்ட அங்கமோ, அதன் பிரச்சனை தனிப்பட்ட பிரச்சனையோ அன்று. சுரண்டல், வறுமை, தீண்டாமை, சாதி, பண்ணைடிமைத்தனம் என சமூகத்தின் சாபக்கேடுகள் சங்கமிக்கும் தொழில் விவசாயம்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நவீன இந்தியாவின் அனைத்து பிரச்சனைகளிலும் அக்கறை செலுத்தியது போல, விவசாயத்துறையிலும் அக்கறை செலுத்தி அதற்காக போராடி இருக்கிறார். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் அவரது பணி, ரிசர்வ் வங்கி உருவாக்கம், சாதி ஒழிப்பு, இந்து மத வெளியேற்றம், பௌத்தம் திரும்புதல் ஆகிய தளங்களில் அவரது பங்களிப்பு குறித்து பேசிய அளவுக்கு இந்திய விவசாயத்தில் அவரது வரலாற்று பாத்திரம் குறித்து பெரிதும் பேசப்படாதது வருத்தமானதே.
பாபாசாகேப் அம்பேத்கரின் வரலாற்றை படிக்கும் போது ஜமீந்தாரி முறை எனும் கோத்தி முறைக்கு எதிராக, முறையற்ற விவசாய வரிவிதிப்புக்கு எதிராகவும், விவசாய பொருளாதாரத்தை பின்னடைய செய்யும் சிதறிக்கிடக்கும் துண்டு நிலங்களை ஒருங்கிணைத்து விவசாயத்தை மேம்படுத்த அவர் இயங்கியதை பார்க்க முடிகிறது.
கோத்தி முறை ஒழிப்பு
கொங்கன் பகுதியில் விவசாய கூலிகளை சுரண்டும் 'கோதி' முறை இருந்தது. 'கோத்' என்றால் ஜமீந்தார்கள். பல பட்டாதார்களை தங்கள் கட்டுப்பாட்டில் கீழ் நிலையில் வைத்து பல நூற்றாண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்தனர். இந்த குடியானவர்களை இவர்களின் சுரண்டலிலிருந்து விடுவிக்க பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் 1929 ஏப்ரல் 14 அன்று இதற்கெதிராக மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை ரத்தன்கிரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் ஆரம்பித்தார். 1936ல் சுதந்திர தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். கட்சியின் கொள்கை அறிக்கையில் 'கோத்தி முறை ஒழிப்பு' க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பம்பாய் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு 1937ம் ஆண்டு, செப்டெம்பர் 17ம் நாள் அன்று பம்பாய் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட முதல் சட்டமன்ற தீர்மானம் இதுதான். நிலத்தின் மீதான ஜமீன்தாரின் உரிமையை ரத்து செய்து அவர்களுக்கு இழப்பீடு வழங்கி விவசாயிகளுக்கு நிலங்கள் அளிக்கப்படவேண்டும் என்னும் புரட்சிகரமான ஆலோசனைகள் அந்த மசோதாவில் இருந்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவை முன்மொழிந்துவிட்டோம் நம் கடமை முடிந்துவிட்டது என சாதாரணமாக விடவில்லை. அதை செயல்படுத்த மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டத்தை அவரது தலைமையில் போராடினார். "ஜமீந்தாரி முறை ஒழிக! அம்பேத்கரின் மசோதாவை ஏற்றுக்கொள்!" என முழங்கியபடி மிகப்பெரிய பேரணி நடந்தது. அதில் சாம்ராவ் பருலேகர், இந்துலால் யாக்னிக் மற்றும் சில தலைவர்களோடு பாபாசாகேப் அவர்கள் முதல்வரை சந்தித்து 'பயிர் செய்யும் விவசாயிகளின் அடிப்படை கூலியை முடிவு செய்தல், பட்டா முறையை நீக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றுதல், ஜமீன்தாரி முறையை ஒழித்தல், சிறு விவசாயிகளுக்கு தண்ணீர்க் கட்டணத்தை பாதியாக குறைத்தல்' ஆகிய கோரிக்கைகளை அளித்தார். இப்படியான நீண்ட போராட்டத்தின் விளைவாக 1949ல் கோத்திமுறை ஒழிக்கப்பட்டது.
இங்கு முக்கியமான கவனிக்கபடவேண்டிய செய்தி 1938ல் விவசாயிகளுக்காக அடிப்படைக்கூலியை முடிவு செய்தல் என்னும் கோரிக்கை. இன்றும் கூட பொதுவாக 'தொழிலாளர்களுக்கான அடிப்படைக்கூலி' தான் பேசுபொருளாக இருக்கிறதே தவிர 'விவசாயிகளுக்காக அடிப்படைக் கூலி' இல்லை. ஆனால் 'விளைபொருளுக்காக விலையை விவசாயிகள் தான் தீர்மானிக்கவேண்டும்' என்கிற நிலவுடைமையாளரின் கோரிக்கையும் பேசுபோருளாக இருப்பதை கவனிக்க. தமிழ்நாட்டின் வரலாற்றில் கரும்புள்ளியாக என்றும் இருக்கும் கீழ்வெண்மணி குறித்து இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அரை மரைக்காய் ஊதிய உயர்வுக்காக 1967ல் நடைபெற்ற இப்போராட்டத்தை ஜீரணிக்காத ஆதிக்கசாதி 44 பேரை உயிரோடு கொளுத்தியது. ஒருவேளை 1938ல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் முன்மொழிந்த மசோதாவில் ஒரு கோரிக்கையான விவசாயிகளுக்காக அடிப்படைக்கூலி எனும் அம்சம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அதன் தொடர்ச்சியாக நாடு முழுதும் அது எதிரொலித்து பொது சட்டமாகவே சுதந்திர இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கலாம். அரை மரைக்காய் உயர்வுக்காக போராடவேண்டிய தேவை இருந்திருக்காது. 44 உயிர்கள் கொல்லப்பட்டிருக்காது. இதில் வரலாற்று முரண் எதுவென்றால் கீழ்வெண்மணி போராட்டத்தை முன்னின்று நடத்தியது இடதுசாரி அமைப்பு. ஆனால் 1937-38களில் சட்டமன்றத்தில் கோத்தி முறைக்கெதிரான மசோதாவை சோசலிஸ்டுகள் ஆதரிக்கவில்லை. இதை ஒரு கூட்டத்தில் "ஜமீன்தாரி முறை ஒழிய வேண்டும் என்று வெளியே பேசும் சோசலிஸ்டுகள் சட்டசபையில் அதற்கான தீர்மானத்தை ஆதரிக்காமல் வாயில் கொழுக்கட்டை வைத்துக்கொண்டவர்கள் போல இருக்கின்றனர்" கடுமையாக சாடினார். மேலும் இன்னொரு கூட்டத்தில் பேசும் போது, "ஒரு விவசாயி முதலமைச்சர் பதவியில் அமர்வதைப் பார்க்க ஆசைப்படுகிறேன். வயல்களின் மீது விவசாயிகளுக்கு சிறப்புரிமை தரும் கோத்தி (ஜமீன் தாரி) ஒழிப்பு மசோதா சட்டசபையில் நிறைவேறாமல் போனால் நீங்கள் 'வரிகொடா' இயக்கத்தை தொடங்குங்கள்" என்று ஆலோசனை கூறினார்.
தவறான நிலவரிக்கொள்கை
உலகில் பரந்த விவசாய நிலங்களை கொண்ட நாடு இந்தியா. ஆனால் அதற்கேற்ற அளவில் பெரிய பொருளாதார முன்னேற்றத்தை காண முடியவில்லை. கோத்தி எனும் ஏகபோக தனி நிலவுடைமை சுரண்டல் முறையை ஒருபுறம் எதிர்த்த பாபாசாகேப் அம்பேத்கர் விவசாயம் பொருளாதாரத்தில் ஏன் உயரவில்லை என்னும் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான காரணங்களாக, விவசாயிகளின் மீதான வரியும், நாட்டில் உள்ள சிதறுண்ட நிலங்களும் என்பதை கண்டறிகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சி நிர்ணயித்த நிலவரி முறை மோசமானது என பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் கூறினார். அவர்களின் வரிக்கொள்கை நீதியற்ற முறையில் உள்ளதெனவும் வறுமையில் வாடும் மக்களை மேலும் வதைக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார். நிலங்களின் பரப்பளவை வைத்து வரியை தீர்மானிக்கும் முறை தவறானது என்றும், நிலங்களில் உற்பத்தியாகும் உற்பத்தி பொருட்களின் அளவை வைத்தே வரியை தீர்மானிக்கவேண்டும் அதில் உள்ள நுட்பமான வரி முறைகேட்டை சாடினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட இதே தவறான வரி தீர்மானிப்பு முறையில் பல மாநில அரசுகள் விவசாயிகளிடத்தில் வரியை பெற்று வந்தன.
சிதறுண்ட துண்டு நிலங்கள்
அடுத்து நாட்டில் உள்ள துண்டு நிலங்கள் தான் விவசாய பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய தீங்காக உள்ளதாக 'இந்தியாவில் நிலவுடைமைகளும், அதற்கான தீர்வுகளும்' எனும் அறிக்கையில் குறிப்பிடுகிறார். இவர் தான் முதன்முதலில் இந்தியாவில் உள்ள துண்டு நிலங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு ஒருபுறம் பாரமாகவும், இன்னொரு புறம் விவசாயத்துக்கும் பொருளாதாரத்துக்கும் தீங்கு ஏற்படுத்துகிறது என்பதையும் அறிவியலோடு வரையறைத்தார். இதற்காக அவர் முன்வைத்த திட்டம் தான் நில ஒருங்கிணைப்பு (Consolidation). நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களை பெற்று கூட்டுப்பண்ணையை விரிவாக்கம் செய்வது (Enlargement), அதாவது அனைத்து நிலங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதுவும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கூட்டுறவு சங்கம் போல் செயல்படும் அமைப்பின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது. இப்படி நிலங்களை அரசு கையகப்படுத்தி கூட்டுறவு சங்கங்களின் மூலம் நிலத்தை பொதுவுடைமையாக்கி கூட்டு பண்ணை முறை விவசாயத்தை உள்ளடக்கி அவர் முன்வைத்த திட்டம் மிகவும் புரட்சிகரமானது. அது தான் 'அரசு சோசலிசம்' (State Socialism). இத்திட்டத்தின்படி இடைத்தரகர் என யாரும் இருக்கமாட்டார்கள். அரசு தான் நிலங்களின் உரிமையாளர். விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிலங்களில் பயிரிட்டு தொழிலாளர்கள் போல பணிபுரிவார்கள். நிலங்களை மட்டும் அரசு கொடுத்தால் போதாது. அவர்களுக்கான இதர விவசாய மூலப்பொருட்களையும் அரசு வழங்கவேண்டும். இப்படி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் விவசாயம் தொழில்துறை போன்று இயங்குகிறது. இத்திட்டத்தின் படி, நிலங்கள் வரையறை செய்யப்பட்டு தனிக்கணக்கு எண் கொடுக்கப்படும். ஒரு நபர் நில உடைமை விதியை ஏற்றுக்கொண்ட பிறகு, அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுள்ள நிலத்திற்கேற்ப இந்த கணக்கெடுப்பு எண் அந்த விதியை ஏற்றுக்கொண்ட நபரின் பெயரில் பதிவு செய்யப்படும். அவர் கண்டறிந்த இந்த துண்டு நிலங்களின் பிரச்சனை எவ்வளவு பெரிய உண்மை என்பதை இந்திய சுதந்திரத்துக்கு பிறகு நடந்த விவசாய பொருளாதார கணக்கெடுப்பில் பொருளாதார வல்லுனர்கள் நேரடியாக கண்டனர். “உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்” என்னும் முழக்கத்தை விட எல்லா நிலங்களும் அரசுக்கு சொந்தம். விவசாயமும் ஒரு தொழிற்துறை போல் மாற்றவேண்டும் என்கிற நடைமுறை சார்ந்த அணுகுமுறை தான் புரட்சிகரமான ‘அரசு சோசலிசம்’ (State Socialism). ஆனால் அவர் பொதுவுடைமை கொள்கைக்கு எதிராக இருந்தார்போல சித்தரிக்கப்படுகிறார். அவர் தீவிர கம்யூனிச கொள்கையை ஆதரித்தார். ஆனால் அதன் நடைமுறைப்படுத்தும் வழியில் தான் முரண்பட்டார் என்பதை அவரை படிப்பவர்கள் உணர்வார்கள்.
- இல. வேந்தன்
(11-11-2021)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment