Monday, August 30, 2021

ஜெயபிரகாஷின் நூல்கள்

 


ஆய்வு நூல்கள்

1. தமிழும் பிராகிருதமும் – நூல் அறிமுகம்

 


                  இந்தியாவில் தமிழ், பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய நான்கு பழமையான மொழிகள் உள்ளன. இவற்றுள் தமிழ் மொழியோடு பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இச்சூழலில் தமிழ் மொழியையும் பிராகிருத மொழியையும் ஒப்பிட்டு ஆராய்கிறது இந்நூல். இவ்விரண்டு மொழிகளுக்கு இடையே உள்ள மொழி, இலக்கியம், இலக்கணத் தொடர்புகளைக் குறித்து இந்நூல் விரிவாக பேசுகிறது

(இந்நூலைப் பெறுவதற்கான இணைய இணைப்பு https://bit.ly/Tamil_and_Prakrit)



2. தெய்வக்கடிஞை: மணிமேகலை காப்பிய ஒப்பிலக்கியக் கட்டுரைகள்

-       புத்தக அறிமுகம்

 

          ஆய்வாளர் இ. ஜெயபிரகாஷ் எழுதி வெளியிட்டுள்ள தெய்வக்கடிஞை என்ற நூல் இலக்கிய ஒப்பாய்வு சார்ந்த நூலாகும். தமிழில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை காப்பியத்தை இந்திய பௌத்தக் கதையாடல்களோடும் கிழக்காசிய நாடுகளில் உள்ள பௌத்தக் கதையாடல்களோடும் ஒப்பிட்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் உள்ள பத்து ஒப்பிலக்கிய ஆய்வுக் கட்டுரைகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும்.

 

            இந்நூலில் உள்ள முதல் கட்டுரை “பௌத்தம்: மணிமேகலை, குவானியின் ஓர் ஒப்பாய்வு” ஆகும். மணிமேகலை கதாப்பாத்திரத்திற்கும் சீனாவில் வழிபடப்படும் குவானியின் (குவானியின் புத்தா) என்ற பெண் தெய்வத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆராய்கிறது. குவானியின் பற்றிய கதை மணிமேகலையோடு பெருமளவில் ஒத்துப்போவதை இவ்வாய்வுக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.



 

            இந்நூலில் உள்ள இரண்டாவது கட்டுரை “குவானியின் கதையாடலும் பண்டிதர் அயோத்திதாசரின் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறும்” ஆகும். தமிழ்ப் பௌத்தப் பிக்குணியான மணிமேகலையுடன் சீனப்பௌத்தப் பிக்குணியான குவானியின் கதை ஒற்றுமையுடன் விளங்குவதை கண்டறிந்த இந்நூலாசிரியர் பண்டிதர் அயோத்திதாசர் எழுதிய ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு குவானியினுக்கும் தமிழ்ப் பௌத்த பிக்குணி அம்பிகை அம்மனுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஆராய்ந்து வெளிப்படுத்தினார். பண்டிதர் அயோத்திதாசரின் பிரதி ஒன்று உலக நாடுகளின் கதையாடலோடு அல்லது குறிப்பாக சீனப் பௌத்தக் கதையாடலோடு ஒப்பிட்டு ஆராயப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த வகையின் இவ்வாய்வுக் கட்டுரை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

 

            இந்நூலில் “பௌத்தப்பிரதி தாமரை சூத்ராவும் தமிழ்ப்பௌத்தக் காப்பியங்களும்” என்ற கட்டுரை மூன்றாவதாக அமைந்துள்ளது. இந்திய பௌத்தப் பிரதியான தாமரை சூத்ராவுடன் (கமல சூத்ரா) மணிமேகலை முதலிய காப்பியங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. தமிழியல் ஆய்வு வரலாற்றில் மணிமேகலையுடன் தாமரை சூத்ரா ஒப்பிடப்பட்டது  இதுவே முதல் முறை என்றாலும், குவானியினை மணிமேகலையுடன் ஒப்பிட்டதன் விளைவாக தாமரை சூத்ராவை மணிமேகலையுடன் ஒப்பிட நேர்ந்தது. எனவே இக்கட்டுரை மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ளது.

 

             “மணிமேகலை, மியோசான் கதையாடல்கள்” இந்நூலில் அமைந்துள்ள நான்காவது கட்டுரையாகும். மியோசான் என்ற பௌத்தப் பெண் தெய்வம் கிழக்காசிய நாடுகளில் குவானியினைப் போலவே வழங்கிவரும் ஒரு பௌத்தத் தெய்வமாகும். குவானியின் சீனாவின் நாட்டார் கதையாடலில் வேர்கொண்ட மியோசான் கதையை உள்வாங்கி குவானியினே மியோசானாகவும் மியோசானே குவானியினாகவும் அறியப்படுகிறது. எனவே, மணிமேகலையுடன் குவானியினை ஒப்பிட்டு ஆராய்ந்ததன் விளைவாக மியோசானுக்கு வழங்கப்படும் தனித்த கதையாடலை மணிமேகலையுடன் ஒப்பிட்டு இவ்வாய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.

 

             “தமிழில் மணிமேகலையும் ஜப்பானிய கொஞ்சகு மோனோகதரியும்” என்ற கட்டுரை மணிமேகலையுடன் ஜப்பானின் இடைக்கால வரலாற்றில் தோன்றிய கொஞ்சகு மோனோகதரி ஷு என்ற நூலில் உள்ள குரு தோகா என்ற கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் மணிமேகலைக்கும் குரு தோகாவுக்கும் (பௌத்தப் பிக்கு) இடையே உள்ள ஒப்புமைகள் ஆராயப்பட்டதோடு மட்டும் இல்லாமல் பௌத்தப் பின்னணியில் ஜப்பான் நாட்டுப்புற தெய்வமும் தமிழக நாட்டுப்புறத் தெய்வங்களும் பௌத்தத்தின் பின்புலத்தில் அமைவதை ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.

 

             “கந்தவ்யூகமும் மணிமேகலையும்” என்ற கட்டுரை மத்திய ஆசியாவோடும் இந்தியாவோடும் தொடர்புடைய கந்தவ்யூகம் என்ற பௌத்தப் பிரதியை மணிமேகலையுடன் ஒப்பிட்டு அமைந்த ஆய்வுக் கட்டுரையாகும். இவ்விரண்டு நூல்களையும் முதன் முதலில் ஒப்பிட்டு ஆராய்ந்தவர் டாக்டர் ஷு ஹிகோசாகா என்ற ஜப்பானிய பௌத்த அறிஞர் ஆவார். இது தமிழ்ச் சமூகத்தில் பெருமளவில் கவனப்படுத்தப்படாத சூழலில் டாக்டர் ஹிகோசாகாவின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு விளக்கமுறை ஆய்வுடன் கந்தவ்யூகத்திற்கும் மணிமேகலைக்கும் இடையே உள்ள தொடர்பை இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

 

1.    பண்டிதர் அயோத்திதாசரின் ஆதிவேதமும் சாத்தனாரின் மணிமேகலையும்

2.    தமிழ்ப் பௌத்தத்தில் பிரம்மநிலை: சாத்தனாரின் மணிமேகலையும் பண்டிதர் அயோத்திதாசரின் ஆதிவேதமும்

3.    விசாகா வரலாறும் கதையாடலும்: பண்டிதரின் வரலாற்று எழுதியலும் சாத்தனாரின் புனைவின் படைப்பாக்கத் திறனும்

 

            ஆகிய மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் பண்டிதர் அயோத்திதாசரின் ஆதிவேதம் என்கிற நூலையும் மணிமேகலையும் ஒப்பிட்டு ஆராயப்பட்ட கட்டுரைகளாகும். குவானியின் கதையாடலும் பண்டிதர் அயோத்திதாசரின் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறும் என்ற ஆய்வுக் கட்டுரையிலேயே மணிமேகலை காப்பியத்திற்கும் ஸ்ரீ அம்பிகையம்மனுக்கும் உள்ள ஒற்றுமை ஆராயப்பட்டுள்ளது. இந்நிலையில் பண்டிதர் அயோத்திதாசரின் இரண்டு நூல்களை உள்ளூர் காப்பியத்தோடும் கிழக்காசிய பௌத்தக் கதையாடலோடும் விரிவாக ஒப்பிட்ட சிறப்புத் தன்மையை இவ்வாய்வுக் கட்டுரைகள் பெறுகின்றன.

 

           “மணிமேகலை உருவாக்கப் பின்புலத்தில் பௌத்தக் கதையாடல்கள்” என்ற ஆய்வுக் கட்டுரை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தரவுகளுடன் புதிய ஒப்பீடுகளுடன் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். இவ்வாறு பல்வேறு அம்சங்களில் இந்நூல் ஒப்பாய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் அவர்களால் தமிழ்ச்சமூகத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு சிறந்த நூலாக விளங்குகிறது.

 

(இந்நூலினைப் பெறுவதற்கான இணைப்பு https://bit.ly/Deiva_kadinjai )



3. தமிழ் என்னும் பௌத்தம் – நூல் அறிமுகம்

               தமிழ் நிலப்பரப்பிற்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்நூலில் சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கீழடி ஆய்வு தொடங்கியபோது “கீழடி மனித உருவமும் சாத்துக்கூடல் வீரனாரும்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை இந்நூலில் இடம்பெற்றிருப்பது சிறப்பானதாகும். மேலும், இக்கட்டுரை சென்னை இலயோலா கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

 


                  அம்மன் தெய்வமும் பௌத்த வழிபாட்டு மரபும் என்ற கட்டுரை பண்டிதர் அயோத்திதாசரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் அம்மன் தெய்வ வழிபாடு பௌத்த மரபோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதை கள ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறது. காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நூறாண்டுக்கும் முன்பாக பௌத்தக் கோயில் என்று நிறுவப்பட்டுள்ளது. இதற்கு வலிமை சேர்க்கும் வகையில் மொழியியல் ரீதியாக இக்கோயில் பௌத்தக் கோயில் என்று இவ்வாய்வுக் கட்டுரை நிறுவுகிறது. இக்கட்டுரை தலித் இதழில் வெளியான கட்டுரையாகும்.

 

                  தமிழகத்தில் இந்துத்துவ வெளிப்பாட்டுடன் முருகன் தெய்வத்தை முன்னிறுத்தி பா.ஜ.க. வேல் யாத்திரையை நடத்தியது. இச்சூழலில், இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் முருகக் கடவுள் பௌத்தப் பண்பாட்டு மரபைச் சார்ந்தவர் என்பதை பண்டிதர் அயோத்திதாசரின் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “தமிழ்ப் பௌத்தப் பண்பாட்டில் முருகக் கடவுள்” என்ற கட்டுரை மானுடம் இதழில் வெளியானது.

 

                  திருச்சிராப்பள்ளி பெயர் கூறும் பௌத்த வரலாறு என்ற கட்டுரை அவ்வப்பொழுது முகநூலில் எழுதி வந்த சிறுசிறு பதிவுகளைத் தொகுத்து எழுதப்பட்ட கட்டுரையாகும். இவ்வூர்ப் பெயருக்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

                  திருநெல்வேலியின் பண்டைய ஊர்ப்பெயரும் பௌத்த அடையாளமும் என்ற கட்டுரை இவ்வூரின் பண்டைய பெயர் பௌத்தத்தோடு தொடர்புடையது என்பதை விளக்க, பல சான்றுகளை முன்வைத்து சூழல்களையும் விளக்குகிறது.

 

                  பூலோகவியாஸன் இதழும் பௌத்தமும் என்ற கட்டுரை பேரா. ஜெ. பாலசுப்பிரமணியம் அவர்கள் தொகுத்தளித்த இதழ் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய பார்வையுடன் இவ்விதழுக்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. இச்சிறு நூலை வாசிக்கும்போது தமிழ் நிலத்திற்கும் தமிழ் மொழிக்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவைப் புரிந்துகொள்ளலாம்.

 

          (இந்நூலை பெறுவதற்கான இணைய இணைப்பு https://bit.ly/Tamil_ennum_Bauddham )

-        

மொழிபெயர்ப்பு நூல்கள்

4. கேரளாவில் பௌத்தம் – நூல் அறிமுகம்

 

பி.சி. அலெக்ஸாண்டர் அவர்கள் 1949ஆம் ஆண்டு Buddhism in Kerala என்ற புத்தகத்தை வெளியிட்டார். நவீன காலத்தில் உருவாகி வந்த தரவுகளைப் பயன்படுத்தி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகால கேரளாவின் பௌத்த வரலாற்றை ஆராய்ந்து பி.சி. அலெக்ஸாண்டர் இந்நூலில் தந்துள்ளார். இந்நூலினை ஆய்வாளர் இ. ஜெயபிரகாஷ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

 

                  இந்நூலில் அமைந்துள்ள இயல்கள் / தலைப்புகளைக் கவனித்தாலே இப்புத்தகம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது. தலைப்புகள் மட்டும் அல்லாமல் இந்நூலுக்குள் பேசப்படும் பொருண்மைகளும் மிகவும் கவனிக்கத்தக்கவையாகும். இந்நூலில் அமைந்துள்ள தலைப்புகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

 


1.    கிறித்தவத்திற்கு முந்தைய நூற்றாண்டுகளில் கேரளாவில் பௌத்தத்தின் பரவல்

2.    கிறித்தவத்தின் தொடக்ககால நூற்றாண்டுகளில் கேரளாவில் பௌத்தத்தின் பரவல்

3.    புத்தராக மாறிய பெருமாள்

4.    திருவிதாங்கூரில் பௌத்த அடிச்சுவடுகள்

5.    ஸ்ரீமூலவாசம் – பண்டைய கேரளாவில் புகழ்வாய்ந்த பௌத்த மையம்

6.    கேரள பௌத்தத்தில் சீனப்பயணிகள்

7.    கேரளாவில் பௌத்தமும் சாஸ்தா வழிபாடும்

8.    கேரளாவின் ஈழவர்களும் பௌத்தமும்

9.    கேரளாவில் பௌத்தமும் பிராமணீயமும்

10. கேரளாவில் பௌத்தத்தின் தாக்கம்

11. கேரளாவில் பௌத்தத்தின் வீழ்ச்சி

12. பண்டைய கேரளாவில் அரசியல் நிலைகள்


(இந்நூலினைப் பெறுவதற்கான இணைப்பு https://bit.ly/Buddhism_in_Kerala)

 

 

5. கர்நாடகாவில் பௌத்தம் – நூல் அறிமுகம்




 

ஆர்.சி. ஹிரேமத் அவர்களால் எழுதப்பட்ட Buddhism in Karnataka என்ற புத்தகத்தை ஆய்வாளர் இ. ஜெயபிரகாஷ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் கர்நாடகாவின் பண்டைய கால பௌத்த வரலாற்றை ஆராய்ந்துள்ளது. மேலும், இந்நூல் கன்னட மொழியில் உள்ள பண்டையகால, இடைக்கால மற்றும் நவீன கால பௌத்த இலக்கியங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளது. கர்நாடக பௌத்த வரலாறு, கன்னட பௌத்த இலக்கியம் என்கிற அளவில் இப்புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

(இந்நூலினைப் பெறுவதற்கான இணைப்பு https://bit.ly/Buddhism_in_karnataka )


விமர்சனக் கட்டுரை

 5. பாரதியின் துளஸீபாயி சரித்திரம் - வரலாற்றுப் பார்வையில் விமர்சனம்



பாரதியின் முதல் சிறுகதை துளஸீபாயி சரித்திரம். இக்கதையை வரலாற்றுப் பூர்வமாக அணுகுகிறது இவ்விமர்சனக் கட்டுரை.

(இவ்விமர்சனக் கட்டுரையைப் பெறுவதற்கான இணைப்பு https://bit.ly/Bharathi_story )



இ. ஜெயபிரகாஷ்

Email: writerjayaprakash@gmail.com

 

 


                 

 


 

No comments:

Post a Comment